பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-07-17
செய்தி வகைகள் : குழு செய்திகள்
அரசாங்க நிதி பற்றிய குழுவில், அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் பற்றி நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. பொது மக்களின் நம்பிக்கையை வளர்த்தல், வினைத்திறனான வள ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தல் மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாறானதொரு சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு நிதி அமைச்சு எடுத்த முயற்சிகளையும் குழு பாராட்டியது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள நிதி ரீதியான ஒழுங்குவிதிகள், சட்டக் கட்டமைப்புக்களை அடிப்படையாக் கொண்டிருந்தாலும் அவை சரியான முறையில் பின்பற்றப்படுவதில்லையெனக் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்போதைய அரச நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள், உள்ளக ரீதியில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறலில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் அரச நிதி முகாமைத்துவச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அண்மையில் (11) கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம், நிதி அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
தற்பொழுது காணப்படும் அரச நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பொது நிதி பற்றிய சட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை இச்சட்டமூலம் கொண்டுள்ளது. இதன் மூலம் பல துறைகளில் பரந்து காணப்படும் ஒழுங்குமுறைகளை ஒருங்கிணைக்க உதவும். இது அனைத்துக்குமான சட்டமாக செயற்படும் அதேவேளை, நிதி மூலோபாயத் திட்டம் மற்றும் நடுத்தர நிதிச் சட்டகத்தின் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.
மேலும், இந்தச் சட்டமூலமானது முதன்மை இருப்பை நடுத்தர கால நிதி ஆதாரமாக இலக்கு வைப்பதற்கும், அரசாங்கத்தின் முதன்மைச் செலவு வரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஐ விட அதிகரிக்காமல் இருப்பதை பேணுவதற்கான ஏற்பாடுகளையும் வழங்குகின்றது.
எனினும், முன்மொழியப்பட்ட 13% முதன்மை செலவின் வரம்பானது, வளர்ச்சி, செயல்திறன் மற்றும் சமூக நலனை ஊக்குவிக்கும் வழிகளில் வரி மற்றும் செலவு செய்வதற்கான அரசாங்கத்தின் திறனைத் தடுக்கின்றது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மேலும், முதன்மைச் செலவினங்களில் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலான வரம்பை நிர்ணயித்த ஒரே நாடாக இலங்கையை அது நிலைநிறுத்துகிறது. இதனால், 2040 ஆம் ஆண்டளவில் அதிக வருமானம் பெறும் நாடாக மாறுவதற்கு தேவையான 10% வளர்ச்சி விகிதத்தை அடைவது சாத்தியமற்றது எனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை தயாரித்து வெளியிடுதல், உத்தரவாத வரம்பை குறைத்தல் - சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5%க்கு விஞ்சாது இருப்பது, அரச முதலீட்டுக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட வேண்டிய திட்டங்கள் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
வரவிருக்கும் நிதியாண்டு மற்றும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான நடுத்தர கால நிதிக் கட்டமைப்பு, முதன்மை இருப்பு இலக்கு, முதன்மை செலவின உச்சவரம்பு, நிதிய மொத்த கணிப்புகள் மற்றும் பொருளாதார அனுமானங்கள் குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது.
கடந்த 50 வருடங்களில் அரசாங்கத்தின் வருமானம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனுமானங்கள் எவ்வாறு தவறானவை என்றும், இந்த குறிப்பிட்ட சட்டமூலம் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். மேலும், இவ்வாறான சட்டமூலம் கடனை நிலைநிறுத்துவது மட்டுமன்றி பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தின் நோக்கங்கள் பொருளாதார நிலைமாற்றச் சட்டத்துடன் இணங்கும் வகையில் இருக்க வேண்டும்என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து, கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ எம்.ஏ.சுமந்திரன், கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ மதுர விதானகே, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ துமிந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-04-02
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேநேரம், பீடி கைத்தொழில் உள்ளவர்களைப் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு வலியுறுத்தியது.பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.பீடி உற்பத்திக்குப் பயன்படும் இலைகளை இறக்குமதி செய்வதற்கு வரி அறவிடப்படும் நிலையில், பெருந்தொகையான இலைகள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுகின்றமை இங்கு தெரியவந்தது. இதனைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக பீடி இலைகள் காரணமாக அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வரி வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பதற்கான பல்வேறு வழிகள் பற்றி குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை இறக்குமதி செய்து இத்தொழிலில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான தேவையை குழு வலியுறுத்தியது. அத்துடன், சட்டவிரோத பீடி இலைகளைப் பயன்படுத்தி பீடி தொழில் மேற்கொள்பவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிடமுடியாத நிலை இருப்பதால் இதனைத் தடுத்து, அரசாங்கத்திற்கு உரிய வரி வருமானத்தை ஈட்டுவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக கௌரவ பிரதியமைச்சர்கள் சதுரங்க அபேசிங்க, ருவான் ரணசிங்க, எரங்க வீரரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்செய் பெரேரா, (கலாநிதி) நன்தன மில்லகல்ல, திலின சமரக்கோன், நிலந்தி ஹொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், நிதி அமைச்சு, உண்ணாட்டரசிறைத் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-04-02
பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (மார்ச் 20) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.எஸ்.துய்யகொந்தா (ஓய்வு) அவர்களின் நியமனத்திற்கும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளராக எல்.மொஹமட் நவவி அவர்களின் நியமனத்திற்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.டி.ரி.விக்ரமசிங்க அவர்களின் நியமனத்திற்கும், துறைமுகங்கள் மற்றும் சிவிர் விமான சுவைகள் அமைச்சின் செயலாளராக டபிள்யூ.டபிள்யூ.எஸ்.மங்கள அவர்களின் நியமத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியது.
2026-03-31
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்று 2026 மார்ச் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை புதுடில்லிக்கு பாராளுமன்ற ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.இந்த இலங்கைத் தூதுக் குழுவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சியின் முதற்சோலாசான் கஜயந்த கருணாதிலக, நலீன் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, (சட்டத்தரணி) கீதா ஹேரத், கே.இளங்குமரன், கிங்ஸ் நெல்சன், தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் உள்ளடக்கியிருந்தனர். குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற பணியாளர்களான உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி.சந்தன மற்றும் பிரதான உத்தியோகத்தர் எஸ்.டபிள்யூ.ரி.ஆர்.டி. சில்வா மற்றும் பாராளுமன்ற அதிகாரி டபிள்யூ.கே.ஏ.எம்.எம்.எம்.அர்த்தனாயக்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.மார்ச் 22ஆம் திகதி புதுடில்லியைச் சென்றடைந்த தூதுக் குழுவினர் மறுதினம் முதல் உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினர். இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த இக்குழுவினர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரேர்னா ஸ்தல் பூங்காவில் மலரஞ்சலி செலுத்தினர். இவர்கள் லோக் சபாவின் கௌரவ சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை குறித்து தெளிவுபடுத்தும் அமர்வொன்றும் நடத்தப்பட்டது. இதில் நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சட்டமியற்றும் செயல்முறைகள் பற்றிய மதிப்புமிக்க புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இக்குழுவினர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நிலைக்குழு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழு ஆகியவற்றுடனும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினர்.மார்ச் 24ஆம் திகதி இலங்கைத் தூதுக் குழுவினர் “PM Gati Shakti” தேசிய திட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்த தொடர் அமர்வுகளில் பங்கேற்றனர். அத்துடன், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகாரசபை, இந்தியாவின் சூரிய வலுசக்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்திய தொழில் கூட்டமைப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இரு நாடுகளின் பாராளுமன்ற உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருடனும் இலங்கைத் தூதுக் குழுவினர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.மார்ச் 25ஆம் திகதி இந்தியாவின் நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் உள்ள சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இத்தூதுக் குழுவினர் புதுடில்லி மெட்ரோ ரயில் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நகர்புற ஆளுகை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் பொருத்தமான நகர்புற அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து ஆய்வுசெய்யும் நோக்கில் புதுடில்லி மாநகரசபையின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றிய கலந்துரையாடலிலும் இவர்கள் ஈடுபட்டனர். அத்துடன், பாரிய அளவிலான நீர் விநியோக முகாமைத்துவம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் குறித்து ஜல் சக்தி அமைச்சின் கீழ் உள்ள ஜல் ஜீவன் திட்டத்தின் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்தனர்.மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், இலங்கைத் தூதுக்குழுவினர் அடல் சேது பாலம், ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் நவி மும்பை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் தளங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் பவர் எக்ஸ்சேஞ்ச் இந்தியா லிமிடெட் நிறுவனத்தைப் பார்வையிட்டதோடு, மகாராஷ்டிர மாநிலத்தின் கௌரவ முதலமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதேவேளை, இலங்கைத் தூதுக்குழுவினர் மார்ச் 27ஆம் திகதி Gateway of India மற்றும் Elephanta Caves உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் மகாராஷ்டிர சட்டசபையின் கௌரவ சபாநாயகர் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி மற்றும் தொழில்துறைத் துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.இந்தப் பாராளுமன்ற ஆய்வுப் பயணத்தில் இலங்கைத் தூதுக்குழுவின் பங்கேற்பின் மூலம், இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பின் வாயிலாக உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தித் துறைகளில் நிறுவனத் திறனை மேம்படுத்துவதற்கும், அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், சிறந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தனது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
2026-03-30
2026 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை குறித்த விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் குழு கவனம் செலுத்தியதுதொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

