பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-08-03
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சரியான பொருளாதாரக் கொள்கை இருந்தால் 10 வருடங்களுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாகர காரியவசம் தலைமையில் அண்மையில் (ஆக. 02) கூடியது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே பேராசிரியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் குழுவிற்கான கருத்துக்களைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருளாதாரத் துறை நிபுணர்கள் அழைக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவின் முன்னிலையில் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிடுகையில், இந்த நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை அதிகரிப்பது அவசியம் எனவும் அதற்கான கொள்கைகளைத் தயாரிப்பது முக்கியம் எனவும் தெரிவித்தார். உதாரணமாக, வியட்நாமில் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டில் சேவைப் பொருளாதாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்குள் ஈர்ப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது எனவும் சிரேஷ்ட பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
1960கள் உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சுறுசுறுப்பான காலகட்டம் என்றும், கணினியின் அறிமுகத்துடன் உலக வர்த்தகம் விரிவடைந்தது என்றும் அவர் விளக்கினார். மேலும், கொவிட் காலத்தில், நாட்டின் ஏற்றுமதிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய பேராசிரியர், நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதற்கும், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் இந்தக் காலகட்டத்தில் பணம் அச்சிடப்பட வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 70% ஆக இருந்த பணவீக்கம் தற்போது மத்திய வங்கியின் தலையீட்டால் சுமார் 10% வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார். அது மாத்திரமன்றி வேலையின்மை வீதம் அதிகரித்திருக்கின்றபோதும் அது குறித்து சரியான கணக்கெடுப்புக்கள் இல்லையென்றும் கூறினார்.
இங்கு உரையாற்றிய களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் திஸாநாயக்க குறிப்பிடுகையில், உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு சரியான பொறிமுறையொன்று இல்லையெனச் சுட்டிக்காட்டினார். பொருளாதாரம் தொடர்பில் நிரந்தரமான தேசியக் கொள்கையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரக் கொள்கையும் அரசியல் கொள்கையும் குழப்பிக் கொண்டுள்ளதாக வயம்ப பல்கலைக்கழக பேராசிரியர் அமிந்த பெரேரா சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக நாட்டுக்கு சுதந்திரமான பொருளாதாரக் கொள்கை தேவை என்றும், இதற்கு சிறந்த உதாரணம் இந்தியா என்றும் அந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கை அதன் அரசியல் கொள்கையுடன் பிணைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசன்ன பெரேராவும் தனது கருத்துக்களைத் தெரிவித்து 5 விடயங்களை விளக்கியதுடன், இந்தக் குழுவிற்கு எழுத்து மூலம் தனது கருத்துக்களை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
தகவல்களைப் பின்தொடர்வதற்கு இந்த நாட்டில் ஒரு தனியான பிரிவொன்று இல்லை என இங்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிஹால் ஹென்னாயக்க சுட்டிக்காட்டினார். இந்த நாட்டுக்குப் பொருளாதார புலனாய்வு தகவல் பிரிவு முக்கியம் என்பது அவருடைய நிலைப்பாடாக இருந்தது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆதரவையும் இந்தத் துறைக்குப் பெற வேண்டும் என பேராசிரியர் பந்துல ஜயதிலக்க சுட்டிக்காட்டினார். மேலும், பேராசிரியர் சிறிமல் அபேரத்ன, இலங்கையில் கடன் நிலைத்தன்மை மற்றும் முதலீடுகளைப் பெறுதல் குறித்து விளக்கினார். குறிப்பாக முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரும்போது தேவையான ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்தக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட மற்றும் கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



