01

E   |   සි   |  

2023-12-10

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பதவி உயர்வின் போது பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாகச் சரி செய்யவும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பாராளுமன்ற விசேட குழு பரிந்துரை

  • தற்பொழுது பொலிஸ் சேவையில் படையணியில் 15% க்கும் அதிகமானவர்கள் பெண் அதிகாரிகள்
  • ஆட்சேர்ப்பு, பயிற்சி, பணியமர்த்துதல் மற்றும் ஓய்வு பெறுதல் என்பன சமமாக இருந்தாலும் பதவி உயர்வில் மாத்திரம் பெண் அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது - பெண் அதிகாரிகள் குற்றச்சாட்டு

 

இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வு வழங்கும் போது பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்மை, இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் புலப்பட்டது.

இந்தக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (விசேட வைத்தியர்) கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் அண்மையில் (டிச. 07) பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயங்கள் புலப்பட்டன.

தற்பொழுது, மொத்தமாக 26 ஆண்டுகள் சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவியில் 4 ஆண்டுகள் நிறைவடைந்த 92 பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் பணியில் உள்ள நிலையில், அவர்களின் பதவி உயர்வு தொடர்பில் குறிப்பிடப்பட்ட முறையோ, வெற்றிடங்களை இனங்காணுவதோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என இதன்போது புலப்பட்டது. இந்த அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு முறை, சம்பள அளவுத்திட்டம் என்பன ஆண் அதிகாரிகளின் முறைமை போன்று சமமாக இடம்பெறுவதுடன், பயிற்சியும் எந்த மாற்றமுமின்றி ஒரே பயிற்சிப் பாடசாலையில் ஒன்றாக இடம்பெறுவதுடன், பயிற்சியின் பின்னர் பணியில் அமர்த்துவதும் மாற்றம் இன்றி ஒரே வகையில் மேற்கொள்ளப்படுவதுடன், ஓய்வுபெறும் முறைமையும் ஒரே வகையிலேயே இடம்பெறுகின்றது. எனினும், ஆண் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கும் போது வெற்றிடம் தொடர்பான சிக்கல் எழுப்பப்படுவதில்லை என்றும், பெண் அதிகாரிகளுக்கு மாத்திரம் இந்த வெற்றிடம் தொடர்பான சிக்கல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எழுப்பப்படுவதாக பரபட்சத்துக்கு உள்ளாகியுள்ள பெண் பொலிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதற்கான பரிகாரம் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றும், இதனால் சிரேஷ்டத்துவம் குறைவாக உள்ள ஆண் அதிகாரிகள் பதவி உயர்வு பெரும் அதேவேளை, பெண் அதிகாரிகளுக்கு நீண்ட காலம் ஒரே  பதவியில் இருக்க  ஏற்பட்டுள்ளதாக இதன்போது புலப்பட்டது.
 
அத்துடன், இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு, இலங்கை பொலிஸ் படையணியில் 15% க்கும் அதிகமானவர்கள் பெண் அதிகாரிகள் என்பதால், அனைத்துப் பதவிகளிலும், அந்தந்தப் பதவிகளில் 15% பெண் பிரதிநிதித்துவத்துக்கு வெற்றிடம் ஏற்படுத்துவதற்கு இதன்போது பிரேரிக்கப்பட்டது.

தற்பொழுது காணப்படும் சிக்கலைத் தீர்ப்பதற்கு, ஒரு சந்தர்ப்பத்தில் பதவி உயர்வு முறைமையைத் தயாரித்தல், இந்த முறைமையோ அல்லது வேறு பொருத்தமான முறைமையைத் தயாரித்து அந்தந்தப் பதவிகளுக்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள பெண் அதிகாரிகளை பதவிகளுக்கு நியமிக்கும் முறைமையை தயாரித்தல் மற்றும் குறிப்பிட்ட முறைமையொன்றின் மூலம் குறிப்பிட்ட காலப்பகுதியில் பதவி உயர்வு வழங்குவதற்கு நியாயமான முறையைத் தயாரித்தல் என்பன தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், புதிய வெற்றிடங்களை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அடங்கிய முன்மொழிவை முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன்போது குழுவின் தலைவர், தற்பொழுது பொலிஸ் சேவையில் மொத்தப் படையணியில் 15% க்கும் அதிகமானவர்கள் பெண் அதிகாரிகள் சேவையிலுள்ளதால், தற்பொழுது காணப்படும் வெற்றிடங்களில் 15% வீதத்தை பெண் அதிகாரிகளுக்கு ஒதுக்கி இந்த சிக்கலைத் தீர்க்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பரிந்துரை வழங்கினார்.  

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முதிதா பிரசாந்தி மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2026-05-25

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு முதற் தடவையாகக் கூடியது

குழுவிற்குப் பொதுமக்களின் முன்மொழிவுகளைப் பெறவும் தீர்மானம்தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.தேர்தல் முறைமை தொடர்பான சட்டம், அத்துடன் வாக்காளர்களைப் பதிவுசெய்யும் சட்டம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டம், கடந்த காலங்களில் குறித்த சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இக்குழுவினால் மீளாய்வு செய்யப்படவுள்ளன.அத்துடன், மேற்கூறிய சட்டங்களைத் திருத்தியமைத்தல், சீரமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் தேவையை மதிப்பிடுவதும், தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களையும் திருத்தங்களையும் பரிந்துரைப்பதும் இந்தக் குழுவின் பணியாகும்.மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை நடத்துவது அவசியம் எனக் குழு தீர்மானிக்கும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் குழு முன்னிலையில் அழைப்பதற்கும், எந்தவொரு ஆவணம் அல்லது அறிக்கையை சமர்ப்பிக்கக் கோருவதற்கும், குழு அவசியமெனக் கருதும் எழுத்துபூர்வமான அல்லது வாய்மொழியான அனைத்துச் சான்றுகளைப் பெறுவதற்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அதேநேரம், குழுவின் பணிகளுக்கு உதவுவதற்காக, தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்கள் மற்றும் வல்லுநர்களின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவும், இந்த மதிப்பாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின்  உறுப்பினர்கள் ஏகமனதாக இணங்கினர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜே.சீ.அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-05-21

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு உப குழு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் அவர்கள் தலைமையில் உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து கலந்துரையாடுவதற்கு சுற்றூடல் அமைச்சு, வலுசக்தி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இதில் பங்கெடுத்திருந்தனர். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்தும், அதற்குப் பொறுப்பான தரப்பினர் மற்றும் நிறுவனங்களால் ஏதேனும் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின்னரே குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக உப குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.இலங்கையில் உள்ள ஜேர்மன், ஜப்பான் மற்றும் சீன தூதுரகங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் போன்றவற்றுடன் கலந்துரையாடி அந்தந்த நாடுகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள சூழல்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வது தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சித் திட்டமொன்றை வழங்குவது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கவிருப்பதாக குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார்.


2026-05-21

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஐந்து செயலாற்றுகை அறிக்கைகளுக்கு அங்கீகாரம்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய ஆளுகை, நீதி மற்றும் சிவல் பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் ஐந்து செயலாற்று அறிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைய 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான ஜனாதிபதி செயலகத்தின் செயலாற்று அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடல் இடம்பெற்று அங்கீகாரம் அளிக்கப்பட்டது, அத்துடன், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான பிரதமர் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் குழுவில் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.அத்துடன், பதிவுசெய்யப்பட்ட நில அளவையாளர்களினால் தயாரிக்கப்படும் வரைபடங்களைப் பதிவுசெய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் 2002ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க நில அளவைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா சமர்ப்பித்த முன்மொழிவு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, முஜிபுர் ரஹுமான், (ஜனாதிபதி சட்டத்தரணி) பைஸர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்ஹ, எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் மேஜர் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-05-19

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் ரூ. 10,000 கொடுப்பனவு – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலையீட்டுடன் எடுக்கப்பட்ட முடிவு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர்.குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது.சிறு குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதனால் சமூகத்தில் எழும் பிரச்சினைகளில் தலையிடுமாறு இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) வழங்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். இதற்கு அமைய வெளிநாடுகளுக்குப் பணியாற்றச் சென்ற பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலராக இருந்தாலே இந்தக் கொடுப்பனவு ஏற்புடையது என்றும், இதனை நடைமுறைப்படுத்த முதற்கட்டமாக ரூ.10 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.அதேநேரம், இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இதன் பின்னர் மாவட்ட செயலகங்களின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மிகவும் சாதகமான இந்தப் பணி குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இங்கு தெரிவித்தார்.இதற்கு முன்னர் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய பெண் பொலிஸ் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதுவரையில் 50 பெண் பொலிஸ் பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதற்கும், 2600 பெண் கான்ஸ்டபில்களை இணைத்துக் கொள்வதற்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு சமூக ஊடகங்களில் பிரசார நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீ லங்கா பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ் பேசும் குடும்ப நல சுகாதார சேவையாளர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றை நிவர்த்தி செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். தமிழ் மொழியில் கல்வி பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையைப் பூர்த்தி செய்த மாணவ மாணவியர் இது தொடர்பில் கவனம் செலுத்துவது பற்றி விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படும் இந்நாட்டு சிறுவர்கள் பற்றிய சகல தகவல்களையும் சேகரித்து தேசிய தகவல் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தலையீட்டுடன் தகவல் கட்டமைப்பைத் தயாரிக்கும் பணி இடம்பெற்று வருவதாகவும், இவ்வருட இறுதிக்குள் இதனைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீதியை விரைவில் நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் இதன் பின்னரான சூழ்நிலைகளை முகாமைத்துவம் செய்வதற்கு சகல நிறுவனங்களும் உடனடியாக ஒன்றிணைந்த முறையில் செயற்பட வேண்டிதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. இதற்கு அமைய, பிரதேச செயகங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, ஸ்ரீலங்கா பொலிஸ் உள்ளிட்ட சகல நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளை ஒரு குழுவாக ஒன்றிணைத்து செயற்படுத்த வேண்டும் என்றும் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அல்லது ஏனைய சம்பவங்கள் தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது அவசர நடவடிக்கை குறித்து  விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும். அத்துடன், வட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரிவிக்க முடியும் என்றும், கூடிய விரைவில் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்தல், சகல முன்பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவை இலவசமாக வழங்குதல் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்புடனான  ஓய்வூதியம் வழங்குவது ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை அடுத்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அரசாங்க சேவையில் உள்ள பெண்களின் இடமாற்றங்ளின் போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள், முன்பள்ளி மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.அதேபோல, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், இது தொடர்பில் குழு குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.ரி. வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks