logo

E   |   සි   |  

2025-02-21

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்த செயலமர்வு

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்றை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி நடத்துவதற்கு டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த குழு டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (பெப். 20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவும் கலந்துகொண்டார்.

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தில் அபிவிருத்தி செய்வது என்ற அரசாங்கத்தின் பிரதான நோக்கத்தை நாடு முழுவதிலும் ஏற்படும் மாற்றமாகக் கருத்தில் கொண்டு அனைவரும் பணியாற்றுவது முக்கியமானது என்று இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இங்கு டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருக்கும் பகுதிகள் குறித்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் கருத்துக்களை முன்வைத்தனர். அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டின் முன்னணியாளரான ICTA நிறுவனத்தை டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையின் கீழ் கொண்டுவந்து, வினைத்திறனான முறையில் அதன் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.

மேலும், அரசாங்க நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களைப் பயன்படுத்தி அவற்றின் ஊடாக தங்கள் தரவுகளையும், தகவல்களையும் சேகரிப்பதற்கு வெவ்வேறுபட்ட தளங்களை உருவாக்கியிருப்பதாகவும், அவற்றை எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இதுபோன்ற கட்டமைப்புக்கள் அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறான கட்டமைப்புக்களைத் தற்பொழுது உருவாக்க வேண்டாம் என்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் காணப்படும் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்ற வகையில் அக்கட்டமைப்புக்களை உருவாக்கி பராமரிக்கப்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் தொலைபேசி சமிக்ஜைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். கிரமாத்திற்குத் தொடர்பாடல் என்ற திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் 50 புதிய தொடர்பாடல் கோபுரங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும், இதன் ஊடாக இந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டளவு தீர்க்க முடியும் என்றும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

கையடக்கத்தொலைபேசி பயனாளர்களள் தமது கையடக்கத்தொலைபேசிக்கான சேவை வழங்குனர்களை மாற்றும்போது தாம் பயன்படுத்தும் கையடக்கத்தொலைபேசி இலக்கத்தை மீண்டும் பெற்றுக் கொள்வது குறித்துக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்த வசதி எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என இங்கு பதிலளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் க்ரிப்டோ பணத்தின் (crypto) பயன்பாடு குறித்து கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கைக்குள் அவற்றின் பயன்பாட்டுக்கு இடமளிப்பதா இல்லையா என்பதை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இலங்கை பிரஜைகளின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு கையாள்வது மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களின் சம்பளங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதில், கௌரவ அமைச்சர்கள், டிஜிட்டல் பொருளாதார கௌரவ பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன, கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளரும், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசருமான (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர், தொடர்பாடல் திணைக்கள (பதில்) பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks