E   |   සි   |  

2023-12-02

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கையில் இயலாமையுடைய நபர்களுக்கு நீதி கிடைக்காமையால், எதிர்காலத்தில் எவ்வித பாகுபாடும் இன்றி அவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுப்போம் – இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பு

  • அடுத்த தேசிய தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்கு தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டுக்கள் (Tactile ballot paper) – தேர்தல்கள் ஆணையாளர்  நாயகம் உறுதியளிப்பு
  • இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இயலாமையுடைய சமூகத்துக்கு ஏற்ற வகையில் பஸ் வண்டிகளைப் பெற்றுக்கொள்வது குறித்த யோசனை பாராளுமன்றத்தில்
  • பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களுக்குச் செல்வதற்கான வசதிகள் இல்லாததால் இயலாமையுடைய சமூகத்தினருக்குக் பெரும் அநீதி - இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி சுட்டிக்காட்டு


இயலாமையுடைய நபர்களுக்காக இலங்கைக்குள் இதுவரை நீதி கிடைக்கப்பெறவில்லையென்றும், இது நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை என்பதுடன், எவ்வித கட்சி பேதமும் இன்றி இது தொடர்பில் எதிர்காலத்தில் குரல்கொடுக்கவிருப்பதாகவும் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இயலாமையுடைய நபர்களுக்கான சர்வதேச தினம் டிசம்பர் 03ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (01) பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.

இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி உள்ளிட்ட சில தரப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் எவ்வித அரசியல் வேறுபாடும் இன்றி கடந்த டிசம்பர் மாதம் இந்த ஒன்றியைத்தை உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்ட ஒன்றியத்தின் தலைவர், இயலாமையுடைய நபர்களின் உரிமைகளுக்காகப் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் தாம் குரல்கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் 600 பஸ்களை கொள்வனவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதால், இயலாமையுடைய நபர்களுக்கான சில பஸ்களை கொள்வனவு செய்து முன்னோடித் திட்டமொன்றை முன்னெடுப்பது பற்றிய யோசனையொன்றை எதிர்வரும் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்மொழியவிருப்பதாக கௌரவ அழகப்பெரும தெரிவித்தார். இந்த யோசனையைக் வந்த தேசிய ஜனநாயக நிறுவனத்திற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இயலாமையுடைய நபர்களுக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தில் இலங்கை 2006ஆம் ஆண்டு கைச்சாத்திட்டபோதிலும், அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில்  இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  இவ்வாறான நிலையில் கொள்கை வகுப்பில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இயலாமையுடைய நபர்களுக்காக அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே தமது ஒன்றியத்தின் நம்பிக்கை என்றும் தெரிவித்தார்.

இயலாமையுடைய சமூகத்தின் தேவைகள் பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்காகக் குரல்கொடுப்பது மற்றும் அந்தந்த நிறுவனங்களை ஒன்றுதிரட்டி ஒன்றிணைந்த குரலாக மாற்றுவது தமது ஒன்றியத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க குறிப்பிடுகையில்,  தேசிய ரீதியில் நடைபெறும் அடுத்த தேர்தலில் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை (Tactile ballot paper) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 வாக்களிப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் வெற்றியளித்திருப்பதாக அவர் தெரிவித்தார். செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் தேவைகள் மற்றும் இயலாமையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடிய வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கு விசேட அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ரத்னாயக்க தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே குறிப்பிடுகையில், நாட்டின் சனத்தொகையில் 8.7%, அதாவது கிட்டத்தட்ட 16 இலட்சம் பேர் இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகமாகக் காணப்படுகிறது. அத்தரப்பினருக்காகக் குரல்கொடுக்க செப்டம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்ற ஒன்றியமொன்றை அமைக்கக் கிடைத்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும் கூறினார்.  இந்த நாட்டில் பல பொது இடங்களில் வசதிகள் இல்லாததால், இயலாமையுடைய நபர்களுக்கு பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நபர்கள் பாரிய அளவில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவது மற்றும் அவர்களின் கல்விக்குக் காணப்படும் தடைகள் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார்.

எனவே இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை சட்டரீதியாக அமுல்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அவர்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் இச்சமூகத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இயலாமையுடைய நபர்களுக்கான உரிமைகளை மதிக்கும் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஊடகங்களின் பொறுப்பும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் விசேட சித்தியைப்பெற்று விஞ்ஞானத் துறையில் உயர்கல்வியைத் தொடர்ந்துவரும் விழிப்புலனாற்ற முதலாவது மாணவர் என்ற பெருமையைப் பெற்ற பிரையன் கிங்ஸ்டன் இங்கு கருத்துத் தெரிவித்ததுடன், தான் உள்ளிட்ட இயலாமையுடைய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர் முன்னிலைப்படுத்தினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, பிரெயில் வசதியுடன் தயாரித்துள்ள தனது அறிமுக அட்டையை (visiting Card) மஒன்றியத்தின் தலைவர் மற்றும் உயர்கல்வியைத் தொடரும் மாணவன் பிரையன் கிங்ஸ்டன் ஆகியோரிடம் வழங்கினார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுல்ளே, குறித்த ஒன்றியத்தின் உப தலைவர் கௌரவ ரோஹினி குமார விஜேரத்ன, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ கே.பி.எஸ்.குமாரசிறி, கௌரவ உதயன கிரிந்திகொட, பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, என்டிஐ நிறுவனத்தின் பணிப்பாளர் ஷியாமா கல்காது உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு USAID நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பு மற்றும் NDI நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2026-09-17

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருவது தொடர்பான ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும்  வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-17

பகிடிவதைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி  உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-15

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்களும் ஆசனப் பட்டி அணிவது செப்டெம்பர் 20 முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-09-14

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உபகுழுவில் கலந்துரையாடல்

மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks