பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-03-20
செய்தி வகைகள் : குழு செய்திகள்
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் 363 நிறுவனங்களை அழைக்க முடியும் என்றாலும், 102 நிறுவனங்கள் குழுவின் முன் இதுவரை அழைக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அவரது தலைமையில் நேற்று (மார்ச் 19) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கோப் குழுவின் நோக்கங்கள் மற்றும் குழுவின் இதுவரையான செயற்பாடுகள் குறித்து தலைவர் முழுமையான விளக்கமளித்தார். கோப் குழுவின் வரலாற்றில் புதிய தலைவர் ஒருவர் இவ்வாறு தெளிவுபடுத்துவது இதுவே முதல்முறை ஆகும்.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் இன்று கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்படி 27 வருடங்களில் இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் 4 வருடங்களில் மாத்திரம் இலாபம் ஈட்டியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து நட்டமடைந்து வரும் பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 தேயிலை தொழிற்சாலைகளில் 7 தொழிற்சாலைகள் செயல்படாமல் இருப்பதும் தெரியவந்தது. ஆனால், செயலிழந்த தேயிலை தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கோ அல்லது குத்தகைக்கு விடுவதற்கோ கூட்டுத்தாபனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ச்சியான நட்டங்களுக்கு மூலதனப் பற்றாக்குறையே முதன்மைக் காரணம் என அதன் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அத்துடன், மூலதனம் இல்லாததால் உரம் மற்றும் அது சார்ந்த களைக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தாததும் நட்டத்திற்கு காரணம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு பிரதான காரணம் மூலதனப் பற்றாக்குறை மாத்திரமல்ல என குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியது. அதற்கமைய, பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் மிக அதிக ஊழியர் செலவு குறித்த தரவுகளை குழு சமர்ப்பித்ததுடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் செலவு சுமார் 75% எனத் தெரியவந்தது.
மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்கிய பின்னர் ஏனைய தரப்பினர் கையகப்படுத்தியமை தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீட்பதற்கு தேவையான சட்ட நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணிகளை உடனடியாக மீள் அளவீடு செய்யுமாறும், கூட்டுத்தாபனத்தினால் குத்தகை அடிப்படையில் இந்தக் காணி வழங்கப்பட்டுள்ளது, காணிகளை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யார், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிதி, வரி அடிப்படையில் வழங்கப்பட்ட நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பன உள்ளிட்ட விரிவான அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளாக 1.5 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளதாக இதன்போது தெரியவந்தது. அதற்கமைய, உடனடியாக தலையிட்டு உரிய கொடுப்பனவுகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்கி முடிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் 2024-2028 காலப்பகுதிக்கான கூட்டுத் திட்டமொன்றும் குழுவில் முன்வைக்கப்பட்டது. எவ்வாறாயினும், நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் சம்பந்தப்பட்ட கூட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படாதது குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது. அதனடிப்படையில் தமது நிறுவனத்தின் தேவையை அறியாமல் ஏனைய தரப்பினர் ஊடாக கூட்டுத் திட்டத்தை தயாரித்துள்ளமை குறித்த வருத்தம் தெரிவித்த குழுவின் தலைவர், உடனடியாக அமுல்படுத்தும் வகையில் நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய கூட்டுத் திட்டத்தை 02 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் தொடர்பில் முறையான தரவுக் கட்டமைப்பு இல்லாமை பற்றி அதிருப்தியை குழு வெளியிட்டதுடன், அது தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக குழுவிற்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஆகியோரும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

