2023-07-20
செய்தி வகைகள் : குழு செய்திகள்
நாட்டின் நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்கு துறைசார் நிபுணர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தீர்மானித்தது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) சாகர காரியவசம் தலைமையில் இந்த விசேட குழு முதல் தடவையாக அண்மையில் (ஜூலை 18) பாராளுமன்றத்தில் கூடியதுடன், குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த அடிப்படை விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களை முன்மொழியுமாறு குழுவின் தலைவர் குழு உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.
அத்துடன், எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைய நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் எதிர்க்கட்சி சார்பில் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ள நிலையில் இந்தக் குழு தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
அதற்கமைய, நாடு வங்குரோத்து நிலையை அடையும் போது நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாக இருந்த பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் இந்தக் குழுவுக்கு தலைமை வகிப்பது, குழுவின் சுயாதீனத் தன்மைக்குப் பாதிப்பாகும் என்பதால் குழுவிலிருந்து இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) சாகர காரியவசம் குறிப்பிடுகையில், இந்தக் குழு அரசியல் சார்ந்த குழுவொன்று அல்ல என்றும், பிரேரணையைக் கொண்டுவரும் கட்சியிலிருந்தே தலைவர் நியமிக்கப்பட வேண்டும் சம்பிரதாயம் இல்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்ற விசேட குழுக்களை நியமிக்கும் போது சம்பிரதாயத்துக்கு அமைய குழுவின் கட்டமைப்பில் ஆளும் தரப்புக்கு அதிக பிரதிநிதித்துவமும், எதிர்கட்சிக்கு குறைந்த பிரதிநிதித்துவமும் வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். குழுவின் சுயாதீனத் தன்மை, குழுவிலுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் அல்ல என்றும் குழு எவ்வாறு செயற்படுகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான, அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆரச்சி, இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.வீ. சானக, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வாவும் கலந்துகொண்டார்.
2026-02-19
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் 2026.02.17ஆம் திகதி கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் (ITI), வசதிகள் மற்றும் அதில் காணப்படும் பிரச்சினைகள் இதன்போது கண்காணிக்கப்பட்டன.சமூகத்தில் குறித்த நிறுவனத்தின் வகிபாகம் மற்றும் அதன் நிலைமை குறித்த உண்மையான புரிதலை ஏற்படுத்துவது, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இந்த நிறுவனம் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஆராய்ந்து மேம்படுத்தலை ஊக்குவிப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். இது நாட்டில் மிக உயர்ந்த அளவிலான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஒரேயொரு நிறுவனமாகும். கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்குக் காணப்படும் சான்றளிப்பு (Accreditation) மற்றும் சர்வதேச அங்கீகாரம், நிறுவனத்தின் தனித்துவமான தொழில்நுட்ப திறன்கள், விசேட பரிசோதனை சேவைகள் மற்றும் அதற்கான வசதிகள், நிலக்கரி மாதிரிகளை பரிசோதிப்பதில் காணப்படும் பிரச்சினைகள், உராய்வுநீக்கி எண்ணெய் பரிசோதனைக் கூடத்தின் திறமையின்மை போன்ற விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது.கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தில் 6 ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவுகளும், பரிசோதனை சேவைகளை வழங்கும் 7 பிரிவுகளும் செயற்படுவதுடன், இவற்றில் மருந்துகள், மூலப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள், நுண்ணுயிரியல் பரிசோதனை, அளவுத்திருத்தம், மின்னியல் தொழில்நுட்பம், எச்சங்கள் தொடர்பான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றமை இவ்விஜயத்தின் போது தெரியவந்தது.சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வது, கைத்தொழில்களுக்குத் தேவையான தொழிற்சாலை வடிவமைப்புக்கள் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுப்பது போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கிவருகின்றது.சான்றழிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய காரணி சான்றளிப்பு என்றும், இந்நிறுவனம் ISO 17025 (2017) சர்வதேச தரத்தைப் பின்பற்றுகிறது என்பதும் தெரியவந்தது.ஆரம்பத்தில் சுவீடனில் உள்ள SWEDAC நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தபோதும், 2013ஆம் ஆண்டு முதல் இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை (SLAB) மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன், மேலும் தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 1035 க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட அளவுருக்களுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. ITI நிறுவனம் தேசிய அளவில் முக்கியமான பல பரிசோதனைகளை நடத்துவதுடன், உணவு, நீர் (ஆர்சனிக் போன்றவை), மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பரிசீலனை செய்வதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதற்கு அண்மையில் ரூ.143 மில்லியன் மதிப்புள்ள அதிநவீன உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளமையும் இந்த விஜயத்தின் போது தெரியவந்தது.அத்துடன், நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அவசியமான ஒலிப் பரிசோதனை மற்றும் ஒலி வடிவமைப்பை உருவாக்குவது போன்ற விடயங்கள் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலிப்பதில் காணப்படும் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.தற்பொழுது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலனை செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஆறு மாத காலங்களுக்கு ரூ 32 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ITI நிறுவனத்தின் அதிகாரிகள், சுமார் ரூ. 350 மில்லியன் ஆரம்ப மூலதன முதலீட்டில் (14 உபகரணங்கள் உட்பட) இந்தப் பரிசீலனளை வசதியை அங்கீகாரத்துடன் உள்நாட்டிலேயே நிறுவ முடியும் என்று தெரிவித்தனர்.நுரைச்சோலை பரிசோதனை கூடத்திற்கு அங்கீகாரம் இல்லையென்பதால் அதன் அறிக்கை சர்வதேச அளவிலோ அல்லது நீதிமன்றத்திலோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இது ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பு பரிசோதனைகூடம் அல்ல என்பது ஒரு பிரச்சனை என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.மருந்துகள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை கூடத்தின் திறமையின்மை காரணமாக நிறுவனம் ஏற்கனவே ஏராளமான கணக்காய்வு விசாரணைகளைப் பெற்றுள்ளது என்றும், அரசாங்க நிதியில் நிறுவப்பட்ட சில வசதிகளைப் பயன்படுத்தாமை சிக்கலுக்குரிய விடயம் என்றும், இந்த ஆய்வுகூடங்கள் அரசாங்க பரிந்துரைகளின்படி நிறுவப்பட்டன என்றும் தெரியவந்தது.2019 ஆம் ஆண்டு ரூ.99 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறுவப்பட்ட மருந்துப் பரிசோதனை கூடம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாமையால் செயற்படமுடியாத நிலையில் உள்ளது என்றும், 2017-2020 ஆம் ஆண்டில் ரூ.117 மில்லியன் செலவில் பெட்ரோலியம் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை ஆய்வகம் கட்டப்பட்ட போதிலும், எண்ணெய் மாதிரிகளைப் பெறுவதற்கான வழிமுறை இல்லாததால் அதை முறையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.மருந்து சோதனையின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், ஒழுங்குமுறை நிறுவனங்களே சோதனைகளை நடத்துகின்றன, "ஒழுங்குபடுத்துபவரும் புலனாய்வாளரும் பிரிக்கப்பட வேண்டும்" என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையை புறக்கணிப்பதால் அக்கறைகளின் முரண்பாடு உள்ளது என்பதும் தெரியவந்தது.அரசாங்க பரிசோதனைகளுக்கு ITI போன்ற அங்கீகாரம் பெற்ற சுயாதீன அரச நிறுவனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு சட்டப்பூர்வ வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையையும் சர்வதேச தரநிலைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்ய முடியும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.இந்த விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ருவன் மாபலகம, அசித நிரோஷன எகொடவிதான ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-02-16
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 10.02.206ஆம் திகதி கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கை நுண்நிதி மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், பணத்தைக் கடனுக்கு வழங்குதல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல், பணம் கடன்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இச்சட்டமூலத்திற்கான வரைபு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்புக்கு முரணான விடயங்கள் குறித்த வரைபில் இருப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணான தன்மை நீங்கியுள்ளமை தெரியவருவதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு குழுவின் தலைவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.இந்தச் சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்படும் அதிகாரசபையின் மூலம் பணத்தைக் கடனுக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒழுங்குறுத்துவது என்பவற்றை முன்னெடுக்கும் என்றும், பணிப்பாளர் சபையினால் இந்த அதிகாரசபை ஒழுங்குறுத்தப்படும் என்றும், அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் கடன்களை வழங்க முடியாது என்றும் சட்டமூலம் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒன்லைனில் கடன் வழங்கும் செயல்முறை இந்த அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தப்படுமா என்று குழு அதிகாரிகளிடம் வினவியது. அதற்கு அமைய, அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மாத்திரமே ஒன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்களை வலுவூட்டுவது தொடர்பில் குறிப்பாக அந்த நிறுவனங்களுக்கான ஒழுங்குறுத்தல் கட்டணத்தை தளர்த்துவது அல்லது அதற்கான தகுதி அடிப்படைகளை இலகுபடுத்துவது குறித்து இந்தச் சட்டமூலம் கவனத்தில் கொள்கின்றதா என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.மின்னியல் வணிகச் செயற்பாட்டாளர்கள் (e-Commerce Operators) போன்றவர்கள் இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.சட்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மக்களுக்குக் காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்துப் பங்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் குழு வலியுறுத்தியது. இதன் ஆரம்பகட்டமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைப் பகிரங்கப்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது.கடன் மற்றும் வைப்புத் துறைகள் இரண்டிலும் அதிகபட்ச வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்த அதிகாரசபைக்கு வழங்கப்படுவதால், சேமிப்பு மற்றும் கடன் நடவடிக்கைகளுக்கு நுண்நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு நிதிக் கருவிகளின் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.பிரதேச செயலகங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்தும் குழு விரிவாக விவாதித்தது. சிறிய கடன் வழங்குநர்கள் அதிகாரசபையுடன் கையாள கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு (விண்ணப்ப கையாளுதல், பிற அன்றாட பணிகள்) பிரதேச செயலக மட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறையை திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்த ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் 2464/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235ஆம் அத்தியாயமான) தீர்மானம் மற்றும் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் என்பனவற்றையும் பரிசீலித்த குழு அவற்றுக்கும் அனுமதி வழங்கியது.
2026-02-13
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் 2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிற்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பெறப்பட்டன.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்றும், இதற்குப் பதிலாக பிறிதொரு உறுப்பினர் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்றும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட முன்னர் குழுவின் தலைவர் இங்கு அறிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், (வைத்தியர்) நஜீத் இந்திக மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-02-13
2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்விமனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டிஆராச்சி, லசித் பாஷன கமகே, சதுர கலப்பத்தி, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் ருவன் விஜேவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.