E   |   සි   |  

2023-10-25

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் நீண்டகாலம் வெற்றிடமாகக் காணப்படும் தகவல் தொழிநுட்பப் பணிப்பாளர் பதவியை நிலவும் சட்ட ஏற்பாடுகளின் கீழ் உடனடியாகப் பூர்த்தி செய்யவும் - கைத்தொழில் அமைச்சுக்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் ஆலோசனை

  • அரச தகவல்கள் தனியார் நிறுவனத்திடமிருப்பது அபாயம் - கம்பனிகளை பதிவு செய்யும் கணினி மென்பொருளை (e - Roc கட்டமைப்பு) தயாரித்த நிறுவனத்துடன் கலந்துரையாடி புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பில் கண்டறியுமாறு கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்துக்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவிப்பு
  • கம்பனிகள் பதிவின் போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 85 மில்லியன் ரூபாய் செலவில் ஆவணங்கள் ஸ்கேன் (scan) செய்தமை தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்கவும் - அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
  • நிறுவனத்தின் வினைத்திறனுக்குத் தேவையான சட்ட திட்டங்களைத் தயாரிப்பதற்குக் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் சட்டத்தைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும் - அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்துக்கு ஆலோசனை

 

இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன தலைமையில் 2023.10.18 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இங்கு, கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ள தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்யப்படாமை குறித்துக் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அந்தப் பதவி தொடர்பான ஆட்சேர்ப்புக்கு நிர்வாக சேவைகள் திணைக்களத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக இதன்போது தெரியவந்தது.

ஆனால், இந்தத் தகவல் தொழிநுட்பப் பணிப்பாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள சம்பளம் காரணமாக எவரும் அதற்கு விண்ணப்பிப்பதில்லை என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த குழு தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளின் படி கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் பதவிக்கு, சந்தையில் தற்போதைய சம்பளத்தில் பொருத்தமான ஒருவரை அந்தப் பதவிக்கு  ஆட்சேர்ப்பு செய்யுமாறு ஆலோசனை வழங்கியது.

அத்துடன், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் கம்பனிகள் பதிவு செய்யும் முறையை கணினிமயப்படுத்தும் மென்பொருள் (e - Roc கட்டமைப்பு) தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அதன்போது, கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் தரவுகள், இந்த e - Roc கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ள பின்னணியில் தனியார் நிறுவனமொன்று கணினிக் கட்டமைப்பை கையாளுவதன் அபாயம் தொடர்பில் குழு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தது. அதற்கமைய, இந்தக் கணினிக் கட்டமைப்பை தயாரித்த நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தரவுகளின் பாதுகாப்பு மற்றும் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு குழு ஆலோசனை வழங்கியது.

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட கம்பனிகளிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவைகளை அறவிடாமை குறித்தும் குழு அதிகாரிகளிடம் வினவியது. இதன்போது, பதிவு செய்யப்பட்டுள்ள மொத்தக் கம்பனிகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகளில் இதுவரை செயற்படும் நிலையில் உள்ள கம்பனிகளின் எண்ணிக்கை, எத்தனை கம்பனிகளிடமிருந்து எந்தளவு தொகை நிலுவைகள் அறவிட வேண்டும் என குழுவின் தலைவர் வினவினார். அது தொடர்பான தகவல்களை முழுமையாகப் பெறுவதற்கான கட்டமைப்பொன்று இல்லை எனச் சுட்டிக்காட்டிய அதிகாரிகள், இடம்பெற்றுள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்ய எதிர்காலத்தில் முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதாகத் தெரிவித்தனர். அத்துடன், தற்பொழுது வரை கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகளில் செயற்படும் நிலையில் உள்ள கம்பனிகளை இனங்காண்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

கம்பனிகள் பதிவின் போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 85 மில்லியன் ரூபாய் செலவில் ஆவணங்கள் ஸ்கேன் (scan) செய்தமை தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதில் ஸ்கேன் (scan) செய்த ஆவணங்களில் அனைத்து ஆவணங்களும் கட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை என்றும் தேவையின் நிமித்தம் அந்த அனைத்து ஆவணங்களும் கட்டமைப்பில் சேர்க்கப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கம்பனிகள் பதிவின் போது மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்தமை தொடர்பான  அனைத்துத் தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், அரச கம்பனிகளை பதிவு செய்யும் போது தனியார் பெயர்களில் பதிவு செய்வதால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, திணைக்களத்திலுள்ள கணினிக் கட்டமைப்பின் ஊடாகவே அந்த சிக்கலை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு குழு ஆலோசனை வழங்கியது. அத்துடன், நிறுவனத்தின் செயற்பாட்டுகளைப் பாதிக்கும் சிக்கல்களை நிவர்த்தி செய்துகொள்ளத் தேவையான சட்ட திட்டங்களை தயாரிப்பதற்கு கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ வீரசுமன வீரசிங்க மற்றும் கௌரவ இசுறு தொடங்கொட ஆகியோருடன் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-09-17

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருவது தொடர்பான ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும்  வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-17

பகிடிவதைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி  உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-15

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்களும் ஆசனப் பட்டி அணிவது செப்டெம்பர் 20 முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-09-14

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உபகுழுவில் கலந்துரையாடல்

மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks