01

E   |   සි   |  

2025-02-28

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நீதிமன்றக் கட்டமைப்புக்குள் நிலுவையில் உள்ள 1,131,818 வழக்குகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அவதானம்

  • வழக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை – ஏறத்தாழ 30 வருட அனுபவமுள்ள 6 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் இந்த வருடத்தில் சேவையிலிருந்து விலகுகின்றனர் – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார

 

நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல்நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும், மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 1,131,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.

வழக்கு விசாரணைகளை நெறிப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் நீதிபதிகளுக்கு பயிற்சியளிக்கும் செயற்றிட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை நீதிபதிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாவது பாராளுமன்றத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு முதல் தடவையாக அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (27) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தத் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகள் தொடர்பில் பாரிய காலதாமதம் இருப்பதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் பிரிவுகளிலிருந்து கிடைக்கும் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவில் 70 அரச சட்டத்தரணிகளே இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும், ஒதுக்கப்பட்ட வழக்குகளைக் கையாள ஒரு அரசாங்க சட்டத்தரணி பல வருட அனுபவமும் நிபுணத்துவமும் இருக்க வேண்டும் என்றும், சேவை மூப்பு ஒரு முக்கிய காரணியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் வகிபாகம் மற்றும் காலதாமதம் தொடர்பில் சில காலங்களாகப் பேசப்பட்டு வருவதாகவும், திணைக்களத்தில் உள்ள சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். மேலும், ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் 6 பேர் இந்த வருடத்திற்குள் வேலையிலிருந்து விலகுவதாகவும் குறிப்பிட்ட அவர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ பிரதியமைச்சர் மொஹமட் முனீர் முலாபர், குழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-04-10

இலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்

2017 பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றங்கள் ஆராய்வு 2021-2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த விடயங்களும் ஆராய்வுஇலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது. இங்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன், 2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.04.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.இங்கு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த விடயங்கள் வெளிப்பட்டதுடன், 2025 டிசம்பர் 31ஆம் திகதிவரையில் பூர்த்திசெய்யப்படாத விசாரணைகளின் எண்ணிக்கை1538 என்பதும் தெரியவந்தது. இவற்றில் ரூ.69,999,317 பெறுமதியான 40 நிதி மோசடி குறித்த விசாரணைகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதும், இந்த விசாரணைகள் 2007 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றவை என்பதும் தெரியவந்தது.  விசாரணை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும், அதன் காரணமாகவே விசாரணைகள் தாமதமாவதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் பதிலளித்தனர். விசாரணைகளில் தாமதம் காணப்பட்டாலும், 2016ஆம் ஆண்டு டிசம்பரில்  நிலுவையிலிருந்த விசாரணைகளின் எண்ணிக்கை 2711 என்றும், இது தற்பொழுது 1538 ஆகக் குறைந்துள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சில விசாரணைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இங்கு குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழு பரிந்துரைத்தது.அஞ்சல் தலையைமகம் மற்றும் 14 மாவட்ட அலுவலகங்களில் பணியாளரின் வருகை மற்றும் புறப்படுகை என்பவற்றைப் பதிவு செய்வதற்காகப் பொருத்தப்பட்டுள்ள கைவிரல் அடையாள இயந்திரத்தில் புறப்படும் நேரம் 16.15 எனப் பதிவாகியுள்ள போதும், சம்பந்தப்பட்ட பணியாளர்களின் புறப்படும் நேரம் இரவு 7,8,9,10 என பதிவேடுகளில் பதிவுசெய்து தலைமையகத்தின் பணியாளர்கள் 2023ஆம் ஆண்டில் 57,919,684 ரூபாவையும், 2024ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரையில் 7,024,144 ரூபாவையும், 14 மாவட்ட அலுலகங்களில் உள்ள பணியாளர்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் யூன் வரையில் 373,874,705 ரூபாவையும் மேலதிக நேரக் கொடுப்பனவாகப் பெற்றுக் கொண்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், பணியாளர்களுக்கு 4000/5000 வெற்றிடங்கள் காணப்படுவதால் பணியில் உள்ளவர்கள் மேலதிக நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகச் சுட்டிக்காட்டினர். எனவே, இந்தக் கொடுப்பனவுகள் தவறானவை அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, மேலதிக நேரக் கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களுக்குச் சம்பளம் வழங்கலாம் என்று குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் குழு தெரிவித்தது. அத்துடன், இந்த விடயத்தை உள்ளடக்கியதாக அறிக்கையொன்றை கையளிக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அதேநேரம், இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அச்சகப் பிரிவினால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக 2015ஆம் ஆண்டில் 500 வெளியீட்டுப் பிரதிகளை அச்சிடுவதற்கு ரூ.2,697,300வும், நினைவேடுகளை அச்சிடுவதற்கு ரூ.1,092,656 செலவிட்டபோதும், 2025 நவம்பர் மாதம் நடத்திய கணக்காய்வு விசாரணையின் போது குறித்த வெளியீடுகள் சரியான தரத்தில் அச்சிடப்படவில்லையென்பதால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படாமல் அச்சகப் பிரிவில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. இது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழு தெரிவித்தது.மேலும், 2024 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, காலமான, ஓய்வுபெற்ற, இடைநீக்கம் செய்யப்பட்ட, இராஜினாமா செய்த மற்றும் பிற அதிகாரிகளிடமிருந்து  வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைக் கடன் ரூ. 61,225,431 ஆக இருந்தது. இதில், 5 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவைக் கடன் ரூ. 20,679,788 ஆகும். அதன்படி, இந்தப் பணத்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 17 கோரிக்கைக் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். அதன்படி, சம்பந்தப்பட்ட தொகை எவ்வாறு வசூலிக்கப்படவுள்ளது என்பதை விளக்கும் வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.மூன்று மாதங்களுக்குள் இலங்கை அஞ்சல் திணைக்களத்தை மீண்டும் அழைக்கவிருப்பதாகக் கூறி குழுவின் தலைவர் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.இக்குழுக் கூட்டத்தில் கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நளின் ஹேவகே, தினிந்து சமன் ஹென்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, சந்தன சூரியஆரய்ச்சி, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிகா அத்தாவுட, டி.கே. ஜயசுந்தர, அஜந்த கம்மத்தகே மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-04-10

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல் கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளது.குறித்த விசேட பாராளுமன்றக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 07) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.வட்டார எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கையாக கௌரவ சபாநாயகரினால் பிரதமரின் தலைமையில் ஐவரைக் கொண்ட மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் கௌரவ ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றபோதும், அவ்வாறானதொரு அறிக்கை கையளிக்கப்படவில்லையென தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள் இக்குழுவில் தெரிவித்தனர். இதற்கு அமைய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மாகாணசபைத் தேர்தல் நடைமுறையைத் தொடர்வதற்குத் தேவையான விதிகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அடிப்படைச் சட்டத்தை மீண்டும் இயற்றுவதன் மூலம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வினவினர். 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தை இரத்துச் செய்து மீண்டும் அடிப்படைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது. குறித்த சட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான திருத்தம் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட  தனியார் உறுப்பினர் சட்டமூலத்தில் முன்னைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர், 2017 மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புக்கள், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கக் கிடைக்கக்கூடிய சட்ட விதிகள் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அத்துடன், குழுவின் அடுத்த கூட்டத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அதிகாரிகளை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், சந்தன சூரியஆரய்ச்சி, தர்மப்பிரிய விஜேசிங்ஹ, லக்ஷ்மன் நிபுண ஆராச்சி  மற்றும் சமன்மலி குணசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-04-09

NDB வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் மத்திய வங்கியிடம் வினவியது அரசாங்க நிதி பற்றிய குழு

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் ஏப்ரல் 07ஆம் திகதி கூடியது.இக்குழுக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க, அதன் ஆளும் சபை, நாணயக் கொள்கைச் சபை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மத்திய வங்கி, பாராளுமன்றத்திற்கு விளக்கத்தை வழங்க வேண்டும் என்ற சட்டரீதியான ஏற்பாட்டுக்கு அமைய இக்கூட்டம் இடம்பெற்றது.கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, எம்.எம்.எம்.அஸ்லம், நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்த விடயங்களுக்கு முன்னுரிமையளித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. இப்பிரச்சனையின் தீவிரத்தையும், உடனடிக் கவனம் தேவை என்பதையும் வலியுறுத்திய அரசாங்க நிதி பற்றிய குழு, இது பற்றி மத்திய வங்கியுடன் விரிவான கலந்துரையாடலை முன்னெடுத்தது.குறித்த மோசடி தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் குழுவுக்கு அறிவித்தார். தேவையான தகவல்கள் திரட்டப்பட்டவுடன், மத்திய வங்கி கூடிய விரைவில் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அவர் மேலும் உறுதியளித்தார்.பாதிக்கப்பட்ட வங்கியில் நிறுவன ஆளுகையில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளும், இலங்கை மத்திய வங்கியின் தொடர்புடைய துறைகளின் மேற்பார்வையில் குறைபாடுகளும், முக்கியத் தகவல்களை அறிக்கையிடுவதில் தேவையற்ற தாமதங்களும் காணப்பட்டமை புலப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது.இத்தகைய குறைபாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனச் சுட்டிக்காட்டிய குழு, இவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. முழுமையான பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, இந்த விவகாரத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, கடுமையான மேற்பார்வையை மேற்கொள்ளும் குழு வலியுறுத்தியது.


2026-04-02

சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பது குறித்து பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடல்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேநேரம், பீடி கைத்தொழில் உள்ளவர்களைப் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு வலியுறுத்தியது.பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.பீடி உற்பத்திக்குப் பயன்படும் இலைகளை இறக்குமதி செய்வதற்கு வரி அறவிடப்படும் நிலையில், பெருந்தொகையான இலைகள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுகின்றமை இங்கு தெரியவந்தது. இதனைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக பீடி இலைகள் காரணமாக அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வரி வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பதற்கான பல்வேறு வழிகள் பற்றி குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை இறக்குமதி செய்து இத்தொழிலில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான தேவையை குழு வலியுறுத்தியது. அத்துடன், சட்டவிரோத பீடி இலைகளைப் பயன்படுத்தி பீடி தொழில் மேற்கொள்பவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிடமுடியாத நிலை இருப்பதால் இதனைத் தடுத்து, அரசாங்கத்திற்கு உரிய வரி வருமானத்தை ஈட்டுவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக கௌரவ பிரதியமைச்சர்கள் சதுரங்க அபேசிங்க, ருவான் ரணசிங்க, எரங்க வீரரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்செய் பெரேரா, (கலாநிதி) நன்தன மில்லகல்ல, திலின சமரக்கோன், நிலந்தி ஹொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், நிதி அமைச்சு, உண்ணாட்டரசிறைத் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks