பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-11-03
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சேவையை விட்டுச் சென்றதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்நாட்டின் வைத்தியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடமிருந்து அரசாங்கத்துக்கு அறவிடப்படவேண்டிய தொகை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கை வழங்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவினால் சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
சேவையை விட்டுச் சென்றதாக வைத்தியர்களின் பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் முறை குறித்தும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் வினவப்பட்டது.
அரசாங்கக் கணக்குக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு 2023.10.31 ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தc கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் பணியாளர்கள் முகாமைத்துவம் தொடர்பான கணக்காய்வுப் பத்திகளை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் உபகுழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். சேவையை விட்டுச் சென்ற வைத்தியர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய பணத்தை அறவிடும் நடவடிக்கை திருப்திகரமற்ற மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாக இதன்போது கணக்காய்வினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கமைய, வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் மீண்டும் இந்நாட்டில் பணிக்கு திரும்பாத போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தலைவர் வலியுறுத்தினார்.
இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், கணக்காய்வு மூலம் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களின் பிரகாரம், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கமைய, வைத்தியர் ஒருவர் பணிக்கு சமூகமளிக்காமல் சேவையை விட்டு விலகிய சந்தர்ப்பங்களில், வைத்தியர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது கையொப்பமிட்ட உத்தரவாதத் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அது போதுமானதல்ல என ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள், ஒப்பந்தத்தை மீறியதற்காக அவர்களிடமிருந்து அறவிட வேண்டிய தண்டப்பணத்தை அறவிடுவது சரியாக இடம்பெறவில்லை எனவும் தற்பொழுது அந்தத் தண்டப்பணத்தை அறவிடுவதற்குத் தேவையான செயற்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
அதற்கமைய, வைத்தியர்களுக்கு மாத்திரமன்றி அரச சட்ட திட்டங்களுக்கு இணங்காத ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும் வகையில் முழு அரச சேவைக்கும் பொதுவான முறைமை தேவையென சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உப குழு முன்னிலையில் மேலும் கருத்துத் தெரிவித்தனர்.
பயிற்சியின் பின்னர் வைத்தியர்களாக பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதால், அவர்களுக்காக மாகாண சபைகளுக்கு அமைச்சினால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மீளப் பெறப்படாமை குறித்தும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். பயிற்சிக் காலம் முடிவடையும் போதே அவர்களை வைத்தியசாலைகளில் வைத்தியர்களாக நியமிக்க முடியுமானால் இந்த நிலைமை ஏற்படாது என குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய, பயிற்சி மருத்துவர்களின் பயிற்சிக் காலம் முடிந்த பிறகு, அவர்களை வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களாக நியமிக்க வினைத்திறனான வேலைத்திட்டத்தை அமைக்குமாறு சுகாதார அமைச்சுக்கு கோபா உப குழு ஆலோசனை வழங்கியது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், புதிய வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் போது தொழிற்சங்கங்கள் அழுத்தங்களை பிரயோகிப்பதாகத் தெரிவித்தனர். புதிய வைத்தியர்களுக்கு வழங்கும் நியமனங்களில் 80% கஷ்டப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கும் நகர்ப்புற வைத்தியசாலைகளுக்கு 20% வீதமும் வழங்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். புதிய வைத்தியர்களை நியமிப்பதில் தொழிற்சங்கங்கள் இவ்வாறு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவர் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பயிற்சிக்காக விடுமுறை அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் 8 மாதங்கள் இலங்கையிலேயே தங்கியிருந்து குறித்த வெளிநாட்டு பயிற்சி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்
எவ்வாறாயினும், அமைச்சின் விசாரணைப் பிரிவினால் பரிந்துரையைப் பெறாமல் அமைச்சின் செயலாளரினால் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் குறித்த அதிகாரிக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தயாரித்து குழுவிடம் வழங்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், அமைச்சின் கீழுள்ள தாதியர் பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சிக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட தாதியர் மாணவிகள் பயிற்சியை விட்டுச் சென்றமை காரணமாக அறவிடப்பட வேண்டிய பணம் பெறப்படாமை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வுத் திணைக்களம் கேள்வி எழுப்பியது. 1999 முதல் 2017 வரையான தரவுகளை முன்வைத்த கணக்காய்வு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காலப்பகுதிக்கான சரியான தகவல்கள் சுகாதார அமைச்சிடம் இல்லை என சுட்டிக்காட்டினர். அதற்கமைய, தற்போது பயிற்சியை கைவிட்டவர்கள், அறவிட வேண்டிய தொகை மற்றும் இதுவரை அறவிடப்பட்டுள்ள தொகை குறித்து ஒரு மாதத்திற்குள் உப குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உப குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

