E   |   සි   |  

2023-10-31

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி (HDFC) கோப் குழு முன்னிலையில்

  • இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் வணிக மாதிரி தொடர்பில்  குழு கேள்வியெழுப்பியது
  • மின்சார சபையின் நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி வீதம் வழங்கியதால் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து குழுவின் கவனத்திற்கு
  • கொழும்பு 13, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள காணியின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பில் கவனத்திற்கு
  • பிம்புத் பைனான்ஸ் PLC நிறுவனத்துக்கு வழங்கியுள்ள கடன் தொடர்பில் கவனத்திற்கு
  • கடன் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்டதன் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் பதிவுகள் இழக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனத்திற்கு

 

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி (HDFC) அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்யப்பட்டது. அத்துடன், இந்த வங்கி இறுதியாக  2014 நவம்பரில் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் வணிக மாதிரி தொடர்பில்  குழு கேள்வியெழுப்பியது

இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் வணிக மாதிரி தொடர்பில் கோப் குழு கேள்வியெழுப்பியது. அதற்கமைய, இது தொடர்பில் எவ்வித தெளிவும் இல்லை என கோப் குழுவில் வெளிப்பட்டதுடன், வங்கியின் பெரும்பான்மையான பங்குகள் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருந்த போதிலும் வங்கி தொடர்பான தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தெளிவு இல்லை எனவும் குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இந்த சிக்கலை 6 மாதங்களுக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு அறிவுறுத்தியது.

மின்சார சபையின் நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி வீதம் வழங்கியதால் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து குழுவின் கவனத்திற்கு

மின்சார சபையின் நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி வீதம் வழங்கியதால் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து இதன்போது குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் இது குறித்துக் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், சாதாரண வட்டி வீதத்தை விட அதிகமாக இந்தக் கொடுப்பனவு இடம்பெற்றதன் காரணமாக வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு 69 மில்லியன் ரூபாவாகும். மூன்றாம் தரப்பாக ஒரு தரகர் நிறுவனம் இதில் ஈடுபட்டது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த தரகர் வங்கி தரப்பை சேர்ந்தவர் என்பது இதன்போது புலப்பட்டது. அத்துடன், இது தொடர்பில் தலையிட்ட நபருக்கு எச்சரிக்கை கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இது தொடர்பில் ஒரு மாத காலத்திற்குள் விசேட விசாரணைகளை நடத்தி, இந்த விடயத்தில் தலையிட்ட தரகர் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சுக்கு கோப் குழு பரிந்துரைத்தது.

கொழும்பு 13, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள காணியின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பில் கவனத்திற்கு

கொழும்பு 13, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள காணியின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. அவ்வப்போதைய நாட்டின் பொருளாதார நிலைமைக்கு அமைய இந்தக் காணியை விற்பனை செய்வது தொடர்பில் கருத்திற்கொள்வதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இது கொழுப்பு மாவட்டத்திலுள்ள பெறுமதிவாய்ந்த காணியொன்று எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் திறைசேரியின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு கோப் குழு பரிந்துரை வழங்கியது.

பிம்புத் பைனான்ஸ் PLC நிறுவனத்துக்கு வழங்கியுள்ள கடன் தொடர்பில் கவனத்திற்கு

பிம்புத் பைனான்ஸ் PLC நிறுவனத்துக்கு வழங்கியுள்ள கடன் தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி இந்த நிறுவனத்திற்கு 350 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்ட போதிலும், இந்த நிறுவனத்தின் கடனை மீளச் செலுத்தும் இயலுமை தொடர்பில் சிக்கல் காணப்படுவதாக இதன்போது தெரியவந்தது. அதற்கமைய, இந்தக் கடனை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பிணை தாரர்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பில் உள்ளக விசாரணையொன்றை நடத்தி மூன்று வாரங்களுக்குள் கோப் குழுவிடம் அறிக்கை அளிக்குமாறு இதன்போது குழு பரிந்துரைத்தது. மேலும், இந்த விடயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கோப் குழு தெரிவித்தது. அத்துடன், இந்தப் பிரச்சினையை இலஞ்ச ஊழல் திணைக்களத்திடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் கோப் குழு சுட்டிக்காட்டியது.

கடன் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்டதன் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் பதிவுகள் இழக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனத்திற்கு

கடன் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்டதன் காரணமாக ஊழியர் சேமலாபா நிதியத்தின் பதிவுகள் இழக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இது தொடர்பில் விசேட கணக்காய்வு விசாரணை நடத்திவருவதாகவும், அதற்கமைய தேவையான நடவடிக்கைகளை எதிர்வரும் காலத்தில் எடுப்பதாக வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இதன்போது குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களாக கௌரவ (சட்டத்தரணி) இரான் விக்ரமரத்ன, கௌரவ நிமல் லன்சா, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம். ராமேஸ்வரன் மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

5



தொடர்புடைய செய்திகள்

2025-11-27

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-27

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-26

நீதி அமைச்சின் கீழ் உள்ள 12 நிறுவனங்களின் செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-26

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறை தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks