01

E   |   සි   |  

2025-03-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் - அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு

  • ஐந்து ஏக்கருக்கு குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்...  
  • இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 4,700 வீடுகள் - வீட்டுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல், கட்சி, நிறப் பாகுபாடு இல்லை...
  • பெருந்தோட்ட நிறுவனங்களில் அடையாளம் காணப்பட்ட பயன்படுத்தப்படாத சுமார் 30,000 ஹெக்டெயர் நிலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கும் திட்டம்…

 

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் 2025.03.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் இதில் கலந்துகொண்டார்.

தென்னை பயிரிச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாண்டில் 2.5 மில்லியன் தேங்காய் விதைகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் MOP உரத்தில், 27,500 மெட்ரிக் தொன் தற்போது தென்னை பயிற்செய்கைக்காக 56,000 மெட்ரிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்குவதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். அதற்கமைய, அந்த கலப்பு உரம், சந்தை விலை அண்ணளவாக 9,500 ரூபாய் கொண்ட 50 கிலோ கிராம் உர மூட்டையை 4,000 ரூபாய் மானிய விலையில் இந்த மாத இறுதியில் நாடு பூராகவும் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய உதவித் திட்டத்தின் கீழுள்ள 10,000 வீட்டுத்திட்டத்தில் இவ்வாண்டில் 4,700 தோட்டப்புற வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வீட்டுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தாலும், இம்முறை எந்தவிதக் கட்சி, நிறப் பாகுபாடும் இன்றி முன்னுரிமை அடிப்படையில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். மண்சரிவு எச்சரிக்கை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தோட்ட வீடுகளை மேம்படுத்துவதன் மூலம் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு உள்நாட்டு நிதியங்களிலிருந்து 1,300 மில்லியன் ரூபாய் செலவிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சின் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை குழுவின் முன் சமர்ப்பித்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவிக்கையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்ட நிறுவனங்களில் பயன்படுத்தப்படாத சுமார் 30,000 ஹெக்டெயர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.  

அத்துடன், 2024 ஆம் ஆண்டில் இந்நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி சுமார் 262 மில்லியன் கிலோ கிராம் எனவும், 2025 இல் அந்த இலக்கு 275 மில்லியன் கிலோ கிராம் தேயிலை எனவும் செயலாளர் தெரிவித்தார். அத்துடன், உலகில் முதல் இறப்பர் ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்த இந்நாட்டின் இறப்பர் ஏற்றுமதியில் குறைவு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர் 2025 ஆம் ஆண்டில் அந்த இலக்கு 78 மில்லியன் கிலோ கிராம் இறப்பர் எனவும் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் இந்நாட்டின் தென்னை பயிர்ச்செய்கை இலக்கு 2,875 மில்லியன் தேங்காய்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கிளைபோசேட் அதிகமாக பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இலங்கையின் தேயிலை மற்றும் கறுவா என்பவற்றின் உயர் தரம் குறைவடையும் எச்சரிக்கை காணப்படுவதாகவும் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது முக்கியமானது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

தேயிலை உரங்களின் தரம், மரமுந்திரிகை பயிர்ச்செய்கையை மேம்படுத்தல் உள்ளிட்ட இந்த அமைச்சுடன் சம்பந்தமான விடங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks