பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-02-13
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.
இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.
மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்விமனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது.
அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, லசித் பாஷன கமகே, சதுர கலப்பத்தி, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ருவன் விஜேவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-02-13
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் 2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிற்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பெறப்பட்டன.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்றும், இதற்குப் பதிலாக பிறிதொரு உறுப்பினர் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்றும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட முன்னர் குழுவின் தலைவர் இங்கு அறிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், (வைத்தியர்) நஜீத் இந்திக மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-02-13
தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (பெப். 06) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வர்ணகுலசூரிய பீட்டர் ரொஹான் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அனுர விதானகே மற்றும் பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட முகமது பாரூக் முகமது ஃபவுசர் ஆகியோரின் பரிந்துரைகள் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்டன.
2026-02-12
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக அவர்களின் தலைமையில் அண்மையில்(11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சட்டமூலத்தின் 3 ஆம் பிரிவிற்கு அமைய, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்துக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடைய மற்றும் ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்கின்ற எவரேனும் ஆளுக்கு இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்திலும் அதன் பின்னரும் அத்தகைய ஓய்வூதியம் நிறுத்தப்படும்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரிஆராச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜே.டி. சூரியபண்டார ஆகியோர் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துகொண்டனர்.
2026-02-11
அரசியலமைப்பின் 154ண (4)(அ) யாப்புக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்திலிருந்து மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்குவது குறித்து நிதி ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை செய்யப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலிண சமரகோன் மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோரின் பங்குபற்றலில் 2026.02.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூடிய போதே இது தொடர்பில் ஆராயப்பட்டது.நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களினால் 2026 ஆம் ஆண்டிற்கான மாகாண மூலதன மற்றும் மீண்டெழும் செலவினத் தேவைகளை மதிப்பீடு செய்வது குறித்து குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது. மாகாண கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பெருமளவிலான பாடசாலைகள் மாகாண சபைகளின் கீழ் உள்ளதால், அதற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அத்துடன், மாகாண சபைகளின் மூலதனச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை நிலவுவதாக நிதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியதுடன், பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செலவினங்கள் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அந்தப் பற்றாக்குறையை முடிந்தவரை ஈடுசெய்ய முயற்சிப்பதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன், பிரதேச சபைகளைப் பராமரிப்பதற்குத் தேவையான நிதி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்கத்தில் போதிய மதிப்பீட்டு அதிகாரிகள் இல்லை என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பீட்டு அதிகாரிகளைப் பதவிக்கு அமர்த்துவதற்கும், மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுத்தால், அதற்காக மேலதிக நிதி தேவைப்படலாம் என நிதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. மேலும், மாகாண சபைகளின் வருமானம் ஈட்டுதல் மற்றும் அந்த வருமானத்தைச் செலவிடுதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த அறிக்கை மீதான பரிசீலனையை நிறைவு செய்த குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, இந்தக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks