பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-07-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
விலைகள் அதிகரிப்பதால் போட்டி நிறைந்த தற்போதைய சந்தையில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளுக்கு டயர் உள்ளிட்ட ஏனைய உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் நிலவுவது தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் புலப்பட்டது.
நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில் பொது மக்களுக்கு வினைத்திறனான முறையில் போக்குவரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் (05) கூடியபோதே இந்தத் தகவல்கள் வெளிப்பட்டன.
அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர். பயன்பாட்டில் உள்ள பேரூந்துகளின் தரம் மற்றும் அவற்றை இயக்குவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் கேட்டறிந்துகொண்டனர். போட்டி நிறைந்த இன்றைய சந்தையில் பேரூந்துகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களைப் பெற்றுக் கொள்வது சிக்கல் நிறைந்தது என வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கான கேள்விப் பத்திரங்களைக் கோரி அவற்றின் ஊடாக கொள்முதல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசின் போக்குவரத்து சேவையை மேலும் விஸ்தரிக்கவேண்டியிருக்கின்றபோதும், தற்பொழுது காணப்படும் சூழ்நிலையின் கீழ் விலை அதிகரிப்புக் காணப்படுவதால் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், 2017ஆம் ஆண்டு இந்தியாவின் கடன் மானியத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த புகையிரதப் பெட்டிகள் பல வருடங்கள் காலதாமதமாகி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. விசேடமாக கொள்வனவு செய்யப்பட்ட 160 புகையிரதப் பெட்டிகளில் 103 பெட்டிகள் இதுவரை பயன்படுத்தப்படாமை குறித்து கோபா குழு, அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இந்நாட்டில் வக்கியூம் பிரேக் முறைமை பயன்படுத்தப்படுகின்றபோதும், சில பெட்டிகள் எயார் பிரேக் முறைமையைக் கொண்டிருப்பது இதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொருத்தமில்லாத பிரேக் முறைமையைக் கொண்ட புகையிரதப் பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார் என்பது தொடர்பில் கோபா குழுவின் அதிகாரிகள் வினவினர். இதற்கமைய அதிகாரிகள் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என இங்கு குறிப்பிடப்பட்டது.
அதேநேரம், தற்போதைய நாட்களில் இலங்கைப் போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேரூந்துகளுக்கு டீசல் வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு டீசலைப் பெற்றுக்கொண்ட சில தனியார் பேரூந்துகள் அவற்றை வெளியாருக்கு அதிக விலையில் விற்பனை செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேரூந்துகளை வீதியில் சேவைக்கு ஈடுபடுத்தி ஈட்டும் வருமானத்தைவிட டீசல் விற்பனை மூலம் பேரூந்து உரிமையாளர்கள் அதிக இலாபம் சம்பாதித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, இவ்வாறான நிலைமையக் கட்டுப்படுத்தி பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க வேண்டும் எனவும், எரிபொருள்களை சேகரிக்கும் நோக்கில் பேரூந்துகள் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது. குறிப்பாக பேரூந்துகளைக் கண்காணிப்பதற்கு ஜீ.பீ.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, 2017 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் தயாரிக்கப்பட்ட இலங்கை புகையிரத பிரதான திட்டத்துக்கு 1,056,555 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளபோதும் இந்த நிதியுதவி அமைச்சின் வரவுசெலவுத்திட்டத்தில் அல்லது நிதி அறிக்கையில் உள்ளடக்கப்படாமை இங்கு புலப்பட்டது. இதற்கமைய இது தொடர்பில் அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், புகையிரதப் போக்குவரத்துக் கட்டமைப்பை புதிய தொழில்நுட்பத்துடன் இணைப்பது பற்றியும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ லசந்த அழகியவன்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ துமிந்த திஸாநாயக்க, கௌரவ பீ.வை.ஜீ ரத்னசேகர மற்றும் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



