E   |   සි   |  

2023-11-03

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சேவையை விட்டுச் சென்றதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்நாட்டின் வைத்தியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடமிருந்து அறவிடப்படவேண்டிய தொகை தொடர்பில் முழுமையான அறிக்கை வழங்கவும் - அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை

  • புதிய வைத்தியர்களை நியமிக்கும் போது தொழிற்சங்கங்கள் அழுத்தம் - சுகாதார அதிகாரிகள் கோபா  உப குழுவில் தெரிவிப்பு
  • பயிற்சி வைத்தியர்களின் பயிற்சிக் காலம் முடிந்த பிறகு, அவர்களை வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களாக நியமிக்க வினைத்திறனான வேலைத்திட்டத்தை அமைக்கவும் - சுகாதார அமைச்சுக்கு  கோபா உப குழுவின் ஆலோசனை
  • மொத்த அரச சேவை தொடர்பிலும் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கும் பொதுவான வேலைத்திட்டம் தேவை - சுகாதார அதிகாரிகள் கோபா உப குழுவிடம் தெரிவிப்பு

 

சேவையை விட்டுச் சென்றதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்நாட்டின் வைத்தியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடமிருந்து அரசாங்கத்துக்கு அறவிடப்படவேண்டிய தொகை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கை வழங்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவினால் சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

சேவையை விட்டுச் சென்றதாக வைத்தியர்களின் பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் முறை குறித்தும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் வினவப்பட்டது.

அரசாங்கக் கணக்குக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு 2023.10.31 ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தc கலந்துரையாடல் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் பணியாளர்கள் முகாமைத்துவம் தொடர்பான கணக்காய்வுப் பத்திகளை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் உபகுழுவின் முன்னிலையில்  அழைக்கப்பட்டிருந்தனர். சேவையை விட்டுச் சென்ற வைத்தியர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய பணத்தை அறவிடும் நடவடிக்கை திருப்திகரமற்ற மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாக இதன்போது கணக்காய்வினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கமைய, வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் மீண்டும் இந்நாட்டில் பணிக்கு திரும்பாத போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தலைவர் வலியுறுத்தினார்.

இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், கணக்காய்வு மூலம் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களின் பிரகாரம், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளதாகத்  தெரிவித்தனர். அதற்கமைய, வைத்தியர் ஒருவர் பணிக்கு சமூகமளிக்காமல் சேவையை விட்டு விலகிய சந்தர்ப்பங்களில், வைத்தியர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது கையொப்பமிட்ட உத்தரவாதத் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அது போதுமானதல்ல என ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள், ஒப்பந்தத்தை மீறியதற்காக அவர்களிடமிருந்து அறவிட வேண்டிய தண்டப்பணத்தை அறவிடுவது சரியாக இடம்பெறவில்லை எனவும் தற்பொழுது அந்தத் தண்டப்பணத்தை அறவிடுவதற்குத் தேவையான செயற்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

அதற்கமைய, வைத்தியர்களுக்கு மாத்திரமன்றி அரச சட்ட திட்டங்களுக்கு இணங்காத ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும் வகையில் முழு அரச சேவைக்கும் பொதுவான முறைமை தேவையென சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உப குழு முன்னிலையில் மேலும் கருத்துத் தெரிவித்தனர்.

பயிற்சியின் பின்னர் வைத்தியர்களாக பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதால், அவர்களுக்காக மாகாண சபைகளுக்கு அமைச்சினால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மீளப் பெறப்படாமை குறித்தும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். பயிற்சிக் காலம் முடிவடையும் போதே  அவர்களை வைத்தியசாலைகளில் வைத்தியர்களாக நியமிக்க முடியுமானால் இந்த நிலைமை ஏற்படாது என குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய, பயிற்சி மருத்துவர்களின் பயிற்சிக் காலம் முடிந்த பிறகு, அவர்களை வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களாக நியமிக்க வினைத்திறனான வேலைத்திட்டத்தை அமைக்குமாறு சுகாதார அமைச்சுக்கு  கோபா உப குழு ஆலோசனை வழங்கியது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், புதிய வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் போது தொழிற்சங்கங்கள் அழுத்தங்களை பிரயோகிப்பதாகத் தெரிவித்தனர். புதிய வைத்தியர்களுக்கு வழங்கும் நியமனங்களில் 80% கஷ்டப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கும் நகர்ப்புற வைத்தியசாலைகளுக்கு 20% வீதமும் வழங்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். புதிய வைத்தியர்களை நியமிப்பதில் தொழிற்சங்கங்கள் இவ்வாறு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவர் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பயிற்சிக்காக விடுமுறை அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் 8 மாதங்கள் இலங்கையிலேயே தங்கியிருந்து குறித்த வெளிநாட்டு பயிற்சி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்

எவ்வாறாயினும், அமைச்சின் விசாரணைப் பிரிவினால் பரிந்துரையைப் பெறாமல் அமைச்சின் செயலாளரினால் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் குறித்த அதிகாரிக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தயாரித்து குழுவிடம் வழங்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும், அமைச்சின் கீழுள்ள தாதியர் பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சிக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட தாதியர் மாணவிகள் பயிற்சியை விட்டுச் சென்றமை காரணமாக அறவிடப்பட வேண்டிய பணம் பெறப்படாமை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வுத் திணைக்களம் கேள்வி எழுப்பியது. 1999 முதல் 2017 வரையான தரவுகளை முன்வைத்த கணக்காய்வு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காலப்பகுதிக்கான சரியான தகவல்கள் சுகாதார அமைச்சிடம் இல்லை என சுட்டிக்காட்டினர். அதற்கமைய, தற்போது பயிற்சியை கைவிட்டவர்கள், அறவிட வேண்டிய தொகை மற்றும் இதுவரை அறவிடப்பட்டுள்ள தொகை குறித்து ஒரு மாதத்திற்குள் உப குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உப குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

2 1

 



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks