01

E   |   සි   |  

2024-04-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டம் மற்றும் நீலக் கொடி கடற்கரைகளை ஸ்தாபித்தல் ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் செயற்பட வேண்டும் - சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தல்

  • காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குழுவிற்கு அறிவிக்குமாறும் ஆலோசனை
  • நீலக்கொடி திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தும் செயலமர்வை பாராளுமன்றத்தில் நடத்துமாறும் அறிவுறுத்தல்

 

காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டம் மற்றும் நீலக் கொடி கடற்கரைகளை (Blue Flag Beach) ஸ்தாபித்தல் ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் செயற்படுமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அரச நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் இணக்கப்பாடு இன்மை காரணமாக நாட்டுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

16 வருடங்கள் கால தாமதமான காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீலக் கொடி கடற்கரைகள் அமைப்பது தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்ட போதே குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, துறைமுக அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், காலி மாநகர சபை, தொல்பொருளியல் திணைக்களம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகிய சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் காலி துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கான கடனுதவி 2006 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு இத்திட்டத்தினால் எவ்வித நிதிப் பயனும் கிடைக்காத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின்னர் திட்டத்தின் பொருளாதாரப் பயன்கள் அடிப்படையில் இரண்டாவது திட்ட முன்மொழிவுக்கு அமைய மேலதிகமாக இனங்காணப்பட்ட 40 ஹெக்டயர் நிலம் நிரப்பப்பட்டு அதற்கு மரபுரிமை பாதிப்பு அறிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் ஆய்வு அறிக்கை பெறப்பட்டு, தகுந்த முதலீட்டாளருக்கு வழங்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

பகுதியில் 4 கப்பல் விபத்துக்குள்ளாகியிருப்பதக்கவும், தொல்பொருள் தாக்க பகுப்பாய்வு (AIA) மூலம் கப்பல் பாகங்களை மீட்டு காட்சிப்படுத்துவது போன்ற மாற்று முறைளைப் பயன்படுத்த முடியும் என தொல்பொருளியல் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது யுனெஸ்கோ உலக மரபுரிமைப் பகுதி என்பதால் அது தொடர்பிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி உள்ளிட்ட இந்தத் திட்டத்தம் தொடர்பான சட்டரீதியான தடைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்தத் திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டுக்கு நன்மை பயக்கும் இவ்வாறான திட்டங்களை தடைகளை வெற்றிகொண்டு அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. அத்துடன், அனைத்துத் தரப்பினரும் சந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் களமாக இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவைப் பயன்படுத்துமாறும் குழுவின் தலைவர் கௌரவ அஜித் மான்னப்பெரும சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இத முன்னேற்றம் தொடர்பில் குழுவுக்கு அறிக்கை அளிக்குமாறு துறைமுக அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், ஏப்ரல் 26 திகதிக்குள் சம்பந்தப்பட்ட ஆரம்பகட்ட முன்னேற்றத்தை அறிவிக்குமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் கடல்சார் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் நீலக்கொடி கடற்கரை திட்டம் (Blue Flag Beaches) குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் சுற்றுலாத்தலங்களைக் கொண்ட 28 கடற்கரைகள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சான்றிதழுக்காக 33 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் இங்கு புலப்பட்டது. இலங்கைக்குப் பின்னர் இத்திட்டத்தை ஆரம்பித்த இந்தியாவின் 8 கடற்கரைகள் ஏற்கனவே இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளதாகவும், தான் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்னும் செயற்படுத்தப்படாமல் பல வருடங்களாகத் தாமதமாகி வருகின்றது எனவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்

தற்பொழுது உனவட்டுன, பெந்தோட்டை, பாசிக்குடா மற்றும் அறுகம்பே ஆகிய கடற்கரைகள் உத்தியோகபூர்வ சான்றிதழைப் பெறக்கூடிய கடற்கரைகளாக இனங்காணப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கௌரவ மான்னப்பெரும வலியுறுத்தினார்.

அதற்கமைய, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் முயற்சியின் கீழ் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தும் செயலமர்வை ஏற்பாடு செய்யுமாறும் குழு ஆலோசனை வழங்கியது.

 

1 3

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-03

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன

பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன.பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த விசேட குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, குறிப்பாக தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றையும், பல வருடங்களாக அச்சட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களையும் மீளாய்வு செய்வதும்; இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்வதும்; மேலும், (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புகளையும் திருத்தங்களையும் பரிந்துரை செய்வதும் இவ்விசேட குழுவின் நோக்கமாகும்.பொதுமக்கள் / ஏனைய ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் நிறுவனங்கள், மேற்குறிப்பிடப்பட்ட விடய எல்லைக்குட்பட்ட தங்களது முன்மொழிவுகள் / கருத்துக்களை குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அழைக்கப்படுகின்றனர். அவ்வாறான முன்மொழிவுகள் / கருத்துக்களை 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.முகவரி: குழுவின் செயலாளர்,“தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு”,இலங்கை பாராளுமன்றம்,ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே.


2026-06-03

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.பொலிஸ் நிலையங்களை வலுப்படுத்தல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் கிளிநொச்சி மையமாகக் கொண்டு இடம்பெறும் மணல் வியாபாரத்தைத் தடுத்தல் உள்ளிட்ட பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகளைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-02

நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ. 1000 மில்லியன்

நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான இயந்திரங்கள் தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாகவும் கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்தார்.வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்தை முன்வைத்தார்.கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் உலரவைக்கும் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க ரூ.500 மில்லியன் பெறுமதியான நிகழ்ச்சித்திட்டமும், உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி மற்றும் பொதியிடும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய ரூ.100 மில்லியன் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமும் இந்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் கிழங்கைக் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் தலையிட்டிருப்பதாகவும், ஒரு கிலோ கிழங்கை ரூ.220 இற்கு கொள்வனவு செய்து வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சம்பா மற்றும் கீரி போன்றவற்றுக்கு மாற்று அரிசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சில கூட்டுறவு சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை எந்தவித தண்டனையுமின்றி அந்தச் சங்கங்களில் மீண்டும் பதவிகளில் நியமிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மகாபொல புலமைப்பரிசிலைப் பெற்ற பழைய மாணவர்களின் சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சகல பழைய மாணவர்களும் இணைந்துகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சங்கம் எதிர்கால மாணவர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் தகவல் கட்டமைப்பை புதுப்பிப்பது மற்றும் அதன் செயல்திறனை அதிகரித்தல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன மற்றும் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-29

இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டன

அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தடையற்ற சூழல் – அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்” ஒன்றை உருவாக்குவதற்காக, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளைப் பெறும் நிகழ்வு, இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் கடந்த மே 25 மற்றும் 27ஆம் திகதிகளில் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமானது இயலாமையுடைய நபர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பல்முனை அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், இயலாமையுடைய சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் முழுமையான மற்றும் பயனுள்ள சமூகப் பங்கேற்பு மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைத் தொடர்வதற்கும், புதிய முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதற்கும் இயலாமையுடைய நபர்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு சார்பாகச் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் பணியாற்றும் துறைசார் வல்லுனர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தமது சார்பிலான முன்மொழிவுகளை முன்வைத்தனர்.தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் குறித்த கலந்தாய்வுச் செயல்பாட்டில், இயலாமையுடைய நபர்கள் நேரடியாகவும் தேசிய அளவிலும் பங்களிப்பது இதுவே முதல் முறை என ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார். இந்த இரு நாட்களிலும் இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புள் வாய்மொழி விளக்கங்களை முன்வைத்ததுடன், ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட எழுத்துபூர்வமான முன்மொழிவுகள் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த முன்மொழிவுகள், நிதி மானிளங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, அணுகல்தன்மை மற்றும் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் உதவி தொழில்நுட்ப சாதனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்கள், சட்ட உதவி, தரவு முகாமைத்துவம், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் குறிப்பாக அடையாளம் காணப்பட்ட பிற முன்னுரிமைகள் உட்பட அவர்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் குறித்து உள்ளடக்கியுள்ளன.சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் ஆராய்ந்து முன்னுரிமை அடிப்படையில் கோப்புக்களாக்கி ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒன்றியத்தினால் நேரடியாகக் கையளிக்கப்படும் என ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.இதில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) இக்கூட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப் படுவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் நிதிப் பங்களிப்பை வழங்கியது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது. | தனியுரிமைக் கொள்கை

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks