E   |   සි   |  

2023-10-31

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஊழலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு எதிராக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்காமையினால் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சின் பலவீனமான நிர்வாகம் குறித்து கோபா உபகுழு கடும் விசனம்

  • தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை உபகரண மோசடியில் சிக்கிய அதிகாரி 10 வருடங்களாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்
  • வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவது குறித்து உரிய கண்காணிப்பு முறை (Cross check) இல்லாமை பாரிய பிரச்சினை – சகல வைத்தியசாலைகளிலும் விரைவில் உரிய நிர்வாக நடைமுறையொன்றை செயற்படுத்தப் பரிந்துரை

 

கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வில் புலப்பட்ட விடயத்துக்கு அமைய ஊழல் மோசடியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் கௌரவ பிரதீப் உந்துகொட தலைமையில் அண்மையில் (ஒக். 25) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) நியமிக்கப்பட்ட உப குழுவில் கடும் விசனம் வெளியிடப்பட்டது.

இத்துறையில் ஊழல் முறைகேடுகள் மேலும் இடம்பெற்று வருவதால் இது சிலரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஒரு சிலரின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த தொழில் கௌரவம் பாதிக்கப்படுவதால், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உப குழு வலியுறுத்தியது.

2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்காய்வொன்றில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தின் மேற்கூரையில் சத்திரசிகிச்சைப் பொருட்களை மறைத்து வைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பணியாளர் ஒருவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை பற்றி குழு கவனத்தில் எடுத்தபோது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் தேசிய வைத்தியசாலையினால் நியமிக்கப்பட்ட குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு அமைய குற்றஞ்சாட்டப்பட்ட பணியாளுக்கு பணி இடைநிறுது்தம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய பணியாளர் ஒருவரை பணியிடைநிறுத்தம் செய்வது காலதாமதம் அடைவது, இச்சம்பவம் இடம்பெற்ற உடன் இருப்புக்களுக்கான புத்தகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை என்பன பிரச்சினைக்குரிய விடயங்கள் என கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த நிலைமையின் காரணமாக விசாரணையின் போது அல்லது நீதிமன்றத்தின் போது அவர்கள் குற்றமற்றவர்களாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும், ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க இது தடையாக இருப்பதாகவும் கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்தப் பணியாளர் 10 ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகளை செய்துள்ளார் என்பதும் தெரியவந்ததுடன், நிர்வாகத்தில் காணப்படும் பலவீனமே இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்தன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கு முறையான கண்காணிப்பு அமைப்பு (Cross check) செயற்படாததன் காரணமாகவே இவ்வாறான நீண்டகால மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய உப குழு, முறையான முகாமைத்துவ முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகள் மற்ற மருத்துவமனைகளில் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தியது.

இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உயர் மட்ட தாதியர்கள் குறித்தும் ஒழுக்காற்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை விரைவில் முன்னெடுப்பது குறித்தும் குழு வலியுறுத்தியது.

இதற்கு அமைய சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை அமைத்து இந்த மோசடி தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உபகுழு பணிப்புரை வழங்கியது.

இந்த கோபா உபகுழு சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை குழு முன்னிலையில் அழைத்திருந்ததுடன், 2019/2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான வைத்தியசாலை முகாமைத்துவம் குறித்த கணக்காய்வு விசாரணை குறித்து ஆராய்ந்திருந்தது.

சுகாதார அமைச்சின் கணக்குகள் தொடர்பான கணினி அமைப்பில் பெருமளவிலான காணாமற்போன சொத்துக்கள் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்கு முன்னரும் இது தொடர்பான கணக்காய்வு விசாரணையில் பரிந்துரைகள் இருந்ததால், கணக்கியல் அமைப்பில் நிதி அல்லாத சொத்துக்களை துல்லியமாக புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான முன்னேற்றம் குறித்து குழுவிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

குருநாகல், அனுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை குத்தகைக்கு விடுவது, மாத்தறை பொது வைத்தியசாலையின் துப்புரவு சேவையைப் பெற்றுக் கொள்வது, வைத்தியசாலை மருத்துவக் கழிவுகளை அகற்றுவது போன்றவற்றில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் முறைகேடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

16 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks