பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-11-10
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்கும்போது கடந்த காலத்தில் காலதாமதமாகியிருந்ததை சரிசெய்வதற்கு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய திறைசேரியின் அனுமதியைப் பெற்று இரண்டு பகுதிகளாக இக்கொடுப்பனவுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமரும், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற (நவ. 08) அந்த அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்குவது காலதாமதமாவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் வகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் திறைசேரியினால் நிதியை விடுவிப்பதில் உள்ள தாமதம் காரணமாக ஓய்வூதியப் பணிக்கொடையைப் பெறுவதற்கு அதிகமானவர்கள் இதுவரை காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக ஓய்வூதிய பணிப்பளார் நாயகம் இங்கு தெரிவித்தார். தற்பொழுது 2022 ஜனவரி வரையான அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் 2022 ஜனவரி முதல் எஞ்சிய காலத்துக்குத் தேவையான நிதியை விடுவிப்பதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கமைய அந்த நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, ஓய்வூதிய வயதை 60 வயது வரை குறைத்தமை காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியை அடுத்து புதிய விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்ப்பதாக ஓய்வூதியப் பணிப்பளார் நாயகம் குறிப்பிட்டார். அவர்கள் அனைவருக்கும் அடிப்படை ஓய்வூதியத்தை விரைவாக வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் நீண்ட காலம் பணியாற்றிய ஊழியர்களின் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, எதிர்கால செயற்பாடுகளை பரிந்துரைப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
அதேபோன்று, தற்பொழுது தாமதமாக காணப்படும் அரசாங்க நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளை விரைவாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். மேலும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் அறிவித்து தாமதமாகியுள்ள அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
பல்வேறு நகர சபைகள் மாநகர சபைகளாகத் தரமுயர்த்தும் பிரதமரின் வேலைத்திட்டம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன, வடமாகாணத்தில் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளமை தொடர்பில் பாராட்டைத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாநகரசபையாகத் தரமுயர்த்தப்படும்போது மன்னார் பிரதேச சபையை இரத்துச் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகப் பிரிவை விஸ்தரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பிரதமர் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, இந்திக்க அனுருத்த, அனுப பஸ்குவல் ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களான ரஞ்சித் மத்துமபண்டார, ஜே.சி. அலவதுவல, ஜயந்த கெடகொட, சுதத் மஞ்சுள ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், மனோ கணேசன், சந்திம வீரக்கொடி, யதாமினி குணவர்தன, எச்.எம்.எம். ஹரீஸ், ரோஹன பண்டார, மதுர விதானகே, சார்ள்ஸ் நிர்மலநாதன், குணதிலக ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்களும் அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



