பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், கௌரவ மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் அண்மையில் (10) கூடிய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தற்போது, கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின்படி, ஒரு ஊழியர் தனது தொழிலை இடைநிறுத்தும் சந்தர்ப்பங்களில், அந்த செயன்முறையை நிறைவுறுத்துவதற்கு மாத்திரமே தொழிலாளர் நியாயசபையின் கீழ் வழக்குத் தொடரப்படுகிறது. ஆனாலும், பணிபுரியும் ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி, கொடுப்பனவு மற்றும் தொழில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான பல்வேறு சட்டங்களின் விதிகளை முதலாளிமார் ஏற்காத அல்லது மீறும் சந்தர்ப்பங்களில், நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும்.
நாடளாவிய ரீதியில் செயற்படும் சுமார் 80 நீதவான் நீதிமன்றங்களில் 16,000 இற்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப்ட்டுள்ளமையே இங்கு எழும் பிரதான பிரச்சினையாகும். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏதேனும் நீதி கிடைக்க நீண்ட காலம் எடுப்பதோடு தற்போது மிகக் குறைவான வழக்குகளே நீதவான் நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்படுவதாலும் இந்த வழக்குகள் நாடளாவிய ரீதியில் செயற்படும் 37 தொழில் நியாய சபைகளுக்கு அனுப்பப்பட்டால், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை துரிதப்படுத்த முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இந்தச் சட்டம் தொழிலாளர் நியாயசபை தலைவர்களுக்கு வழக்கை நடாத்திச் செல்வதற்கான அதிகாரத்தை வழங்கும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. கடந்த காலங்களிலும் தொழிலாளர் நியாயசபைகளுக்கு குறித்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், இதன்மூலம் பல வழக்குகளை துரிதமாக நிறைவுசெய்து வைக்க முடிந்தது எனவும், ஆனால் பின்னர் அந்த அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் பொருளாதார நிலைமைகள் காரணமாக எந்தவொரு தொழிற்சாலையும் மூடப்படும் பட்சத்தில் முதலாளிமார் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடுவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
குறித்த சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது இது தொடர்பில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, தற்போது அதிக கவனம் செலுத்தி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விசேட பயிற்சித் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படுகின்ற போதிலும் யாழ்ப்பான மாவட்டத்தில் அவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே யாழ்ப்பான மாவட்டத்தில் மொழிப் பயிற்சித் திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் ஆலோசனை விடுத்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்களின் விசேட அழைப்பின்பேரில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதோடு குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் கௌரவ ஜகத் புஷ்பகுமார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கந்துக்கொண்டனர். மேலும், தொழிலாளர் அமைச்சு மற்றும் பல அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் இதன்போது பங்கு பற்றியிருந்தனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



