logo

E   |   සි   |  

2021-08-06

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கொவிட் காரணமாக காலதாமதம் அடைந்திருக்கும் கொரிய வேலைவாய்ப்புக்களை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

நிலவும் கொவிட் சூழல் காரணமாக கொரிய வேலைவாய்ப்புக்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை விரைவுபடுத்துவதறான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் அண்மையில் (04) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஏற்கனவு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும், இலங்கையர்களுக்கு விவசாயத்துறையில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு கொரியத் தூதுவர் விசேட யோசனையை முன்வைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இருந்தபோதும் தற்பொழுது நிலவும் கொவிட் சூழல் காரணமாக இந்த நடவடிக்கை காலதாமதம் அடைந்துள்ளபோதும் இதனை விரைவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரியாவில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க குறிப்பிடுகையில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள வெளிநாட்டு நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக அந்நாட்டின் யுத்த வீரர்கள் வெளிநாடுகளில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான பின்னணியில் இலங்கை படைவீரர்கள் தமது தாய்நாட்டைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கையின் போது கூட மனித உரிமைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நியாயமற்றது என்றும், இந்நாட்டுப் படைவீரர்களின் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். தேசிய அரசாங்கங்களின் இறைமைக்கு எதிராக மனித உரிமை பயன்படுத்தப்படும் விடயத்தில் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் படைவீரர்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை உலகத்துக்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கடந்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அத்துடன் உயர் நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக இது தொடர்பில் சாட்சிகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. இதன் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொவிட் சூழலுக்கு மத்தியில் பல உலக நாடுகள் இலங்கையை சிவப்பு வலயத்தில் உள்ள நாடாக அறிவித்திருப்பதால் நாடு தொடர்பான இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அந்தந்த நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இங்கு குறிப்பிட்டார். சில நாடுகளில் காணப்படும் நிலைமைகள் காரணமாக இது சிக்கலான விடயமாக இருப்பதாகவும், முடிந்தளவு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் இம்மாதம் 15ஆம் திகதி பதவியேற்கவிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிடுகையில், வெளிநாட்டு அலுவல்களுடன் தொடர்புபட்ட பொது மக்களின் முறைப்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளான தம்மிடம் முன்வைக்கப்படுவதாகவும், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு இணைப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் ராமமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் சாணக்கியன் இராமாணிக்கம் எழுப்பிய விடயத்துக்குப் பதிலளித்த வெளிநாட்டு அமைச்சின் செயலாளர், இந்த விடயத்துக்கு இந்தியத் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் துறைமுக அமைச்சு இறுதி முடிவுக்கு வரவில்லையென்றார்.

வெளிநாட்டு சேவைகள் தொடர்பான பரீட்சையை நடத்துவது காலதாமதம் அடைந்திருப்பதாகவும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டினார். தற்பொழுது நிலவும் கொவிட் சூழல் காரணமாக பரீட்சையை நடத்துவது காலதாமதம் அடைந்திருப்பதாகவும், பரீட்சைகள் திணைக்களம் விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சின் செயலாளர் பதிலளித்தார். 2018ஆம் ஆண்டே இறுதியாக இப்பரீட்சை நடத்தப்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு சேவைகளில் அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் இங்கு புலப்பட்டது. இந்தப் பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், நேர்முகப் பரீட்சைகளை நடத்தி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சாணிக்கியன் இராசமாணிக்கம், காமினி வலேபொட, கலாநிதி சுரேன் ராகவன், யதாமினி குணவர்த்தன மற்றும் சுதத் மஞ்சு ஆகியோரும், வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks