logo

E   |   සි   |  

2022-12-15

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெகுஜன ஊடக நிறுவனங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது – பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தேசிய பேரவை உப குழுவில் ஊடகவியலாளர்கள் தெரிவிப்பு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் வெகுஜன ஊடகங்களை நடத்திச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக பாராளுமன்றத்தில் இன்று (டிச. 15) நடைபெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுக் கூட்டத்தில் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் வெகுஜன ஊடக நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பட்டாலி சம்பிக ரணவக்க தலைமையில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு இன்று (15) பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போதே இவ்விடயம் புலப்பட்டது.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை உள்ளிட்ட சம்பிரதாயபூர்வமான ஊடக நிறுவனங்கள், இணைய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தயாரிப்புக்கான செலவுகள் அதிகரித்திருப்பதால் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஏறத்தாழ 70% வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக இங்கு தெரியவந்தது.

இரவு நேரங்களில் இடம்பெறுகின்ற மின்சாரத் துண்டிப்புக்கள் காரணமாக தொலைக்காட்சிகளுக்குக் கிடைக்கும் விளம்பரங்களின் அளவு குறைந்திருப்பதாகவும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிகழ்ச்சியொன்றைத் தயாரிப்பதற்காக அதிக செலவு ஏற்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

காகிதத் தட்டுப்பாடு உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் நாளேடுகள் உட்பட வெளியீட்டுத் துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். இந்நிலைமையினால் நாளேடுகளின் பக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். நாளேடுகளில் பக்கங்கள் குறைக்கப்படுவதால் பிராந்திய ஊடகவியலாளர்களின் செய்திகளுக்கு இடமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

சில பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்குக் கூட சம்பளம் வழங்குவதில் சிரமமான நிலை காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. இந்நிலையில் நாளேடுகள் அச்சிடுவது 60%-70% வரை குறைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கமைய பொருளாதார பிரச்சனைகள், உள்ளூர் செய்திகளை வெளியிடாமை போன்ற காரணங்களால் மக்களிடையே நாளேடுகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளதாக பத்திரிகை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

பொருளாதார நெருக்கடிக்கு மேலதிகமாக, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தற்போதைய டிஜிட்டல் ஊடகப் போக்குகளினால் நாளேடு மற்றும் வானொலி போன்ற பாரம்பரிய ஊடகங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளமை குறித்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மக்களை தயார்படுத்துவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் இணைந்து ஒரு இலக்கை அடைய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. சுனாமி அனர்த்தம், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், கொவிட் நெருக்கடி போன்ற நிலைமைகளைச் சமாளிப்பதற்கு ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டிருந்தனவோ, அதேபோன்று செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்துக் கவனம் செலுத்திய உப குழுவின் தலைவர், ஊடகங்கள் குறித்த முன்மொழிவுகளை அடுத்த அறிக்கையில் உள்ளடக்கி அதனை தேசிய பேரவையில் முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

 

1 2

8 9

12 13



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks