logo

02

E   |   සි   |  

2024-05-31

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இயலாமையுடைய நபர்களுக்குத் தனியான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

  • மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும

 

இயலாமையுடைய நபர்களுக்குத் தனியான சுயாதீன ஆணைக்குழுவை இந்நாட்டில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இயலாமையுடைய நபர்களின் சட்டரீதியான சூழலை மேம்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலையீட்டில் இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான 1996 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களுக்கு அமைவாக இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிக்க முடியும் எனவும் கௌரவ அழகப்பெரும குறிப்பிட்டார். அத்துடன், இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு இணையாக இந்தத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2012 இல் நாட்டில் மேற்கொண்ட சனத்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் 8.7% பேர், அதாவது கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் இயலாமையுடைய நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 74% பேர் எந்தவொரு பொருளாதாரச் செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்றும், மேலும் 34% பிள்ளைகள் எந்த ஒரு அடிப்படைக் கல்வியையும் பெறவில்லை எனவும் தலைவர் தெரிவித்தார். இருப்பினும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரதேசத்துக்கும் ஏற்ப இந்தத் தரவுகளைப் பார்க்கும்போது, வேறுபாடுகள் இருப்பதாக தலைவர் விளக்கினார். கிடைக்கப்பெறும் தரவுகளின்படி, இலங்கையில் அதிகளவான இயலாமையுடைய நபர்கள் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த தலைவர், நாடளாவிய ரீதியில் உள்ள இயலாமையுடைய நபர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சரியான தகவல் கட்டமைப்பு இல்லாததன் பிரச்சினையை வலியுறுத்தினார்.

இயலாமையுடைய நபர்கள் முகங்கொடுக்கும் சவால்கள், சிக்கல்கள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான மூன்றாவது விசேட செயலமர்வு மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் அண்மையில் (மே 27) நுவரெலியாவில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெற்ற இந்த விசேட செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.பி. ரத்நாயக்க, கௌரவ நிமல் பியதிஸ்ஸ, கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, நுவரெலிய மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட கல்வி, சுகாதார மற்றும் சமூக சேவைத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) ஆலோசகர் ஷியாமா சல்காது, இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பதிரகே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் இயலாமையுடைய நபர்கள், நுவரெலியா மாவட்ட இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்ட இயலாமையுடைய சிறுவர்களுக்கான கல்வி நிறுவங்கள் சிலவற்றின் அதிகாரிகள், பிரதேச மக்கள் பிரதிநிதிகளின் இணைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இயலாமையுடைய சிறுவர்களுக்கான கல்வி முறையை நெறிப்படுத்துதல், நுவரெலியா மாவட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பிரவேச வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பில் மற்றும் சமூகத்தில் உள்வாங்குவதை மேம்படுத்தும் இணைப்புப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கான தகவல்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கலந்துகொண்ட இயலாமையுடைய நபர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் பிரச்சினைகளை இதன்போது முன்வைத்தனர். சிறிய தொழில் முயற்சியாளர்களான இயலாமையுடைய நபர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், நுவரெலியா மாவட்டத்தின் அமைவிடத்துக்கு ஏற்ற வகையில் இயலாமையுடைய சிறுவர்களுக்கு பாடசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு பிரவேசிக்கும் போது ஏற்படும் அசௌகரியங்கள், இயலாமையுடைய சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகுவதைத் தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் உதவிகளை பெரும் பாடசாலைகளின் செயற்திறனை மேலும் நெறிப்படுத்துவது தொடர்பில் 1961 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க துணை பாடசாலைகள் மற்றும் பயிற்சிக் கல்லூரி (மேலதிக ஏற்பாடுகள்) சட்டம் திருத்தப்பட வேண்டும் எனவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், பொதுப் போக்குவரத்து வசதிகளில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர். அதற்கமைய, இந்நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்வதற்கு பஸ் வண்டிகளை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பஸ் வண்டிகளில் சிலவற்றை இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் வகையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

1 2

13 18

20 21

25 29

32 5



தொடர்புடைய செய்திகள்

2026-07-23

சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணய முறைகேடு தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில், தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer – TT) முறையைத் தவறாகப் பயன்படுத்தி, பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்தார்.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2493/39 மற்றும் 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (ஜுலை 21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த விடயம் தொடர்பான விசாரணையின் கீழ் 105 நிறுவனங்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் 13 ஊடாக மேற்கொள்ளப்பட்ட 24,300க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தந்திப் பரிமாற்ற முறையின் ஊடாக பணம் அனுப்பப்பட்ட போதிலும், உரிய பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத சந்தர்ப்பங்களும், போலியான விலைப்பட்டியல்கள், உண்மைக்குப் புறம்பான இறக்குமதி ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.சட்டவிரோத வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது காணப்படும் தடைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (Know Your Customer – KYC) நடைமுறையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.எவ்வாறாயினும், இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும்போது சட்டத்துக்கு இணங்க செயற்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.புதிய ஒழுங்குவிதிகளை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி, இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட கூட்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்தது.2493/39 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதிக்கான முன்கொடுப்பனவுகள் (Advance Payments) தொடர்பான ஒழுங்குவிதிகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. பொருட்களை இறக்குமதி செய்யாமல் முன்கொடுப்பனவுகளின் ஊடாக வெளிநாட்டு நாணயம் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பது, இறக்குமதி பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியன இந்த ஒழுங்குவிதிகளின் நோக்கங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, முன்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் இலங்கை சுங்கத்தில் “தகைமை பெற்ற இறக்குமதியாளர்கள்” (Qualified Importers) எனப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகளால் தனித்துவமான அடையாள இலக்கம் (Unique Identification Number – UIN) வழங்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.அதேவேளை, 2493/03 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளும் குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.அதன்படி, உலோகத்துடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாட்டு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எச்.எஸ் குறியீடுகள் 55 புதிய கட்டுப்பாட்டு முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத உலோக ஏற்றுமதியைத் தடுப்பதும் உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.


2026-07-22

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பணிக்குறிப்பு வரைவுக்கு அங்கீகாரம்

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்காகத் தயாரிக்கப்பட்ட பணிக்குறிப்பு (Terms of Reference) வரைவு,  பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றின்போது, பணிக்குறிப்பைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளும் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததுடன், அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இறுதி பணிக்குறிப்பு வரைவு தயாரிக்கப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பணிக்குறிப்பை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்து, ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.


2026-07-22

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வின் வழிமுறை தொடர்பில் கோப் உபகுழுவில் ஆராய்வு

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால்  (கோப்)  நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உபகுழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தலைமையில் குறித்த உபகுழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.ஆய்வை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள நிறுவன செயற்பாட்டுக் குழு (Institutional Operations Committee) மற்றும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை (Six-member Coordination Team) நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மேலும், ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள கலப்பு ஆய்வு முறையியல் (Mixed-Methods Design), வினாக்கொத்துகளைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் செயன்முறை தொடர்பிலும் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.இதேவேளை, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (SLIATE) மறுசீரமைப்பது தொடர்பில் உபகுழுவினால் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆய்வுடன் தொடர்புடைய மனித வள மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை (MIS) பிரிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது, ஆய்வின் செயற்பாட்டு கால அட்டவணையை (Gantt Chart) தயாரித்தல் மற்றும் கைத்தொழில் துறையின் பங்குதாரர்களுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், வர்த்தக சம்மேளனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட SLIATE நிறுவனங்களில் கள ஆய்வுப் பயணங்களை (Field Visits) மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்கவும் உபகுழு தீர்மானித்தது.இந்த உபகுழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்கவும் கலந்துகொண்டார்.


2026-07-22

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் காணி, நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு தகவல்களை வழங்குவது குறித்து கோப் குழுவில் அவதானம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்ட காணி, நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான விடயங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து முறையான விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கவனம் செலுத்தப்பட்டது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு, மாளிகாவத்தை, எல்விட்டிகல மாவத்தை மற்றும் தம்புள்ளை ரங்கிரிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அதிகாரசபைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணிகளை அமைச்சரவை அனுமதியின்றி, மிகக் குறைந்த பெயரளவிலான பெறுமதியின் அடிப்படையில் வெளித் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியமை, ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கு முரணாக அந்தக் காணிகள் பயன்படுத்தப்பட்டமை மற்றும் அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை தொடர்பில் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இவை தொடர்பான கொடுக்கல்வாங்கல்களில் பெரும்பாலானவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கங்களுக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கும் முரணாக இடம்பெற்றுள்ளதாக குழு சுட்டிக்காட்டியது. எனவே, குறித்த முறைகேடுகள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு  பரிந்துரைத்தது.மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான உள்ளகக் கணக்காய்வு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும், பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில், சொத்து முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, எஸ். எம். மரிக்கார், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, சுனில் ராஜபக்ஷ, திலிண சமரகோன், சந்திம ஹெட்டியாரச்சி, அசித நிரோஷண எகொடவித்தான, ருவன் மாபலகம, ஜகத் மனுவர்ண, தினேஷ் ஹேமந்த, எம்.கே.எம். அஸ்லம் மற்றும் சுதத் பலகல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks