பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-01-25
செய்தி வகைகள் : குழு செய்திகள்
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பணிகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்ள அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) புதிய முன்மொழிவுகள் பல வழங்கப்பட்டன. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை சேகரிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள பிரதான கணினிக் கட்டமைப்பான வருமான முகாமைத்துவத் தகவல் கட்டமைப்பை (RAMIS) முறையாகச் செயற்படுத்துவதற்கு இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹஷீம் தலைமையில் நேற்று (24) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
நிதி அமைச்சின் கீழ் காணப்படும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தமது வரி வருமானத்தை சேர்த்துக்கொள்வதன் வினைத்திறனை அதிகரிப்பதற்கு 2014 ஆம் ஆண்டில் வருமான முகாமைத்துவ தகவல் கட்டமைப்பு (RAMIS) எனும் மென்பொருள் கட்டமைப்பை ஆரம்பித்து அதற்காக சுமார் 10 பில்லியன் ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், எனினும் அது முறையாக செயற்படுவதில்லை என்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதன்போது கோபா குழு சுட்டிக்காட்டியது.
குறிப்பிட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேலும் பாரிய நிதியை இதுவரை செலவிட்டுள்ளதாக தான் நம்புவதாகக் குறிப்பிட்ட குழுவின் தலைவர், மேலும் இதற்காக நிதி செலவு செய்வது பயனுள்ளதா என்பது தொடர்பில் கண்டறிவது அவசியம் என வலியுறுத்தினார்.
இதன்போது கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டதாவது, குறித்த கட்டமைப்பு தொடர்பான சேவை உடன்படிக்கை மற்றும் அதற்கான நிதி செலுத்துதல் பற்றிய தகவல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தமக்கு வழங்குவதில்லை என தெரிவித்தார். விசேடமாக, உடன்படிக்கைக்கு அமைய தமக்கு அந்தத் தகவல்களை வழங்க முடியாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கூறுவதாகவும், அது அரசியலமைப்புக்கு முரணானது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதுபற்றி, உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடும் போது, 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மென்பொருள் கட்டமைப்பு 2017 இல் கொண்டுவரப்பட்ட புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்துக்கு அமைய இற்றைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டனர். குறித்த மென்பொருள் கட்டமைப்பை தயாரித்த சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் தகவல்களை வெளியாருக்கு வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். மேலும், இந்த உடன்படிக்கை இரு அரசுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை என்பதால் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அரசின் தலையீடு பொருத்தமானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, RAMIS கட்டமைப்புத் தொடர்பான கொள்முதல் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்படுவதால் இந்தக் கட்டமைப்பை நாட்டுக்குப் பொருத்தமான வகையில் செயற்படும் நிலைமைக்கு கொண்டுவர முடியுமா என்பது தொடர்பில் விசாரணை செய்து முடிவை வழங்குவதற்காக கோபா குழுவினால் இரண்டு உப குழுக்களை நியமிப்பதற்கு முன்மொழியப்பட்டது.
நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து நியமிக்கப்படவுள்ள குழுவினால் RAMIS உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட சட்டரீதியான நிலைமைகளை விசாரணை செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA), உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சு ஆகியன இணைந்து நியமிக்கப்படும் குழுவினால் குறித்த மென்பொருள் கட்டமைப்பை இற்றைப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் கண்டறியப்படவுள்ளது.
சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பான முடிவுகள் அடங்கிய அறிக்கைகளை 06 வாரங்களுக்குள் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரனவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே, கௌரவ ஜே.சி. அலவதுவல, கௌரவ வடிவேல் சுரேஷ், கௌரவ டீ. வீரசிங்க, கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-05-26
2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-26
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
2026-05-25
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
2026-05-25
புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



