01

E   |   සි   |  

2023-10-31

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஊழலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எதிராக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்காமையினால் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சின் பலவீனமான நிர்வாகம் குறித்து கோபா உபகுழு கடும் விசனம்

  • தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை உபகரண மோசடியில் சிக்கிய அதிகாரி 10 வருடங்களாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்
  • வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவது குறித்து உரிய கண்காணிப்பு முறை (Cross check) இல்லாமை பாரிய பிரச்சினை – சகல வைத்தியசாலைகளிலும் விரைவில் உரிய நிர்வாக நடைமுறையொன்றை செயற்படுத்தப் பரிந்துரை

 

கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வில் புலப்பட்ட விடயத்துக்கு அமைய ஊழல் மோசடியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் கௌரவ பிரதீப் உந்துகொட தலைமையில் அண்மையில் (ஒக். 25) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) நியமிக்கப்பட்ட உப குழுவில் கடும் விசனம் வெளியிடப்பட்டது.

இத்துறையில் ஊழல் முறைகேடுகள் மேலும் இடம்பெற்று வருவதால் இது சிலரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஒரு சிலரின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த தொழில் கௌரவம் பாதிக்கப்படுவதால், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உப குழு வலியுறுத்தியது.

2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்காய்வொன்றில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தின் மேற்கூரையில் சத்திரசிகிச்சைப் பொருட்களை மறைத்து வைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பணியாளர் ஒருவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை பற்றி குழு கவனத்தில் எடுத்தபோது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் தேசிய வைத்தியசாலையினால் நியமிக்கப்பட்ட குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு அமைய குற்றஞ்சாட்டப்பட்ட பணியாளுக்கு பணி இடைநிறுது்தம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய பணியாளர் ஒருவரை பணியிடைநிறுத்தம் செய்வது காலதாமதம் அடைவது, இச்சம்பவம் இடம்பெற்ற உடன் இருப்புக்களுக்கான புத்தகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை என்பன பிரச்சினைக்குரிய விடயங்கள் என கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த நிலைமையின் காரணமாக விசாரணையின் போது அல்லது நீதிமன்றத்தின் போது அவர்கள் குற்றமற்றவர்களாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும், ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க இது தடையாக இருப்பதாகவும் கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்தப் பணியாளர் 10 ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகளை செய்துள்ளார் என்பதும் தெரியவந்ததுடன், நிர்வாகத்தில் காணப்படும் பலவீனமே இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்தன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கு முறையான கண்காணிப்பு அமைப்பு (Cross check) செயற்படாததன் காரணமாகவே இவ்வாறான நீண்டகால மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய உப குழு, முறையான முகாமைத்துவ முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகள் மற்ற மருத்துவமனைகளில் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தியது.

இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உயர் மட்ட தாதியர்கள் குறித்தும் ஒழுக்காற்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை விரைவில் முன்னெடுப்பது குறித்தும் குழு வலியுறுத்தியது.

இதற்கு அமைய சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை அமைத்து இந்த மோசடி தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உபகுழு பணிப்புரை வழங்கியது.

இந்த கோபா உபகுழு சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை குழு முன்னிலையில் அழைத்திருந்ததுடன், 2019/2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான வைத்தியசாலை முகாமைத்துவம் குறித்த கணக்காய்வு விசாரணை குறித்து ஆராய்ந்திருந்தது.

சுகாதார அமைச்சின் கணக்குகள் தொடர்பான கணினி அமைப்பில் பெருமளவிலான காணாமற்போன சொத்துக்கள் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்கு முன்னரும் இது தொடர்பான கணக்காய்வு விசாரணையில் பரிந்துரைகள் இருந்ததால், கணக்கியல் அமைப்பில் நிதி அல்லாத சொத்துக்களை துல்லியமாக புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான முன்னேற்றம் குறித்து குழுவிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

குருநாகல், அனுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை குத்தகைக்கு விடுவது, மாத்தறை பொது வைத்தியசாலையின் துப்புரவு சேவையைப் பெற்றுக் கொள்வது, வைத்தியசாலை மருத்துவக் கழிவுகளை அகற்றுவது போன்றவற்றில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் முறைகேடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

16 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks