E   |   සි   |  

2023-10-03

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கோதுமை மா விவகாரம் தொடர்பில் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளவும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா கணக்காய்வாளர் நாயகத்துக்கு ஆலோசனை

  • கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்த விலைச் சூத்திரம் அவசியம் – அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவிப்பு
  • சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பொருட்களின் வரியைக் குறைக்க நிதி பற்றிய குழுவில் அனுமதி
  • கசினோ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பில் சிங்கப்பூரில் நடைமுறையிலுள்ள முறைமை மற்றும் இலங்கை அமைக்க எதிர்பார்த்திருக்கும் கட்டமைப்புத் தொடர்பில் ஒப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் – அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தல்

 

இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் தற்பொழுது காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினார். கோதுமை மாவுக்கு விலைச்சூத்திரமொன்றைப் பேணிவந்தால் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பியவாறு விலைகளைத் தீர்மானிப்பதற்கு இடமளிக்காமல் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை முழுவதிலும் உள்ள வணிக நிலையங்களில் வெவ்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இருந்தபோதும் நிதி அமைச்சு வழங்கிய விலைக்கு அமைய  ஒரு கிலோ கோதுமை மாவை 198 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கோதுமை மாவின் விலையை நிர்ணயிப்பதில் இரண்டு விலைக் கணக்கீடுகள் பயன்படுத்தப்படுவதாகவும், இந்நிலை மாற்றப்பட வேண்டுமெனவும் தலைவர் வலியுறுத்தினார்.

கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் விலை அதிகரித்துள்ள போதிலும் ஏற்கனவே இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் காணப்பட்ட கோதுமை மாவுக்கும் புதிய வரியையும் உள்ளடக்கியதாக விலை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் சமையல் எரிவாயு மற்றும் பால் மாவுக்கான விலை சூத்திரத்தை தயாரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நினைவுபடுத்திய குழுவின் தலைவர், கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்த விலைச்சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். மேலும் பன்முகத்தன்மையை சமாளிக்கும் வகையில் விலை சூத்திரம் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியது.

அத்துடன், சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதிய 2338/54 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை பற்றிக் கலந்துரையாடும்போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு அமைய 15% ஆக இருந்த வரி விகிதம் 5% ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை வழங்கிய குழு, இந்த வர்த்தக ஒப்பந்தத்தினால் இலங்கைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தது. இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் சாத்தியக்கூற்று ஆய்வு நடத்தப்படவில்லையெனத் தெரிவித்தனர். இது விடயத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய குழுவின் தலைவர், இந்த ஒப்பந்தம் குறித்த தர்க்கரீதியான விடயங்களை முன்வைத்து 6 வாரங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பொறுப்பான அதிகாரிக்குப் பணிப்புரை விடுத்தார்.

1962 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட 2336/ 72 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரண்டாவது தடவையாகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், இந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளைக்கு அனுமதி வழங்குவதில்லையெனக் குழு தீர்மானித்தது. இங்கு, சவர்க்கார உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான எச்எஸ் (HS Code) குறியீட்டை மாற்றுவதற்கான முன்மொழிவை அதிகாரிகள் முன்வைத்தனர். இந்த முறையின் மூலம் தொடர்புடைய மூலப்பொருட்களின் இறக்குமதி மீதான வரி விகிதங்கள் அதிகரிக்கப்படுமா எனக் குழு கேள்வி எழுப்பியது. இதற்கமைய அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் வரியைக் குறைக்குமாறும், மற்றொரு பிரிவினர் வரியைக் கூட்டுமாறும் குழுவின் அனுமதியைக் கோருவது சிக்கலுக்குரியது என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார். 2021ஆம் ஆண்டுக்காக சவர்க்கார உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளை இறக்குமதி செய்யும்போது வரி குறைக்கப்பட்டாலும், அக்காலப்பகுதியில் எந்தவொரு இறக்குமதியும் மேற்கொள்ளப்படவில்லையெனக் குழு முன்னிலையில் தெரியவந்தது. இதற்கு அமைய நிதி அமைச்சின் செயலாளர் தலைமையில் கூடி வரி தொடர்பில் குறிப்பிட்ட ஒரு கொள்கையைத் தயாரித்து அதனைக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதேநேரம், 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான வரித் திருத்தங்கள் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், கசினோ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பான செயற்பாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் இலங்கையில் தற்போதுள்ள சில நிறுவனங்களுடன் கலந்துரையாடி ஒரு சட்டமூலமொன்றைத் தயாரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இறுதிச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு முன்னர் வரைபை அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதிக்கு அனுப்பிவைக்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன்படி, கசினோ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பில் சிங்கப்பூரில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மற்றும் இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் முறைமை ஆகியவற்றை ஒப்பீடு செய்து அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு வழங்குமாறும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த காலப்பகுதியில் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் முதலீடு செய்யப்பட்ட தொகை, அவற்றினால் கிடைக்கப்பட்ட நன்மைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் குழு, இலங்கை முதலீட்டுச் சபைக்குப் பணிப்புரைவிடுத்தது.

ஏனைய விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியபோது, வெளிநாடுகளிலிருந்து பாக்கு இறக்குமதி செய்யப்பட்டு இங்கு பெறுமதி சேர்க்கப்பட்டு மறு ஏற்றுமதி செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிமல் லான்சா, இலங்கை முதலீட்டுச் சபையிடம் வினவினார். இவ்விடயம் இராஜதந்திர ரீதியான பிரச்சினை வரையில் செல்வதற்கான ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருக்கு அறிவிக்குமாறு இலங்கை முதலீட்டுச் சபையிடம் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ மயந்த திசாநாயக, கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 6

7

 



தொடர்புடைய செய்திகள்

2026-09-17

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருவது தொடர்பான ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும்  வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2026-09-17

பகிடிவதைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி  உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-15

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்களும் ஆசனப் பட்டி அணிவது செப்டெம்பர் 20 முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-09-14

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உபகுழுவில் கலந்துரையாடல்

மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks