E   |   සි   |  

2024-03-20

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கௌரவ ரோஹித்த அபேகுணவர்தன தலைமையில் முதலாவது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் கூட்டம் கூடியது

  • கோப் குழுவின் வரலாற்றில் முதல் தடவையாக புதிய குழு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், குழுவின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைவரினால் விளக்கம்
  • முதலாவது கூட்டத்துக்கு இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் அழைப்பு - 27 வருடங்களில் 4 வருடங்கள் மாத்திரமே கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டியுள்ளது - கோப் குழுவில் புலப்பட்டது
  • பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனதின் எதிர்கால வேலைத்திட்டத்தை உள்ளடக்கி 02 மாதங்களுக்குள் கூட்டுத் திட்டத்தைத் (corporate plan) தயாரிக்கவும் - கோப் குழுவினால் அறிவுறுத்தல்
  • கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து கனிகளையும் நில அளவை செய்து, அனைத்து விவரங்களும்  அடங்கிய அறிக்கையை வழங்கவும் - கோப் குழுவினால் அறிவுறுத்தல்
  • பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனதின் ஊழியர்களுக்கான செலவு 75% - குழுவில் புலப்பட்டது

 

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில்  363 நிறுவனங்களை அழைக்க முடியும் என்றாலும், 102 நிறுவனங்கள் குழுவின் முன் இதுவரை அழைக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அவரது தலைமையில் நேற்று (மார்ச் 19) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கோப் குழுவின் நோக்கங்கள் மற்றும் குழுவின் இதுவரையான செயற்பாடுகள் குறித்து தலைவர் முழுமையான விளக்கமளித்தார். கோப் குழுவின் வரலாற்றில் புதிய தலைவர் ஒருவர் இவ்வாறு தெளிவுபடுத்துவது இதுவே முதல்முறை ஆகும்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் இன்று கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்படி 27 வருடங்களில் இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் 4 வருடங்களில் மாத்திரம் இலாபம் ஈட்டியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து நட்டமடைந்து வரும் பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 தேயிலை தொழிற்சாலைகளில் 7 தொழிற்சாலைகள் செயல்படாமல் இருப்பதும் தெரியவந்தது. ஆனால், செயலிழந்த தேயிலை தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கோ அல்லது குத்தகைக்கு விடுவதற்கோ கூட்டுத்தாபனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ச்சியான நட்டங்களுக்கு மூலதனப் பற்றாக்குறையே முதன்மைக் காரணம் என அதன் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அத்துடன், மூலதனம் இல்லாததால் உரம் மற்றும் அது சார்ந்த களைக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தாததும் நட்டத்திற்கு காரணம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு பிரதான காரணம் மூலதனப் பற்றாக்குறை மாத்திரமல்ல என குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியது. அதற்கமைய, பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் மிக அதிக ஊழியர் செலவு குறித்த தரவுகளை குழு சமர்ப்பித்ததுடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் செலவு சுமார் 75% எனத் தெரியவந்தது.

மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்கிய பின்னர் ஏனைய தரப்பினர் கையகப்படுத்தியமை தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீட்பதற்கு தேவையான சட்ட நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணிகளை உடனடியாக மீள் அளவீடு செய்யுமாறும், கூட்டுத்தாபனத்தினால் குத்தகை அடிப்படையில் இந்தக் காணி வழங்கப்பட்டுள்ளது, காணிகளை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யார், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிதி, வரி அடிப்படையில் வழங்கப்பட்ட நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பன உள்ளிட்ட விரிவான அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளாக 1.5 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளதாக இதன்போது தெரியவந்தது. அதற்கமைய, உடனடியாக தலையிட்டு உரிய கொடுப்பனவுகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்கி முடிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் 2024-2028 காலப்பகுதிக்கான கூட்டுத் திட்டமொன்றும் குழுவில் முன்வைக்கப்பட்டது. எவ்வாறாயினும், நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் சம்பந்தப்பட்ட கூட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படாதது குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது. அதனடிப்படையில் தமது நிறுவனத்தின் தேவையை அறியாமல் ஏனைய தரப்பினர் ஊடாக கூட்டுத் திட்டத்தை தயாரித்துள்ளமை குறித்த வருத்தம் தெரிவித்த குழுவின் தலைவர், உடனடியாக அமுல்படுத்தும் வகையில் நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய கூட்டுத் திட்டத்தை  02 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் தொடர்பில் முறையான தரவுக் கட்டமைப்பு இல்லாமை பற்றி அதிருப்தியை குழு வெளியிட்டதுடன், அது தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக குழுவிற்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஆகியோரும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

2 3



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks