பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்றுக் (நவ. 14ம் திகதி) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அழைக்கப்பட்டிருந்தது.
இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டு ரி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை (ஆண்கள்) கிரிக்கெட் போட்டிகள் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராகியிருந்தனர்.
அரசியலமைப்பின் 154 வது பிரிவு உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் கிரிக்கெட் நிறுவனத்தை கணக்காய்வுக்கு உட்படுத்தும் அதிகாரம் தமக்கு எவ்வாறு கிடைக்கின்றது என்பதை கணக்காய்வாளர் நாயகம் குழுவின் ஆரம்பத்தில் விளக்கினார்.
கிரிக்கெட் நிறுவனம் உள்ளிட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு தேவையான வழிகாட்டல்களும் உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்த போதிலும் அமைச்சின் தலையீடு மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமெனக் குழு வலியுறுத்தியது.
சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நிறைவேற்றுக் குழுவினால் அமைச்சரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டியபோதும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு அமைச்சரின் கவர் அனுமதியின் கீழ் 2022.10.07ஆம் திகதி செயலாளர் அனுமதி வழங்கியுள்ளபோதும், அமைச்சரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படாமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு அமைய அப்போதிருந்து முன்னாள் செயலாளரை எதிர்காலத்தில் அழைப்பதற்கும், அது தொடர்பான ஆவணங்களை ஆராய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா சுற்றுலாவுக்காக நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்களுக்காகக் கொடுக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ள 8 மில்லியன் ரூபா தொகை கணக்காய்வு விசாரணைகள் நடந்துகொண்டிருந்தபோது கணக்கிலிருந்து அகற்றப்பட்டமை மற்றும் இவை தொடர்பான பற்றுச்சீட்டுக்கள் கணக்காய்வுக்கு வழங்கப்படாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடைமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு வலியுறுத்தியது.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், 2020ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் அதிகாரங்களை நீக்குவதன் மூலம் விளையாட்டுக் கழகங்கள் விரும்பியவாறு செயற்படுவதற்கு அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்நிலைமையால் விளையாட்டு கழகங்களுக்கு அவர்கள் விரும்பியவாறு பணம் செலவழிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே 2016 ஆம் ஆண்டுக்கான சட்ட நிலைமையை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய பயணத்திற்கான விசா கடிதங்கள், விமான டிக்கெட்டுகள் வாங்குவது தொடர்பான கணக்காய்வு விசாரணைகள், வெளிநாட்டு பயணங்களுக்கு ஊடக நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் திறந்த முறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இதற்கமைய, கிரிக்கெட் நிறுவனத்தின் முறையான நடைமுறைகளை உருவாக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு குழு உத்தரவிடப்பட்டதுடன், கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளக கணக்காய்வுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசாரணையை மூன்று நாட்களுக்கு தொடரவும், அந்த நாட்கள் குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜனக வக்கம்புர, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர திஸாநாயக்க, கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ ஹேஷா விதானகே, கெளரவ சஞ்சீவ எதிரிமான்ன, கெளரவ ஜகத் குமார சுமித்ராராச்சி, கௌரவ மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல மஹேந்திர ராஜபக்ஷ, கௌர எம்.ராமேஸ்வரன், கௌரவ ராஜிகா விக்கிரமசிங்க, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், கோப் குழுவில் அங்கம் வகிக்காத பல பாராளுமன்ற உறுப்பினர்களும் குழுத் தலைவரின் அனுமதியுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



