01

E   |   සි   |  

அரசியலமைப்பின் 78ஆம் உறுப்புரையின் பிரகாரம், சட்டமூலமானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து 07 நாட்களிற்கு பின்னர் 50(1) ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளிற்கமைய எவரேனும் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முதலாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படும்.

ஆயினும், மாகாண சபை நிரலிலுள்ள விடயத்துடன் தொடர்புபட்ட சட்டமூலமானால், அச்சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னரும், பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்கு முன்னரும் சனாதிபதியால் மாகாண சபைகளிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்.

முதலாம் மதிப்பீட்டின் பின்னர், சட்டமூலம் அச்சிடப்படுவதற்கு கட்டளையிடப்படுவதுடன் அச்சட்டமூலம் பிரேரணை ஏதுமின்றி உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு பரிசீலனைக்காக ஆற்றுப்படுத்தப்படும்.

50(1) மற்றும் 55(1) ஆம் நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளிற்கமைய முதலாம் மதிப்பீட்டிலிருந்து பதின்நான்கு நாட்களிற்கு பின்னர் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படுதல் வேண்டும்.

துறைசார் மேற்பார்வைக் குழுவானது சட்டமூலம் தொடர்பிலான தனது அறிக்கையை இரண்டாம் மதிப்பீட்டுக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வாறாயினும் பின்வரும் சந்தர்ப்பங்களில் இரண்டாம் மதிப்பீடு முதலாம் மதிப்பீட்டுத் திகதியிலிருந்து ஏழு நாட்களுக்குப் பின்னர் நடைபெறாது:

  1. அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் கீழ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் சந்தர்ப்பத்தில், நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட பின்னரே இரண்டாம் மதிப்பீடு இடம்பெறும்.
  2. அரசியலமைப்பின் 154 எ (5) (அ) இன் கீழ் மாகாண சபைகளின் கருத்துகள் பெறப்பட்ட பின்னரே சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இரண்டாம் மதிப்பீட்டின் போது சட்டமூலம் தொடர்பாக விவாதம் நடைபெறும். அதன் முடிவில் வாக்கெடுப்பின் மூலம் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.

57 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் முழுப் பாராளுமன்றக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட சட்டமூலம், 93 முதல் 99 வரை உள்ள நிலையியற் கட்டளைகளின் கீழ் பரிசீலிக்கப்படும்.

திருத்தங்கள் எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கையளிக்கப்பட வேண்டும்.

சட்டமூலம் மூன்றாம் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு 71 மற்றும் 72 நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நிறைவேற்றப்படும்.

மூன்றாம் மதிப்பீட்டிலும் வாக்கெடுப்பு இடம்பெறும்.

74 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகரின் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் சட்டமூலம் சட்டமாக மாறும்.

அரசியலமைப்புத் திருத்தத்திற்கான சட்டமூலங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அல்லது சர்வஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks