பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-02-27
செய்தி வகைகள் : குழு செய்திகள்
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடுவதற்கு இடமாளிக்காது அரச தனியார் பங்குடமையாக முன்னெடுத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஜனாதிபதியிடம் முன்வைக்குமாறு தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (பெப். 20) அவருடைய தலைமையில் கூடியபோதே இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
வாழைச்சேனை தொழிற்சாலையில் இயந்திரங்கள் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டவை என்றும் அவற்றைப் பழுதுபார்ப்பதற்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும், திரைசேரியிடமிருந்து போதிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமையால் இதனை அரச தனியார் பங்குடமையாக முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான காணியை சுற்றுலாத்துறைக்காக ஒதுக்குவதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர இங்கு தெரிவித்தார்.
1.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து தொழிற்சாலையின் இயந்திரங்களைப் பழுதுபார்த்தால் நாளொன்றுக்கு 5 டொன் வீதம் உற்பத்தியை மேற்கொண்டு மாதமொன்றுக்கு 22 மில்லியன் ரூபா இலாபம் மீட்ட முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. 340 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இதன் காணியை சுற்றுலாத்துறைக்கு முழுமையாக எடுக்காது அதில் ஒரு பகுதியை மாத்திரம் குறித்த தேவைக்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மூடுவதாக இருந்தால் அதனை விற்பனை செய்வதற்குப் பதிலாக அரச தனியார் பங்குடமையாக நடத்துவதன் முக்கியத்துவத்தை குழு பரிந்துரைத்ததுடன், இது சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்தது.
அத்துடன், சுற்றுலாத்துறையில் மாத்திரம் தங்கியிருப்பதற்குப் பதிலாக, நாட்டின் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்து அதன் ஊடாக உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது முக்கியமானது என்றும் குழு வலியுறுத்தியது. இந்நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 15 % மாத்திரமேயாகும், எனினும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை 30% என்றும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கைத்தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியின் அளவு நூற்றுக்கு 0.04 வீதமாகும் என்றும், வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை 3% என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், தோல் கைத்தொழிலுக்காக விசேடமான வலயமொன்றை ஒதுக்குவது குறித்த பிரச்சினை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை இரண்டையும் அபிவிருத்தி செய்வது குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், அரசிறைக்கொள்கைத் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையைக் கவனத்தில் கொண்டு, இந்நாட்டில் வரி வசூலிக்கும் செயற்பாட்டின் குறைபாடுகள் குறித்தும் குழுவின் தலைவர் கவனம் செலுத்தினார். அதிக வருமானத்தை ஈட்டும் நபர்கள் வரி வலைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் போது, குறைந்த வருமானத்தைப் பெறும் நபர்கள் மாத்திரம் அவற்றில் இணைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வரிக் கொள்கை இதனைவிட விரிவானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார். உள்நாட்டு இறைவரி சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு நிதி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் முன்நின்றி செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ரமிஸ் கட்டமைப்புடன், காணிப் பதிவாளர் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றை இணைத்துக்கொள்ளுமாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டபோதும் இதுவரையில் இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமை குறித்து குழுவின் தலைவர் விசனம் தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தற்காலிக வற்வரி பதிவு இலக்கம் வழங்கப்படுவதால் அரசாங்கத்துக்குப் பாரிய வரி இழப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அரசாங்கக் கணக்குகள் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கை, HDFC வங்கியின் 2020ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கை, வர்த்தக வாணிப அமைப்பின் 2022ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கை, இலங்கை ஒத்தியல் மதிப்பீட்டுக்கான தராதர அங்கீகார சபை யின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, கூட்டுறவு சேவைகள் ஆணைக்குழுவின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை என்பனவும் இங்கு ஆராயப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரான் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

