E   |   සි   |  

2024-01-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மாத்தறை நகரின் குடிநீர் மற்றும் வெள்ளப் பிரச்சினை தொடர்பாக வழிவகைகள் பற்றிய குழுவில் அவதானம்

  • நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் இணைத்து நில்வளா வெள்ளம் குறித்து திட்ட ஆய்வொன்றை மேற்கொண்டு வெள்ளப்பெருக்கு எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதற்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் பற்றிய குழு பரிந்துரை
  • கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்து அறிக்கை கோரல்
  • வெள்ளப்பெருக்குக் காரணமாக ஒன்பது போகங்கள் பாதிப்பை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு  பெற்றுக் கொடுப்பதற்கும் அறிவுறுத்தல்
  • மணல் தடுப்பை முற்றாக அகற்றி வடிகால்களில் காணப்படும் தடைகளை நீக்கி அவற்றை சீர் செய்யவும் பணிப்புரை
  • எதிர்கால நீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு தற்பொழுது காணப்படும் பழைய 5 நீர்த்தேக்கங்களையும் மீண்டும் புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல்


விரைவில் நகரமயப்படுத்தப்பட்டுவரும், மூலோபாய நகராக வளர்ச்சி கண்டுவரும் மாத்தறை நகரில் காணப்படும் குடிநீர் மற்றும் வெள்ளநீர் பிரச்சினை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களுடன் இணைந்து உலக வங்கியின் திட்டத்தின் நீட்சியாக திட்ட ஆய்வொன்றைத் தயாரித்து அதுபற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க இன்று (ஜன. 24) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

நில்வளா கங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழு இன்று (24) கூடியபோதே அதன் தலைவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

இந்த அமர்வுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், தென் மாகாண நீர்வழங்கல் சபை, மாத்தறை மாவட்ட செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

2023 ஆண்டு நில்வளா கங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நில்வளா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இயற்கையான நிலைமையா அல்லது அமைக்கப்பட்ட உப்பு நீர் தடுப்பு அணையினால் ஏற்பட்ட நிலைமையா என்பது குறித்து குழுவின் தலைவர் வினவினார். மக்களின் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட உப்பு நீர் தடுப்பணை இந்த வெள்ள நிலைமைக்கு நேரடிக் காரணம் என்பது இங்கு தெரியவந்ததுடன், வெள்ளப்பெருக்குக் காரணமாக கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர், மாத்தறை மாவட்ட செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

உப்பு நீர் தடுப்பு அணைக்கு மேலதிகமாக மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சி, நில்வளா கங்கையின் படுகையில்  சகதி படிந்தமை, பழைய உப்பு நீர் தடுப்பணை அகற்றப்படாமையால் இரண்டு தடுப்பணைகள் உருவாகியமை மற்றும் மணல் தடுப்புக்கள் அகற்றப்படாமை போன்றவை இந்த வெள்ள சூழ்நிலைக்குக் காரணமாக அமைந்ததாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. வடிகான்களில் சகதிகள் அகற்றப்படாமை மற்றும் அவை ஒழுங்கான முறையில் பராமரிப்பதற்கு நிதி மற்றும் உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலைமையால் சரியான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரியவந்தது. அத்துடன், அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது போடப்பட்ட தற்காலிக மாற்று வீதிகள் இதுவரை அகற்றப்படாமையும் வெள்ள நிலைமைக்கு வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நில்வளா பள்ளத்தாக்கில் வெள்ள நிலைமை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. மக்களைப் பாதித்துள்ள இந்த சமூகப் பிரச்சினை தொடர்பில் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி நீர்ப்பாசனத் திணைக்களம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிந்திருந்ததாகவும், உப்பு நீர் தடுப்பு அணையை விட மணல் தடுப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. மேலும் நில்வளா பாதுகாக்கப்பட்ட பகுதியில் மழைநீரை ஆற்றுக்கு வெளியேற்றும் பம்பிகளுக்குப் போதிய எரிபொருள் இன்மையும் பிரச்சினையாக அமைந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நீரை வெளியேற்றும் நிலையங்கள் புனரமைக்கப்படவில்லையென்றும் 2010 ஆம் ஆண்டு இந்த நீர் பம்பிகளின் இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலை தொடர்பாக நடத்தப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.

மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து மண் தடுப்பை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கான செயற்பாடுகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகற்றப்பட வேண்டும் என்றும், நில்வளா கங்கையில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு அதனை ஆழப்படுத்தும் பணியை நீர்ப்பாசணத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் அது பற்றிய அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நீர்த்தேவைகளை பரிசீலித்து, பழைய 5 நீர்த்தேக்கங்களை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ அநுராத ஜயரத்ன, கௌரவ ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ டலஸ் அழகப்பெரும, கௌரவ புத்திக பத்திரன, கௌரவ கருணாதாச கொடித்துவக்கு மற்றும் கௌரவ வீரசுமண வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks