பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-12-02
செய்தி வகைகள் : செய்திகள்
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 27) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், கௌரவ ஸன்டெல் எட்வின் ஷால்க் (H.E. Sandile Edwin Schalk) அவர்கள் கௌரவ அதிதியாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
1994 இல் முறையான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் நிறுவப்பட்ட இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயுள்ள நீண்டகால உறவை இரு தரப்பினரும் இங்கு வலியுறுத்தினர். பல்தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர ஆதரவை இரு தரப்பினரும் பாராட்டினர். சுற்றுலா, கல்வி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைகளில் தென்னாப்பிரிக்காவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு முன்னர், தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகர் கௌரவ சபாநாயகரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார். இதன் போது, தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை அவர் பாராட்டியதுடன், தென்னாப்பிரிக்காவின் ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
2025-12-02
இலங்கைப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த 19 வருடங்களாக செயற்பட்டுவரும் நிலையில், இதில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 27) நடைபெற்றது.கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர்.2006ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்திற்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு தடவைகள் புதுப்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் தற்பொழுது மூன்றாவது தடவையும் புதுப்பிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.கௌரவ சபாநாயர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட செயலாளர் குழுவின் வழிகாட்டலில், தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான அனுசரணையுடன், பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் டெக்கீக்ஸ் (தனியார்) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது.புதுப்பிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் பல புதிய அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கியதாகவும், நவீன தேவைகளை இலகுவாகப் பூர்த்திசெய்யக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள " My Parliament " அதாவது "எனது பாராளுமன்றம்" எனும் போர்டலானது ஒவ்வொரு பிரஜையும் பாராளுமன்றத்துடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் நேரடியாக இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் பொதுமக்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றும் அரசாங்கப் பணியாளர்கள் இந்தப் பதிவை மேற்கொண்டு தமது நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.பாராளுமன்றத்தின் இணையத்தளம் அரசாங்கத் துறையில் விருதுகள் பலவற்றைப் பெற்றுக் கொண்ட இணையத்தளமாக விளங்குகிறது. பல ஆண்டுகளாக தேசிய அளவிளான போட்டிகளில் ‘சிறந்த அரசாங்க இணையத்தளம்’ என்ற விருதையும், ‘சிறந்த பன்மொழி இணையத்தளம்’ என்ற விருதையும் பெற்றுள்ளது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கொண்ட பாராளுமன்ற இணையத்தளத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.பி.யூ.நவகமுவ உள்ளிட்ட அத்திணைக்களத்தின் அதிகாரிகள், டெக்கீக்ஸ் (தனியார்) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் கமகே உள்ளிட்ட அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
2025-12-01
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் 12வது நாளான இன்று (டிச. 01) இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ச, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு போன்றவற்றுக்கான ஒதுக்கீடுகள் விவாதம் இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
2025-12-01
டிசம்பர் 03 மற்றும் 05ஆம் திகதிகளில் கூடவும் தீர்மானம்இன்று (01) பாராளுமன்ற அமர்வு மு.ப 11.00 மணியுடன் நிறைவுநாட்டில் தற்பொழுது காணப்படும் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நாளையதினம் (02) பாராளுமன்றத்தைக் கூட்டாதிருப்பதற்கும், நாளைமறுதினம் (03) மற்றும் 5ஆம் திகதி ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (01) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.அத்துடன், இன்று பாராளுமன்ற அமர்வை பி.ப 12.30 மணியுடன் மட்டுப்படுத்தி, அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளை பி.ப 12.30 மணிக்கு நிறைவேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனினும் இது தொடர்பில் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்யுமாறு எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இருந்தபோதும் இன்றையதினம் பாராளுமன்றத்தின் அமர்வுகள் மு.ப 11.00 மணியுடன் முடிவுக்கு வந்ததுடன், டிசம்பர் 03ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
2025-11-28
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக இன்று (28) பாராளுமன்றத்தில் அறிவித்து தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் கையளித்தார்.அதற்கமைய, இன்றைய தினம் முதல் அமுலாகும் வகையில் முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததன் காரணமாக பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்று வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனத்தீர அவர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 64 (5) ஆம் பிரிவுக்கு அமைய இந்த அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக 2024 டிசம்பர் 17 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்ததுடன், முதன்முறையாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பத்தாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks