logo

E   |   සි   |  

2024-06-26

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மருந்துத் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கைகளுக்கு மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் பாராட்டு

இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கைகளுக்கு இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் பாராட்டுத் தெரிவித்தது.

இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்  அதன் தலைவர் கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன தலைமையில் அண்மையில் (ஜூன் 18) கூடிய போதே இவ்வாறு பாராட்டப்பட்டது. இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதா இல்லையா என்பது குறித்தும் சுகாதார ஊழியர் இடமாற்றக் கொள்கை குறித்தும் கலந்துரையாடும் நோக்கில் கூடிய இந்தக் கூட்டத்தில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறைந்திருப்பதாகவும், நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மேற்கொண்ட கணக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்த முடிந்திருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். எனினும், சில வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துத் தட்டுப்பாடுகளுக்கு களஞ்சிய வசதி, விநியோகம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவை காரணங்களாக அமைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்களின் இடமாற்றங்கள் குறித்த கொள்கைகளினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும், இதனால் மேலதிக பயிற்சிகளுக்காக வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் நாடு திரும்பாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால், பல வைத்தியசாலைகளில் விசேட மருத்துவர்கள் மேலதிகமாகப் பணியாற்ற வேண்டியிருப்பதாகவும், எனவே, வெளிமாவட்டங்களில் சேவைக்கு அமர்த்தப்படும் மருத்துவர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சைக் கேட்டுக்கொண்ட ஒன்றியத்தின் தலைவர், மருந்துத் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கு சுகாதார அமைச்சும், சுகாதார சேவைகள் திணைக்களமும் முன்னெடுத்த பணிகளைப் பாராட்டினார்.

மருத்துவர்கள் நாட்டைவிட்டுச் செல்வதால் ஏற்படும் இழப்புக்களைத் தடுப்பதற்கு விசேட கொடுப்பனவு முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக குழுவின் ஏனைய உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர்.

இந்த கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான சுகாதார அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பதிரண, கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா ஆரம்பேபொல, கௌரவ (வைத்தியகலாநிதி) ராஜித சேனாரத்ன, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கௌரவ (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ, கௌரவ (வைத்தியகலாநிதி) காவிந்த ஜயவர்தன, கௌரவ (வைத்தியகலாநிதி) உப்புல் கலப்பதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

12



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks