பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-07-14
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மகாபொல நிதியத்திற்குச் சொந்தமான இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) முழுமையான தனியார் நிறுவனமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்றும், அதனை மகாபொல நிதியத்தினால் நிர்வகிக்கும் நிறுவனமாக மாற்றுவதற்குத் தேவையான சட்டரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அறிவுறுத்தியது.
இதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்கள், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஈ.விமலேந்திர ராஜா மற்றும் மகாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித மலல்கொட ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.
லலித் அத்துலத்முதலி மகாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கடந்த 09ஆம் திகதி கோப் குழுவில் ஆராயப்பட்டபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அப்போதிருந்த அமைச்சரின் ஒப்புதலுடன் குறித்த சொத்து கையகப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது என்பது குறித்து இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இதற்காக ரூ 408 மில்லியன் SLIIT நிறுவனத்தினால் மகாபொல நிதியத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், நிதியத்திற்குச் சொந்தமான நிறுவனத்தினால் நிதியத்திற்கு இவ்வாறு நிதியை வழங்கி உரிமையைப் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குரியது என்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கமைய இதில் தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத அல்லது மோசடியான செயற்பாடுகள் இடம்பெறாது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவல் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பதவி ரீதியாக நிதியத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, இதுபோன்ற மோசடிகள் மூடிமறைக்கப்படுவதற்கு இடங்கொடுக்கப் போவதிலலையென்றும், எதிர்காலத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
நேர்மையான நோக்கத்திற்காக அரசாங்க நிறுவனமாக ஆரம்பக்கப்பட்ட இந்நிறுவனம் பணிப்பாளர் சபையில் பதவி அடிப்படையில் நியமிக்கப்படும் அரசாங்க அதிகாரிகள் பணியாற்றியதாகவும், காலப்போக்கில் பாரிய அளவில் இலாபமீட்டும் இடமாக இனங்காணப்பட்டதால் ஏற்பட்ட பேராசை காரணமாக இவ்வாறு சட்டரீதியற்ற வகையில் அரசாங்கத்திடமிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது இந்நிறுவனத்தை மாற்றுவதற்கு எதிர்த்த அதிகாரியொருவர் குழுவில் தெரிவித்தார்.
இந்த விசாரணைகள் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிக்கும் ஒரு பல்கலைக்கழகம் வீழ்ச்சியடையக்கூடும் என்ற தவறான எண்ணத்தை உருவாக்க சிலர் முயற்சிக்கலாம் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எனினும், SLIIT நிறுவனத்தை அப்படியே பராமரிக்க வேண்டும் என்றும், அதன் பொறுப்பை மகாபொல நிதியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதன் மூலம், அதிகமான மாணவர்கள் மானிய விலையில் பட்டப்படிப்புகளைத் தொடர வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட முக்கியமான பதவிகளில் காணப்பட்ட வெற்றிடங்கள் முறையாக நிரப்பப்படவில்லை என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை கையாளும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை முறையாக நிரப்பத் தவறியது அதன் செயல்திறனின் அடிப்படையில் ஒரு பெரிய பிரச்சினையாகும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
மகாபொல நிதியத்தினால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களான நஷனல் வெல்த் கோப்ரேஷன் லிமிடட் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் வரையறுக்கப்பட்ட நாட்வெல்த் செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆகியவற்றின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் நிதியை மீண்டும் முதலீடு செய்வது தொடர்பான பல சிக்கல்கள் இருப்பதால், இது தொடர்பாக தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும் இங்கு முடிவுசெய்யப்பட்டது.
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் மற்றும் புலமைப்பரிசில் ஒன்றைப் பெறுவதற்கு தகைமையான அதிகளவான மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் வழங்குவதற்கான இயலுமை தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. மூலதனமாகக் காணப்படும் சுமார் 20 பில்லியன் ரூபாய் அளவிலான நிதியின் மூலம் கிடைக்கும் வட்டி மற்றும் ஏனைய வருமானங்களை முகாமை செய்து உயர்ந்தளவு நியாயமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக 2023 இல் ஒப்பந்த அடிப்படையில் 2 வருடங்களுக்கு வர்த்தக கண்காட்சி உத்தியோகத்தர்களை நியமித்தல், நிகழ்நிலை சீட்டிழுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டிழுப்பாளர் அதிலிருந்து விலகியமை காரணமாக நிதியத்துக்கு 750 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் அது தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடாத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தல் வழங்கியது.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, எஸ்.எம். மரிக்கார், சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சமண்மலீ குணசிங்க, சுஜீவ திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ருவான் மாபலகம, அசித நிரோஷன எகொட விதான, திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி.எம்.பீ. அதபத்து மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-03
பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன.பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த விசேட குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, குறிப்பாக தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றையும், பல வருடங்களாக அச்சட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களையும் மீளாய்வு செய்வதும்; இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்வதும்; மேலும், (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புகளையும் திருத்தங்களையும் பரிந்துரை செய்வதும் இவ்விசேட குழுவின் நோக்கமாகும்.பொதுமக்கள் / ஏனைய ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் நிறுவனங்கள், மேற்குறிப்பிடப்பட்ட விடய எல்லைக்குட்பட்ட தங்களது முன்மொழிவுகள் / கருத்துக்களை குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அழைக்கப்படுகின்றனர். அவ்வாறான முன்மொழிவுகள் / கருத்துக்களை 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.முகவரி: குழுவின் செயலாளர்,“தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு”,இலங்கை பாராளுமன்றம்,ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே.
2026-06-03
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.பொலிஸ் நிலையங்களை வலுப்படுத்தல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் கிளிநொச்சி மையமாகக் கொண்டு இடம்பெறும் மணல் வியாபாரத்தைத் தடுத்தல் உள்ளிட்ட பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகளைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-02
நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான இயந்திரங்கள் தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாகவும் கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்தார்.வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்தை முன்வைத்தார்.கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் உலரவைக்கும் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க ரூ.500 மில்லியன் பெறுமதியான நிகழ்ச்சித்திட்டமும், உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி மற்றும் பொதியிடும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய ரூ.100 மில்லியன் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமும் இந்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் கிழங்கைக் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் தலையிட்டிருப்பதாகவும், ஒரு கிலோ கிழங்கை ரூ.220 இற்கு கொள்வனவு செய்து வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சம்பா மற்றும் கீரி போன்றவற்றுக்கு மாற்று அரிசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சில கூட்டுறவு சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை எந்தவித தண்டனையுமின்றி அந்தச் சங்கங்களில் மீண்டும் பதவிகளில் நியமிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மகாபொல புலமைப்பரிசிலைப் பெற்ற பழைய மாணவர்களின் சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சகல பழைய மாணவர்களும் இணைந்துகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சங்கம் எதிர்கால மாணவர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் தகவல் கட்டமைப்பை புதுப்பிப்பது மற்றும் அதன் செயல்திறனை அதிகரித்தல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன மற்றும் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-29
அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தடையற்ற சூழல் – அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்” ஒன்றை உருவாக்குவதற்காக, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளைப் பெறும் நிகழ்வு, இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் கடந்த மே 25 மற்றும் 27ஆம் திகதிகளில் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமானது இயலாமையுடைய நபர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பல்முனை அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், இயலாமையுடைய சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் முழுமையான மற்றும் பயனுள்ள சமூகப் பங்கேற்பு மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைத் தொடர்வதற்கும், புதிய முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதற்கும் இயலாமையுடைய நபர்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு சார்பாகச் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் பணியாற்றும் துறைசார் வல்லுனர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தமது சார்பிலான முன்மொழிவுகளை முன்வைத்தனர்.தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் குறித்த கலந்தாய்வுச் செயல்பாட்டில், இயலாமையுடைய நபர்கள் நேரடியாகவும் தேசிய அளவிலும் பங்களிப்பது இதுவே முதல் முறை என ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார். இந்த இரு நாட்களிலும் இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புள் வாய்மொழி விளக்கங்களை முன்வைத்ததுடன், ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட எழுத்துபூர்வமான முன்மொழிவுகள் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த முன்மொழிவுகள், நிதி மானிளங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, அணுகல்தன்மை மற்றும் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உதவி தொழில்நுட்ப சாதனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்கள், சட்ட உதவி, தரவு முகாமைத்துவம், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் குறிப்பாக அடையாளம் காணப்பட்ட பிற முன்னுரிமைகள் உட்பட அவர்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் குறித்து உள்ளடக்கியுள்ளன.சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் ஆராய்ந்து முன்னுரிமை அடிப்படையில் கோப்புக்களாக்கி ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒன்றியத்தினால் நேரடியாகக் கையளிக்கப்படும் என ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.இதில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) இக்கூட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப் படுவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்கியது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | தனியுரிமைக் கொள்கை
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks