பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-12-16
செய்தி வகைகள் : குழு செய்திகள்
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாகச் சீரமைக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய புனரமைப்புப் பணிகளுடன் சேர்த்து, அதற்காக சுமார் 190 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவும் அனர்த்தத்தின் தன்மையை ஆய்வு செய்வதற்கும், அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (டிச. 11) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், இந்த அனர்த்த நிலைமையினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள 316 வீதிகளுக்கும் 40 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினர். இருப்பினும், இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், புகையிரதப் பாதைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதேச வீதிகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். பிரதேச வீதிகளை மீண்டும் சீரமைக்கும் போது அதற்கான நிதியைப் பெறுவதற்கு அமைச்சின் தலைமையில் ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் இங்கு வலியுறுத்தினார். அதற்கமைய, தற்போது உலக வங்கி மூலம் 2 பில்லியன் ரூபா கடனாகப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் பல நிறுவனங்களிடமிருந்து இந்த புனரமைப்புகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
அத்துடன், இந்த அனர்த்த நிலைமையினால் இலங்கை மின்சார சபைக்குச் சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உலக வங்கியிடமிருந்து இதற்காக ஒரு கடன் தொகையைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், அந்தத் தொகையை கடனாகப் பெறாமல், ஒரு மானியமாகப் பெற முயற்சிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கடன் தொகையாக அந்த நிதியைப் பெறுவதன் மூலம் பாவனையாளர்களின் மின்சாரக் கட்டணத்தில் ஒரு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்தத் தொகையை மானியமாகப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்துக்கும் இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 252 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அந்தத் திருத்தப் பணிகளுக்குச் செலவிடப்படும் தொகையை அவர்களுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மீட்டெடுக்க முடியும் என்பதால், மேலதிக கடன் அல்லது மானியம் எதுவும் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவில் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவுவில் தெரிவித்தனர். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 156 நீர் வழங்கல் திட்டங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவை அனைத்தும் பராமரிப்பு செய்யப்பட்டு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குழுவில் தெரிவித்தார். அத்துடன், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் மானியமாகப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் குழுவில் தெரிவித்தார்.
அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது அதற்குத் தேவையான ஆதரவை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார ஜயமஹ, அஜித் பி. பெரேரா மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோரும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
2026-01-09
தகவல் தொழில்நுட்ப (IT) அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து குழு வலியுறுத்து தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிக்கப்படாமை குறித்து குழு கவனம் செலுத்தியதுதொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் மையமாகக் கொண்ட தரவுத் தளமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.தொல்பொருளியல் திணைக்களத்தின் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அண்மையில் (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழு 2023 ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி கூடியபோது நாட்டில் உள்ள அனைத்து தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்கள், அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அவற்றின் வெற்றி தோல்விகள், அகழ்வாராய்ச்சிகள் தொடரப்பட வேண்டுமா, எவ்வாறான இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற விடயங்களை ஒரு தரவுத்தளத்தில் உள்ளீடு செய்து அதனைப் பராமரிக்க வேண்டும் என்ற பரிந்துரை வழங்கப்பட்டமை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பான தற்போதைய முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லையென்றும், அகழ்வாராய்ச்சிகளுக்கு அனுமதிகளை வழங்குவது தொடர்பான தரவுத்தளம் மாத்திரமே பராமரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.மையப்படுத்தப்பட்ட தரவுத் தளமொன்றைத் தயாரித்து பராமரிப்பது முக்கியமானது என்றும், தேவைப்படும் பட்சத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், குறித்த திணைக்களத்திற்கு மேலதிகமான தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பன்னிரண்டு தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நிர்வாக சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ள போதும், தற்பொழுது ஒரு அதிகாரியே பணியில் இருப்பதாகவும், அவர் தலைமையகத்திற்கு இணைக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலவும் வெற்றிடங்களுக்குத் தேவையான அதிகாரிகளை விரைவில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு அறிவுறுத்தியது.தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் குறித்த அனைத்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளக் கட்டமைப்பொன்றுக்கான முன்மொழிவை மூன்று மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிக்கப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. குறிப்பாக, தொல்பொருளியல் திணைக்களத்தின் இணையதளத்தைப் புதுப்பிப்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மிகவும் முக்கியமானது என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இணையத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் குழு வலியுறுத்தியது.அதேநேரம், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் தளங்களில் 48% வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத தகவல்கள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.உலக மரபுரிமைகளாகப் பெயரிடுவதற்கு யுனெஸ்கோவினால் முன்மொழியப்படவிருக்கும் தளங்கள் மற்றும் அவை தொடர்பான வரைபுகள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சுகத் திலகரத்ன, அரவிந்த செனரத், நளின் ஹேவகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, (மருத்துவர்) ஜனக சேனாரத்ன, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுட, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, லால் பிரேம்நாத், மஞ்சுள சூரியாராச்சி, ருவன்திலக ஜயகொடி மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-08
டித்வா காரணமாகப் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்காக 25 மில்லியன் ரூபா தொழிற்படு மூலதனக் கடன், முதலீட்டுத் திட்டம் மற்றும் 5 வீத வட்டியில் 25 மில்லியன் ரூபா கடன் திட்டம் - நிதி அமைச்சின் செயலாளர்நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (ஜன. 07) கௌரவ ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு நிதி வழங்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்காகப் பல்வேறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 25 மில்லியன் ரூபா தொழிற்படு மூலதனக் கடன், முதலீட்டுத் திட்டம் மற்றும் 5 வீத வட்டியில் 25 மில்லியன் ரூபா கடன் திட்டம் ஆகியவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்தார்.மேலும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு ஏற்கனவே ஒரு பில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் இன்னும் முறையாகப் பயன்படுத்தப்படாமை குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.மேலதிக நிதியை வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதற்கு முன்னதாக, ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிதியை முறையாகப் பயன்படுத்துவதற்கான முறையான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் அமைச்சுக்கு அறிவுறுத்தினார்.அத்துடன், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் ஒவ்வொரு வணிகத்தையும் பதிவு செய்வதற்கான பொறிமுறையின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து வர்த்தகச் சமூகத்தினருக்குத் தெளிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.அதற்கமைய, கடந்த அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.அதேபோன்று, அனர்த்தத்தினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-01-08
நாளை (ஜன. 09) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. தொழில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் தலைமையில் மற்றும் தொழில் கௌரவ பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் 2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.தொழில் அமைச்சரினால் 2025.12.12 ஆம் திகதி ஆக்கப்பட்ட இந்த ஒழுங்குவிதி 2025.12.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. "ஏதேனும் வதிவிட வசதியுள்ள ஹோட்டலில் விருந்தினர்களை வரவேற்கும் பெண், பெண்கள் உடை அறை பணியாளர், பெண்கள் ஆடை விற்பனை நிலைய பணியாளர் அல்லது பெண்கள் தூய்மை பணிப்பெண் ஆகிய பதவிகளில், 18 வயது பூர்த்தியடைந்த எந்தப் பெண்ணையும் காலை 6.00 மணிக்கு முன்பும் மலை 6.00 மணிக்குப் பிறகும் பணியில் ஈடுபடுத்தலாம்", எனும் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் இந்த ஒழுங்குவிதி மூலம் திருத்தப்படுகின்றது. அதற்கமைய, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக, ‘வதிவிட வசதியுள்ள ஹோட்டல்களில் உணவு மற்றும் பான வரவேற்பாளர்’ (Food and Beverage Stewardess) பணிகளில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் மாலை 6.00 மணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் காலை 6.00 மணிக்கு முன்னரோ பணியில் ஈடுபடுத்தத் தேவையான சட்டத் திருத்தங்கள் இந்த ஒழுங்குவிதி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், இந்த ஒழுங்குவிதியின் கீழ் 'ஏதேனும் ஒரு பெண் பணியாளரின் பணி நேரம் மாலை 6.00 மணிக்கும் மறுநாள் காலை 6.00 மணிக்குமிடையிலான ஒரு நேரத்தில் முடிவடையும் போது, அந்தப் பணி முடிந்த நேரத்திலிருந்து காலை 6.00 மணி வரை அவருக்குப் பொருத்தமான தங்குமிடத்தை வழங்குவது அல்லது அவரது வழக்கமான வசிப்பிடத்திற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவது உள்ளிட்ட அந்தப் பெண்ணின் சுகாதாரக்கவனிப்பு மற்றும் நலன்புரிக்கு தொழில்தருனர் பொறுப்பேற்க வேண்டும்', என்ற சட்ட ஏற்பாடுகள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது குழுவில் தெரிவித்தனர்.இலங்கையின் தற்போதைய பெண்கள் சனத்தொகை விகிதம் 51% ஆக இருந்தாலும், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு 34% ஆகவே உள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக, பெண்களின் தொழில் பங்கேற்புக்கு அதிக வாய்ப்பை வழங்கும் நோக்கில், தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.அத்துடன் பெண் ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பல முன்மொழிவுகளும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயங்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, இது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக கௌரவ தொழில் அமைச்சர் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-01-08
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.கடந்த குழுக் கூட்டங்களில் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, பாடசாலைகளை நடத்திச் செல்வது போன்ற பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை கௌரவ ஜனாதிபதி வழங்கினார். மேலும், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காணப்படும் தடைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.அத்துடன், பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு மேலதிகமானவர்களை அனுப்புவது போன்ற விடயங்கள் குறித்தும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks