பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-05-25
செய்தி வகைகள் : குழு செய்திகள்
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.
தேர்தல் முறைமை தொடர்பான சட்டம், அத்துடன் வாக்காளர்களைப் பதிவுசெய்யும் சட்டம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டம், கடந்த காலங்களில் குறித்த சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இக்குழுவினால் மீளாய்வு செய்யப்படவுள்ளன.
அத்துடன், மேற்கூறிய சட்டங்களைத் திருத்தியமைத்தல், சீரமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் தேவையை மதிப்பிடுவதும், தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களையும் திருத்தங்களையும் பரிந்துரைப்பதும் இந்தக் குழுவின் பணியாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை நடத்துவது அவசியம் எனக் குழு தீர்மானிக்கும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் குழு முன்னிலையில் அழைப்பதற்கும், எந்தவொரு ஆவணம் அல்லது அறிக்கையை சமர்ப்பிக்கக் கோருவதற்கும், குழு அவசியமெனக் கருதும் எழுத்துபூர்வமான அல்லது வாய்மொழியான அனைத்துச் சான்றுகளைப் பெறுவதற்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அதேநேரம், குழுவின் பணிகளுக்கு உதவுவதற்காக, தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்கள் மற்றும் வல்லுநர்களின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவும், இந்த மதிப்பாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் ஏகமனதாக இணங்கினர்.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜே.சீ.அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-01
இயலாமையுடைய நபர்களுக்கான விசேட கல்வி மற்றும் விசேட பாடசாலைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் இத்துறையில் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இது பற்றிய இடம்பெற்றதுடன், இதில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரத் ஆனந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறையின் போது விசேட கல்வித் துறையும் பிரதான அங்கமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது. இயலாமையுடைய மாணவர்களின் கற்றல் திறன்கள் மற்றும் அவர்களது கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, மேலும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட கல்வி முறைமையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.அத்துடன், விசேட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் நிர்வாக மற்றும் தொழில்சார் பிரச்சினைகள், பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய சவால்கள், பாடத்திட்ட மேம்பாடு, விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்குப் பொருத்தமான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.விசேட கல்விக்கான துறையில் நடைமுறை அனுபவமுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளும் பரிந்துரைகளும் எதிர்கால கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும் போது கருத்திற்கொள்ளப்படும் என தேசிய கல்வி ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.அத்துடன், எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பாக நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்களில் விசேட பாடசாலைகளின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்வதற்கும், இயலாமையுடைய நபர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கல்வி ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் திலக் தர்மரத்ன, கல்வி அமைச்சின் முறைசாரா மற்றும் விசேட கல்விப் பிரிவின் அதிகாரிகள், இயலாமையுடைய மாணவர்களுக்கான விசேட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் அப்பாடசாலைகளின் நிர்வாகிககள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-25
அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 23) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பளிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.அமெரிக்க டொலர் மில்லியன் 2.5 காணாமல் போனமை தொடர்பில் கடந்த 08ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் ஆராய்ந்து பார்க்கப்பட்ட பின்னர், அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து, குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.இந்தக் கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் (CERT) அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
2026-06-23
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு, 2021-2023 மூன்றாண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் இத்திணைக்களத்தின் செயலாற்றுகை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்து ஆராயப்பட்டது.பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் சொத்துக்களைப் பெறும் பல்வேறு வழிகள், ஒவ்வொரு சொத்தும் பெறப்பட்ட காலப்பகுதிகள், அச்சொத்துக்கள் யாரால் மாற்றப்பட்டன, அந்த மாற்றத்திற்குப் பொருந்தக்கூடிய நிபந்தனைகள் போன்றவை அடங்கிய ஒரு அறிக்கையை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறு 2024ஆம் ஆண்டு மே மாதம் குழுவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் வினவினார். இதடன் தொடர்புடைய தரவுகள் அடங்கிய அறிக்கை குழுவிற்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திடம் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் சொத்துக்களின் எண்ணிக்கை குறித்த ஒரு அறிக்கையையும் குழுவிற்கு வழங்குமாறு குழு பரிந்துரைத்தது.காலி பத்தேக, சுதுவலிபொத்த பகுதியில் அமைந்துள்ள ஹரி ஹபுகொட பெருந்தோட்டத்திற்குச் சொந்தமான 113 ஏக்கர் காணியை குத்தகைக்கு கேள்விப்பத்திரம் கோரல் குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. மதிப்பிடப்பட்ட பெறுமதியை விட அதிக பெறுமதிக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த நிலத்தின் சில பகுதிகள் பல்வேறு தரப்பினரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதும் இங்கு தெரியவந்தது.ரிச்மண்ட் காசல் கட்டடத்தின் பராமரிப்பு குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஜூலை மாதத்திற்குள் இந்தக் கட்டடடத்தின் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இங்கு காணப்படும் தென்னை விளைச்சல் நன்றாக இருப்பதாகவும், ஆனால் அது முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.இக்குழுக் கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களனா சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, ஒஷானி உமங்கா, சட்டத்தரணி சாகரிக்கா அதாவுட, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரிஆரச்சி, அஜந்த கம்மத்தகே, லால் பிரேம்நாத், ருவன்திலக ஜயக்கொடி மற்றும் சுனில் ரத்னசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-06-23
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில் ஆரம்பப் பாடசாலைகளின் கட்டுமானத்தில் ஒரு தரநிலையின்படி பொதுவான திட்டம் மற்றும் மாதிரிகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம், மாற்றுப் பாடசாலைகளின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள், மாகாண மட்டத்தில் பாடசாலைகளின் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொழிற்கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன. இவ்விடயங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த கௌரவ பிரதமர், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவயைான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தினார்.மேலும், இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட உப குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கேட்டறியப்பட்டது.கௌரவ கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கௌரவ தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவகே, குழுவின் உறுப்பினர்கள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவேவ உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks