பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-02-25
செய்தி வகைகள் : செய்திகள்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஹங்கேரியின் தேசிய சட்டமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா (Dr. Lajos Oláh) அவர்கள் இலங்கை சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை 23.02.2026ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
ஹங்கேரி பிரதி சபாநாயகரை வரவேற்ற இலங்கை சபாநாயகர், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் காணப்படும் வலுவான உறவுகளையும் நினைவுகூர்ந்தார். குறிப்பாக இந்நாட்டின் வீதி அபிவிருத்தி மற்றும் நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள், GSP சலுகை உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச மட்டங்களில் ஹங்கேரி வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
ஊழல் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், முதலீட்டு வாய்ப்புக்களை விஸ்தரிக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் வலியுறுத்தினார். அத்துடன், இலங்கையில் காணப்படும் முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை ஆராய்வதற்கு ஹங்கேரி முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை எடுத்துரைத்த சபாநாயகர், கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் ஹங்கேரியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்த பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – ஹங்கேரி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை வலியுறுத்தினார். இலங்கையின் சுற்றுச்சூழல், இயற்கை அழகு, வளமான கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றையும் அவர் பாராட்டினார்.
திறந்த பாராளுமன்ற முறைமையை மேம்படுத்தல், பொதுமக்களுடனான இணைப்பை வலுப்படுத்தல் மற்றும் அனுபவங்கள், நல்ல நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளல் மற்றும் பாராளுமன்றங்களின் ஆய்வுக்கான திறன்ங்களை மேம்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் “INTER PARES” உலகளாவிய திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஹங்கேரி எதிர்பார்ப்பதாகவும் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவம், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையே நேரடி விமானங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புக்கள் போன்ற விடயங்களையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
ஹங்கேரிக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அவர் இலங்கை சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த விஜயத்தின் போது ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர், இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். சுமுகமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், செயற்கை நுண்ணறிவில் (AI) வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள் மற்றும் சவால்கள், இரு நாடுகளிலும் உள்ள அரசியல் கட்டமைப்புக்கள், மாணவர் பாராளுமன்றம் போன்ற மக்களுடனான இணைப்புக்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
இதேநேரம், ஹங்கேரி தூதுக் குழுவினருக்கும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சருமான (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன மற்றும் இரு குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை திறம்பட எதிர்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், நெறிமுறை தரநிலைகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளை நிறுவுவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் திறன் பரிமாற்றத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா முன்மொழிந்தார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய சவால்களுக்கு பதிலளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல் வலியுறுத்தியது. மேலும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான தொழில்நுட்ப முன்னேற்றத்தை உறுதி செய்யும் அதே வேளையில், புதுமைகளை ஊக்குவிப்பதற்கான ஹங்கேரி மற்றும் இலங்கை இடையேயான பரஸ்பர உறுதிப்பாடும் இங்கு வலியுறுத்தப்பட்டன.
இதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஹங்கேரிக்கான கென்சியூலர் ஷெவந்த ஹரேந்திர சுதாரக மென்டிஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் மரபுகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் ஹங்கேரி தேசிய சட்டமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டார்.
2026-05-06
இலங்கைக்கு முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட மாலைதீவு ஜனாதிபதி கௌரவ (கலாநிதி) முகமது முய்சு அவர்களை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இச்சந்திப்பில் கௌரவ சபாநாயகர், மாலைதீவு ஜனாதிபதியையும், தூதுக் குழுவினரையும் அன்புடன் வரவேற்றார்.இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் காணப்படும் நீண்ட, நெருக்கமான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இவ்விஜயம் அமைந்திருப்பதுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களின் ஊடாக இந்த உறவுகள் மேலும் வலுப்படும் என கௌரவ சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டினார்.இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை நினைவு கூர்ந்த இரு தரப்பினரும், தங்களுக்கிடையிலான வலுவான வரலாற்று, கலாசார மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படுத்தப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாட்டு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான நெருக்கமான ஈடுபாட்டை அதிகரிப்பதில் இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் வகிபாகத்தை கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.இந்தச் சந்திப்பில் பொருளாதார ஒத்துழைப்பு, தேசிய முன்னுரிமைகள், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், செயல்திறன் மற்றும் பொருளாதார நிலைப்புத் தன்மையை மேம்படுத்தும் நோக்கிலான டிஜிட்டல் மாற்றம் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.மாலைதீவு மாணவர்கள் இலங்கையில் கல்வி கற்பது, இலங்கையின் விருந்தோம்பல் துறையில் மாலைதீவின் ஒத்துழைப்பு, மாலைத்தீவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு உள்ளிட்ட விடயங்களின் ஊடாக இரு நாட்டு மக்களுக்கும் இடையில் வலுவான உறவுகள் காணப்படுகின்றமையையும் கௌரவ சபாநாயகர் வலியுறுத்தினார். இலங்கை மீனவர்களை உள்ளடக்கிய கடல்சார் விவகாரங்களைத் தீர்ப்பதில் தொடர்ந்து காணப்படும் ஒத்துழைப்பையும் சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டினார்.இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்திய மாலைதீவு ஜனாதிபதி, இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தினார்.இந்தச் சந்திப்பில் மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ரிஸ்வி ஹசன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்றம், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-05-05
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் நால்வரும் நேற்று (மே 04) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர்.முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி காமினி விஜேசிங்க, முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர் தலைமையதிபதி ஜீ.தேவஞானன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்க சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ரத்ன தேசப்பிரிய ஆகியோர் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இவ்வாறு இரகசியத் தன்மையைப் பேணுவதற்கான சத்தியத்தியம் செய்துகொண்டனர். 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய அல்லது பாராளுமன்றம் உத்தரவிடும் சந்தர்ப்பத்தில் அல்லது 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் (09) (அ) ஆம் பிரிவு ஆகிய எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலே தவிர, கணக்காய்வு தொடர்பான தகவல்களை அரசாங்க அல்லது தனியார் துறையில் உள்ள எந்தவொரு நபருக்கும், எந்தவொரு முறையிலும் வெளிப்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை அல்லது வெளிப்படுத்தல்களை மேற்கொள்ள மாட்டோம் என இரகசிய தன்மையைப் பேணுவதற்கான சத்தியம் செய்யப்பட்டது.கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும், கணக்காய்வு தலைமையதிபதியுமான சமுதிகா ஜயரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இதன்போது இணைந்துகொண்டனர்.
2026-04-29
கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் (ஏப். 27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே, பாராளுமன்றத்தின் ஹன்சாட் பதிப்பாசிரியர் நயனி லொக்குகொடிகார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கு அமைய கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்திற்குப் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ சபாநாயகர், பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இவ்வாறு சின்னம் அணிவிக்கப்பட்டதுடன், சான்றிதழ்களும் கையளிக்கப்பட்டன.இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே நாட்டில் சட்டத்தை சமமாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் ஜனாதிபதி நியத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், ஹன்சாட் பதிப்பாசிரியர் நயனி லொக்குகொடிகார, மாணவர் பாராளுமன்றத்தின் மதிப்பு குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்ததோடு, நாட்டில் அரசியல் அறிவை மேம்படுத்துவதில் மாணவர் பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள், கடவத்தை மகாமாய மகளிர் கல்லூரியின் அதிபர், பிரதியதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
2026-04-28
பாராளுமன்றம் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடும் – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்வியட்னாம் நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு டோ லாம் அவர்கள் எதிர்வரும் மே 08ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதாகவும், இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (ஏப். 27) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடவுள்ளது.2026 மே 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள் (2471/52, 2471/53, 2471/54, 2471/55 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2475/28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) என்பன விவாதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படவுள்ளன. பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக (எதிர்க்கட்சி) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மே 6ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன. மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நுரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மே 7ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மு.ப 11.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2471/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது), (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2470/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது) மற்றும் (351ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (2026.05.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது) என்பவற்றை விவாதத்திற்கு எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சுவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பன தொடர்பான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மே 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.05 மணியளவில் வியட்னாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதிமேதகு டோ லாம் அவர்கள் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்றையதினம் பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை கீழ்வரும் 07 தனியார் பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்தனியார் உறுப்பினர் பிரேரணைஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்கள்தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்.சமிந்த விஜேசிறி அவர்கள்வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்.ரவி கருணாநாயக்க அவர்கள்புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்.லால் பிரேமநாத் அவர்கள்அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.ரோஹண பண்டார அவர்கள்பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்.நலின் பண்டார ஜயமஹ அவர்கள்பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்.ரவீந்திர பண்டார அவர்கள்பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks