பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-10-31
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி (HDFC) அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்யப்பட்டது. அத்துடன், இந்த வங்கி இறுதியாக 2014 நவம்பரில் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் வணிக மாதிரி தொடர்பில் குழு கேள்வியெழுப்பியது
இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் வணிக மாதிரி தொடர்பில் கோப் குழு கேள்வியெழுப்பியது. அதற்கமைய, இது தொடர்பில் எவ்வித தெளிவும் இல்லை என கோப் குழுவில் வெளிப்பட்டதுடன், வங்கியின் பெரும்பான்மையான பங்குகள் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருந்த போதிலும் வங்கி தொடர்பான தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தெளிவு இல்லை எனவும் குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இந்த சிக்கலை 6 மாதங்களுக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு அறிவுறுத்தியது.
மின்சார சபையின் நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி வீதம் வழங்கியதால் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து குழுவின் கவனத்திற்கு
மின்சார சபையின் நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி வீதம் வழங்கியதால் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து இதன்போது குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் இது குறித்துக் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், சாதாரண வட்டி வீதத்தை விட அதிகமாக இந்தக் கொடுப்பனவு இடம்பெற்றதன் காரணமாக வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு 69 மில்லியன் ரூபாவாகும். மூன்றாம் தரப்பாக ஒரு தரகர் நிறுவனம் இதில் ஈடுபட்டது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த தரகர் வங்கி தரப்பை சேர்ந்தவர் என்பது இதன்போது புலப்பட்டது. அத்துடன், இது தொடர்பில் தலையிட்ட நபருக்கு எச்சரிக்கை கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இது தொடர்பில் ஒரு மாத காலத்திற்குள் விசேட விசாரணைகளை நடத்தி, இந்த விடயத்தில் தலையிட்ட தரகர் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சுக்கு கோப் குழு பரிந்துரைத்தது.
கொழும்பு 13, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள காணியின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பில் கவனத்திற்கு
கொழும்பு 13, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள காணியின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. அவ்வப்போதைய நாட்டின் பொருளாதார நிலைமைக்கு அமைய இந்தக் காணியை விற்பனை செய்வது தொடர்பில் கருத்திற்கொள்வதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இது கொழுப்பு மாவட்டத்திலுள்ள பெறுமதிவாய்ந்த காணியொன்று எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் திறைசேரியின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு கோப் குழு பரிந்துரை வழங்கியது.
பிம்புத் பைனான்ஸ் PLC நிறுவனத்துக்கு வழங்கியுள்ள கடன் தொடர்பில் கவனத்திற்கு
பிம்புத் பைனான்ஸ் PLC நிறுவனத்துக்கு வழங்கியுள்ள கடன் தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி இந்த நிறுவனத்திற்கு 350 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்ட போதிலும், இந்த நிறுவனத்தின் கடனை மீளச் செலுத்தும் இயலுமை தொடர்பில் சிக்கல் காணப்படுவதாக இதன்போது தெரியவந்தது. அதற்கமைய, இந்தக் கடனை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பிணை தாரர்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பில் உள்ளக விசாரணையொன்றை நடத்தி மூன்று வாரங்களுக்குள் கோப் குழுவிடம் அறிக்கை அளிக்குமாறு இதன்போது குழு பரிந்துரைத்தது. மேலும், இந்த விடயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கோப் குழு தெரிவித்தது. அத்துடன், இந்தப் பிரச்சினையை இலஞ்ச ஊழல் திணைக்களத்திடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் கோப் குழு சுட்டிக்காட்டியது.
கடன் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்டதன் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் பதிவுகள் இழக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனத்திற்கு
கடன் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்டதன் காரணமாக ஊழியர் சேமலாபா நிதியத்தின் பதிவுகள் இழக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இது தொடர்பில் விசேட கணக்காய்வு விசாரணை நடத்திவருவதாகவும், அதற்கமைய தேவையான நடவடிக்கைகளை எதிர்வரும் காலத்தில் எடுப்பதாக வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இதன்போது குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களாக கௌரவ (சட்டத்தரணி) இரான் விக்ரமரத்ன, கௌரவ நிமல் லன்சா, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம். ராமேஸ்வரன் மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks




