பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-03-29
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பொது மக்களை விழிப்புணர்வூட்டும், ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி முன்வைத்த யோசனை குறித்துப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி போடும் பணியில் அரசியல் அதிகாரிகளின் தலையீடு காரணமாக ஆரம்ப காலத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் தற்போது சில பிரதேசங்களில் அரசியல் அதிகாரிகளின் ஆதரவினால் தடுப்பூசி மிகவும் வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பூஸ்டர் தடுப்பூசியை எடுக்க வேண்டாம் என சிலர் திட்டமிட்ட ரீதியாக முன்னெடுக்கும் பிரசாரங்கள் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சகல ஊடக நிறுவனங்கள், அரசாங்கத் துறை மற்றும் அரசியல்துறை இணைந்து செயற்பட்டால் தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நகரசபைப் பிரிவிற்குள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் பல காணப்படும்போது சுகாதார வைத்திய அதிகாரியின் பணி மூப்பைத் தீர்மானிப்பது தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு நகரசபை பிரிவுக்குள் சுகாதார வைத்திய அதிகாரிகள் பலர் பணியாற்றும்போது பொதுநலன் கருதி தீர்மானங்களை எடுப்பது குறித்த பிரச்சினை காணப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.
பண்டாரவளை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர், தியத்தலாவ மற்றும் பதுளை ஆகிய இரண்டு வைத்தியசாலைகள் இருக்கின்றபோதும் பண்டாரவளை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதில் சிக்கல் இருப்பதாகக் குறிப்பிட்டார். மாறாக தியத்தலாவை வைத்தியசாலையில் அமைக்கப்படாத பிரிவுகளே பண்டாரவளை வைத்தியசாலையில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பண்டாரவளை வைத்தியசாலைக்குச் சென்று இப்பிரச்சினை குறித்து ஆராய்வதாக அமைச்சர் இங்கு கூறினார்.
மாத்தறை பொது வைத்தியசாலையின் சி.டி ஸ்கான் இயந்திரம் பழுதடைந்த நிலையில் காணப்படுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பண்டாரகம ஒசுசலவின் மேல் மாடி பண்டாரகம வைத்தியசாலையினால் பயன்படுத்தப்படுவதால் ஒசுசலவின் ஔடதங்களைக் களஞ்சியப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. வைத்தியசாலைக்குப் புதிய கட்டடம் அமைக்கப்பட்ட பின்னர் குறித்த மேல் மாடியை மீண்டும் வழங்க வேண்டும் என உறுப்பினர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மேல் மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதாகக் குறிப்பிட்டார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தாதியர் பணியாளர்களுக்கு ஆட்களை சேர்ப்பதில் தற்போதுள்ள வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் புதிய வெற்றிடங்களை உருவாக்குவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே, மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



