பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-01-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கோப் குழு அதன் தலைவர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 18.01.2023 அன்று கூடியதுடன், 08.12.2022 அன்று குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அழைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய 13 விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
1. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக செயற்படுவதற்குப் பொருத்தமான வகையில் அதன் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோப் குழுவின் பரிந்துரை தொடர்பான அதன் கருத்தை மீண்டும் முன்வைத்தது.
பணிப்பாளர் சபைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் இருவரை எந்தக் காரணத்துக்காக நியமிப்பது என்பது தொடர்பில் அமைச்சின் செயலாளர் கருத்துத் தெரிவித்தார். இதனால் விருப்ப முரண்பாடு ஏற்படுவதாக கோப் குழுவின் கருத்தாக இருந்தது.
பணியகத்தின் ஒருசில விடயங்கள் தொடர்பில் விசேட புரிந்துணர்வு தேவை எனின், அது தொடர்பில் உப குழுக்கள், செயலணிகளை நியமித்து உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்பது கோப் குழுவின் கருத்தாக இருந்தது. அதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக செயற்படுவதற்குப் பொருத்தமான வகையில் சட்டத்தைத் திருத்துவதற்குப் பரிந்துரை வழங்கப்பட்டது.
2. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நலன்புரி நிதியத்துக்கு பிரத்தியேக கணக்கொன்றை பேணுவதற்கு கோப் குழு வழங்கிய பரிந்துரை மீண்டும் கலந்துரையாடப்பட்டது. பணியகத்தின் நலன்புரிக் கணக்கு தொடர்பில் பிரத்தியேக நிதிக்கூற்று மற்றும் தொகுப்பொன்றை பேணிவரவேண்டும் எனக் கணக்காய்வாளர் நாயகம் விசேடமாக சுட்டிக்காட்டினார். அதேபோன்று நிதியம் குடியகல்வு நலன்புரிக்கு மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணக்கத்தை தெரிவித்தது.
3. குவைட் நிதியத்தை வினைத்திறனாகப் பெற்றுக்கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பான விரிவான குறிப்பொன்றை குழுவுக்கு வழங்குவதற்கு செயலாளர் இணக்கம் தெரிவித்தார்.
4. பணியகத்தின் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகளுக்கு உரிய நிறுவங்களின் முறையான அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் கருத்தை செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டது.
5. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிதியை முதலீடு செய்வது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி விசேட குழுவொன்றை நியமிப்பது தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் கருத்தை செயற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
6. காப்புறுதி தொடர்பில் கணக்காய்வாளரின் விசேட அறிக்கை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
7. பணியகத்தின் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் சில ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றி பொது நிர்வாக அமைச்சுடன் தொடர்புகொண்டு விசாரணை செய்வதற்கு விசாரணை சபையொன்றை நியமிப்பதற்கான பரிந்துரை தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்பட்டது.
8. வெளிநாட்டு தூதுக்குழுக்களுக்கு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் பின்பற்றப்படும் வழிமுறைகள் தொடர்பில் கோப் குழுவுக்கு தனது பரிந்துரைகளை விரைவில் முன்வைப்பதாக செயலாளர் உறுதியளித்தார்.
9. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் படிப்படியாக வர்த்தக செயற்பாடுகளிலிருந்து விலகி ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக செயற்படும் பணியை அமைப்பதற்கு தேவையான சட்டத்தைத் திருத்தி சட்ட விதிகளைத் தயாரிப்பதற்கான கோப் குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு உத்தேசத் திட்டத்தை 2023.02.09 அன்று கோப் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டது.
10. தற்பொழுது பணியகம் மேற்கொள்ளும் பயிற்சி வேலைத்திட்டங்களை முறையாக உரிய அரச நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கு பரிந்துரை வழங்கப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வர்த்தக மற்றும் வாணிப நடவடிக்கைகளிலிருந்து விலகி வர்த்தக நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பான விடயங்களை அறிக்கையிடுமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
11. தற்பொழுது பணியகத்திடம் காணப்படும் பயிற்சி நிறுவனங்களின் தரத்தை பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டது.
12. திறைசேரியின் பிரதிநிதிகள் அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் அங்கத்துவம் வகிக்கும் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் சட்ட விதிகளுக்கு எதிராக அந்த நிறுவனங்களால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு தம்மால் இணங்குவதற்கு முடியாத சந்தர்ப்பங்களில், அது தொடர்பான உரிய எதிர்ப்பை எழுத்துமூலம் திறைசேரியின் செயலாளர் ஊடாக கணக்காய்வாளர் நாயகத்துக்கு அறிவித்தல்.
இந்த அனைத்துப் பரிந்துரைகளினதும் முன்னேற்றம் தொடர்பில் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புற, கௌரவ லோஹான் ரத்வத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுரகுமார திசாநாயக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ நிமல் லன்சா, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ ரஜிகா விக்ரமசிங்க மற்றும் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-11-27
அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-27
சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2025-11-26
இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-26
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


