பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-12-18
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கையில் தொழில்புரியும் பெண்களுடைய 0-5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தொடர்பில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்துப் பாராளுமன்றத்தில் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை பற்றி துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 0-5 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகள் தாயின் பாதுகாப்பு இன்றி வளர்ந்துவரும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற சமூகத்தாக்கம் எதிர்வரும் 20-25 வருடங்களில் சமூகம் என்ற ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல தலைமையில் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி கூடியது.
02/2023 ஆம் இலக்க அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய 02 வயது மற்றும் அதற்கு மேலான வயதையுடைய குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், இதனால் குழந்தைகள் தாய்ப்பால் பெறும் திறனை இழப்பதுடன், தாய்க்கும் சேய்க்கும் இடையிலான இணைப்பு இழக்கப்படுவதாகக் குழு சுட்டிக்காட்டியது.
மேலும், சிறுவயதிலேயே தாயைப் பிரிந்திருப்பதால் எதிர்காலத்தில் மிகவும் சண்டை சச்சரவுகள் நிறைந்த தலைமுறை உருவாகும் என்றும், தாய் வெளிநாடு செல்வதால் குழந்தைப் பருவம் முதலே பிள்ளைகளுக்கு அரவணைப்புக் கிடைக்காமையால் அவ்வாறான பிள்ளைகள் எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுக்கு அடிமையாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், ஏனையவர்களின் பராமரிப்பில் கீழ் இருக்கும்போது அயல்வீட்டார்கள் மாத்திரமன்றி, தந்தை, பேரன் போன்ற நெருங்கிய உறவினர்களாலேயே அவ்வாறான குழந்தைகள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் முறையான பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படும் பகல்நேர பராமரிப்பு மையங்களின் வலுவான தேவை உள்ளது என்றும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் பகல்நேர பராமரிப்பு மையங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் குறிப்பிட்ட நிறுவனம் இல்லை எனவும், பகல்நேர பராமரிப்பு மையங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், இவற்றின் தரங்களில் குறைபாடுகள் இருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இலங்கையில் உள்ள பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்களின் விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என குழு கருத்து தெரிவித்தது.
இதன்படி, இலங்கையில் உள்ள பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் தரத்தை ஒழுங்குபடுத்தவும், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தவும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்தது.
இந்த அமர்வில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ டளஸ் அழகப்பெரும, கௌரவ டி.வீரசிங்ஹ, கௌரவ மஞ்சுளா திசாநாயக மற்றும் குழுவின் உறுப்பினர் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே.சி.அலவத்துவல ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தைத் திணைக்களம், முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஆகியோரும் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

