logo

03

E   |   සි   |  

2023-12-10

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பதவி உயர்வின் போது பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாகச் சரி செய்யவும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பாராளுமன்ற விசேட குழு பரிந்துரை

  • தற்பொழுது பொலிஸ் சேவையில் படையணியில் 15% க்கும் அதிகமானவர்கள் பெண் அதிகாரிகள்
  • ஆட்சேர்ப்பு, பயிற்சி, பணியமர்த்துதல் மற்றும் ஓய்வு பெறுதல் என்பன சமமாக இருந்தாலும் பதவி உயர்வில் மாத்திரம் பெண் அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது - பெண் அதிகாரிகள் குற்றச்சாட்டு

 

இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வு வழங்கும் போது பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்மை, இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் புலப்பட்டது.

இந்தக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (விசேட வைத்தியர்) கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் அண்மையில் (டிச. 07) பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயங்கள் புலப்பட்டன.

தற்பொழுது, மொத்தமாக 26 ஆண்டுகள் சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவியில் 4 ஆண்டுகள் நிறைவடைந்த 92 பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் பணியில் உள்ள நிலையில், அவர்களின் பதவி உயர்வு தொடர்பில் குறிப்பிடப்பட்ட முறையோ, வெற்றிடங்களை இனங்காணுவதோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என இதன்போது புலப்பட்டது. இந்த அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு முறை, சம்பள அளவுத்திட்டம் என்பன ஆண் அதிகாரிகளின் முறைமை போன்று சமமாக இடம்பெறுவதுடன், பயிற்சியும் எந்த மாற்றமுமின்றி ஒரே பயிற்சிப் பாடசாலையில் ஒன்றாக இடம்பெறுவதுடன், பயிற்சியின் பின்னர் பணியில் அமர்த்துவதும் மாற்றம் இன்றி ஒரே வகையில் மேற்கொள்ளப்படுவதுடன், ஓய்வுபெறும் முறைமையும் ஒரே வகையிலேயே இடம்பெறுகின்றது. எனினும், ஆண் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கும் போது வெற்றிடம் தொடர்பான சிக்கல் எழுப்பப்படுவதில்லை என்றும், பெண் அதிகாரிகளுக்கு மாத்திரம் இந்த வெற்றிடம் தொடர்பான சிக்கல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எழுப்பப்படுவதாக பரபட்சத்துக்கு உள்ளாகியுள்ள பெண் பொலிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதற்கான பரிகாரம் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றும், இதனால் சிரேஷ்டத்துவம் குறைவாக உள்ள ஆண் அதிகாரிகள் பதவி உயர்வு பெரும் அதேவேளை, பெண் அதிகாரிகளுக்கு நீண்ட காலம் ஒரே  பதவியில் இருக்க  ஏற்பட்டுள்ளதாக இதன்போது புலப்பட்டது.
 
அத்துடன், இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு, இலங்கை பொலிஸ் படையணியில் 15% க்கும் அதிகமானவர்கள் பெண் அதிகாரிகள் என்பதால், அனைத்துப் பதவிகளிலும், அந்தந்தப் பதவிகளில் 15% பெண் பிரதிநிதித்துவத்துக்கு வெற்றிடம் ஏற்படுத்துவதற்கு இதன்போது பிரேரிக்கப்பட்டது.

தற்பொழுது காணப்படும் சிக்கலைத் தீர்ப்பதற்கு, ஒரு சந்தர்ப்பத்தில் பதவி உயர்வு முறைமையைத் தயாரித்தல், இந்த முறைமையோ அல்லது வேறு பொருத்தமான முறைமையைத் தயாரித்து அந்தந்தப் பதவிகளுக்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள பெண் அதிகாரிகளை பதவிகளுக்கு நியமிக்கும் முறைமையை தயாரித்தல் மற்றும் குறிப்பிட்ட முறைமையொன்றின் மூலம் குறிப்பிட்ட காலப்பகுதியில் பதவி உயர்வு வழங்குவதற்கு நியாயமான முறையைத் தயாரித்தல் என்பன தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், புதிய வெற்றிடங்களை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அடங்கிய முன்மொழிவை முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன்போது குழுவின் தலைவர், தற்பொழுது பொலிஸ் சேவையில் மொத்தப் படையணியில் 15% க்கும் அதிகமானவர்கள் பெண் அதிகாரிகள் சேவையிலுள்ளதால், தற்பொழுது காணப்படும் வெற்றிடங்களில் 15% வீதத்தை பெண் அதிகாரிகளுக்கு ஒதுக்கி இந்த சிக்கலைத் தீர்க்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பரிந்துரை வழங்கினார்.  

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முதிதா பிரசாந்தி மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2026-07-01

விசேட கல்வித்துறை மற்றும் விசேட பாடசாலைகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது

இயலாமையுடைய நபர்களுக்கான விசேட கல்வி மற்றும் விசேட பாடசாலைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் இத்துறையில் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இது பற்றிய  இடம்பெற்றதுடன், இதில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரத் ஆனந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறையின் போது விசேட கல்வித் துறையும் பிரதான அங்கமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது. இயலாமையுடைய மாணவர்களின் கற்றல் திறன்கள் மற்றும் அவர்களது கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, மேலும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட கல்வி முறைமையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.அத்துடன், விசேட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் நிர்வாக மற்றும் தொழில்சார் பிரச்சினைகள், பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய சவால்கள், பாடத்திட்ட மேம்பாடு, விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்குப் பொருத்தமான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.விசேட கல்விக்கான துறையில் நடைமுறை அனுபவமுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளும் பரிந்துரைகளும் எதிர்கால கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும் போது கருத்திற்கொள்ளப்படும் என தேசிய கல்வி ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.அத்துடன், எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பாக நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்களில் விசேட பாடசாலைகளின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்வதற்கும், இயலாமையுடைய நபர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள்,  தேசிய கல்வி ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் திலக் தர்மரத்ன, கல்வி அமைச்சின் முறைசாரா மற்றும் விசேட கல்விப் பிரிவின் அதிகாரிகள், இயலாமையுடைய மாணவர்களுக்கான விசேட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் அப்பாடசாலைகளின் நிர்வாகிககள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-25

திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவில் சமர்ப்பிப்பு

அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 23) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பளிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.அமெரிக்க டொலர் மில்லியன் 2.5 காணாமல் போனமை தொடர்பில் கடந்த 08ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் ஆராய்ந்து பார்க்கப்பட்ட பின்னர், அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து, குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.இந்தக் கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் (CERT) அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


2026-06-23

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் ஆய்வு

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு, 2021-2023 மூன்றாண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் இத்திணைக்களத்தின் செயலாற்றுகை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்து ஆராயப்பட்டது.பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் சொத்துக்களைப் பெறும் பல்வேறு வழிகள், ஒவ்வொரு சொத்தும் பெறப்பட்ட காலப்பகுதிகள், அச்சொத்துக்கள் யாரால் மாற்றப்பட்டன, அந்த மாற்றத்திற்குப் பொருந்தக்கூடிய நிபந்தனைகள் போன்றவை அடங்கிய ஒரு அறிக்கையை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறு 2024ஆம் ஆண்டு மே மாதம் குழுவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் வினவினார். இதடன் தொடர்புடைய தரவுகள் அடங்கிய அறிக்கை குழுவிற்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திடம் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் சொத்துக்களின் எண்ணிக்கை குறித்த ஒரு அறிக்கையையும் குழுவிற்கு வழங்குமாறு குழு பரிந்துரைத்தது.காலி பத்தேக, சுதுவலிபொத்த பகுதியில் அமைந்துள்ள ஹரி ஹபுகொட பெருந்தோட்டத்திற்குச்  சொந்தமான 113 ஏக்கர் காணியை குத்தகைக்கு கேள்விப்பத்திரம் கோரல் குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. மதிப்பிடப்பட்ட பெறுமதியை விட அதிக பெறுமதிக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த நிலத்தின் சில பகுதிகள் பல்வேறு தரப்பினரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதும் இங்கு தெரியவந்தது.ரிச்மண்ட் காசல் கட்டடத்தின் பராமரிப்பு குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஜூலை மாதத்திற்குள் இந்தக் கட்டடடத்தின் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இங்கு காணப்படும் தென்னை விளைச்சல் நன்றாக இருப்பதாகவும், ஆனால் அது முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.இக்குழுக் கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களனா சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, ஒஷானி உமங்கா, சட்டத்தரணி சாகரிக்கா அதாவுட, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரிஆரச்சி, அஜந்த கம்மத்தகே, லால் பிரேம்நாத், ருவன்திலக ஜயக்கொடி மற்றும் சுனில் ரத்னசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-06-23

கல்வித் துறை தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்து

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில் ஆரம்பப் பாடசாலைகளின் கட்டுமானத்தில் ஒரு தரநிலையின்படி பொதுவான திட்டம் மற்றும் மாதிரிகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம், மாற்றுப் பாடசாலைகளின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள், மாகாண மட்டத்தில் பாடசாலைகளின் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொழிற்கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன. இவ்விடயங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த கௌரவ பிரதமர், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவயைான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தினார்.மேலும், இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட உப குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கேட்டறியப்பட்டது.கௌரவ கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கௌரவ தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவகே, குழுவின்  உறுப்பினர்கள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவேவ உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks