logo

E   |   සි   |  

2019-12-03

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் உடன் எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

 

1947 ஆம் ஆண்டு முதல் 50க்கும் மேற்பட்ட தடவைகள் பாராளுமன்றக்  கூட்டத்தொடர்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 1978ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் மாத்திரம் 25 தடவைகளுக்கு மேல் பாராளுமன்றக் கூட்டத் தொடர்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

 

பாராளுமன்றக் கூட்டத் தொடர்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பங்களில் சபாநாயகர் தொடர்ந்தும் அப்பதவியை வகிப்பதுடன், ஒரு பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறுத்தப்படுகின்றபோது நிலுவையிலுள்ள பாராளுமன்ற அலுவல்கள் முடிவுறுத்தப்படுவதில்லை. எனவே, புதிய அமர்வு துவங்கப்பட்ட பின்னர், நிலுவையிலுள்ள அலுவல்களைத் தொடரலாம்.

 

ஒரு புதிய அமர்வின் தொடக்கத்தில் தெரிவுக் குழு மறுசீரமைக்கப்பட வேண்டும். உயர் பதவிகளின் குழு பாராளுமன்ற கூட்டத்தொடர் அழைக்கப்படும்போது தொடர்ந்து செயல்படத் தொடங்கும். மற்றைய அனைத்துக் குழுக்களும் குறித்த கால இடைவேளையின் போது செயல்படத் தொடங்கி ஒவ்வொரு புதிய அமர்வு ஆரம்பத்திலும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

 

ஒரு கூட்டத்தொடர் முடிவின்பின்னர் புதிய அமர்வு தொடங்குகின்றபொழுது அதனை ஜனாதிபதி சம்ரதாய பூர்வமாக ஆரம்பித்துவைப்பார். பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்குவதற்கும் மற்றும் தலைமை தாங்குவதற்கும் அரசாங்கக் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதற்கும் அவர் அரசியலமைப்பின் கீழ் அதிகாரம் அளிக்கப்படுகிறார். கடந்த காலத்தில் இது அக்கிராசன பிரகடனம் என அழைக்கப்பட்டது. தற்பொழுது கொள்கைப் பிரகடன உரை விவாதத்துக்கோ அல்லது வாக்கெடுப்புக்கோ விடப்படுவதில்லை.

 

எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் நேற்று (02) முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோதும், பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுக்களான சபாநாயகரின் தலைமையிலான இலங்கையின் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதி செய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான தெரிவுக்குழு மற்றும் பிரதி சபாநாயகர் தலைமையிலான தேசிய மதிப்பீட்டு ஆற்றல்களை உறுதுpப்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொண்டு அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பன தொடர்ந்தும் செயற்படும்.

 

இவற்றுக்கு மேலதிகமாக உயர் பதவி பற்றிய குழு மற்றும் கீழே குறிப்பிடப்படும் துறைசார் மேற்பார்வைக்குழுக்கள் தொடர்ந்தும் செயற்படும்.

 

அவையாவன, கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு. பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, வலுசக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு, உள்ளக நிர்வாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துரைசார் மேற்பார்வைக்குழு, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, சட்டவிவகாரம் (ஊழலுக்கு எதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு, நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக்கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, இளைஞர், விளையாட்டுத்துறை, கலை, மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு என்பனவாகும்.

 

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு, ஒழுக்கவியல் மற்றுமு; சிறப்புரிமைகள் பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, பின்வரிசை உறுப்பினர் குழு, பொது மனுக்கள் பற்றிய குழு, சபைக்குழு, இணைப்புக்குழு போன்ற குழுக்கள் கலைக்கப்படும்.

 

குழுக்களை நியமிப்பதற்கான அதிகாரம் அரசியல் யாப்பின் 74 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கமைய, பாராளுமன்றமானது அதன் அலுவல், அதன் அமர்வுகளின் போதான ஒழுங்கின் பேணுகை மற்றும் எவ்விடயங்களுக்கு ஏற்பாடுகள் தேவைப்படுகிறதோ அல்லது அவ்வாறு செய்யப்படுவதற்கு அரசியல் யாப்பின் அங்கீகாரம் தேவைப்படுகிறதோ அவ்விடயங்கள் என்பனவற்றை ஒழுங்குபடுத்துமுகமாக நிலையியற் கட்டளைகளை இயற்றுவதற்கு இவ்வுறுப்புரையானது அதிகாரம் அளிக்கிறது. இவ்வுறுப்புரையின் கீழ் இலங்கைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை இயற்றும் போது, வெறிடங்களில் பெறப்பட்ட அனுபவங்களை அனுகூலமாகக் கொண்டு, பல்வேறு பாராளுமன்றக் குழுக்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நிலையியற் கட்டளைகளில் செய்யப்படுகின்றன.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks