01

E   |   සි   |  

2021-07-06

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஒப்புதல்

ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதற்கமைய இந்த சட்டமூலம் எதிர்வரும் 08 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது.

உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் தலைமையில் நேற்றுக் கூடிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்ஹ மற்றும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முன்னர் பாதுகாப்புத் தரப்பினரைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கிவந்த இந்தப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் வழங்கிய ஆலோசனைக்கு அமைய சாதாரண மாணவர்களும் கல்வி பயிலும் வகையில் இது விஸ்தரிக்கப்பட்டது என இங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையிலான விடயதானங்களில் மாணவர்களை உருவாக்குவது தொடர்பில் இந்தப் பல்கலைக்கழகம் மீது பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்திற்கிடையில் உயர்ந்த மதிப்பு மற்றும் கேள்வி ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாடநெறிகள் பூர்த்தி செய்யப்படுவது இதற்குப் பிரதான காரணம் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தப் பாடநெறிகள் யாவும் உயர்ந்த தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்ற சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை வழங்குவது என்ற ஜனாதிபதியின் கொள்கையை நிறைவேற்றும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகம் எதிர்காலத்தில் செயற்படும் என்றும் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் 2009ஆம் ஆண்டிலேயே முதலில் ஆரம்பமானது. 12 வருடங்களுக்கு மேலாக இச்சட்டமூலம் காணப்படுகிறது. நிபுணர்கள் பலர் இணைந்து இதனைத் தயாரித்து சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி, பல்வேறு ஆய்வுகளின் பின்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு 2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அப்போது பாதுகாப்பு அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன இதனை முன்வைக்க முயற்சித்தபோதும் பல்வேறு காரணங்களால் நிவர்த்தி செய்ய முடியாமல் போனது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குறிப்பிடுகையில், முன்னாள் பிரதமர் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல அவர்களால் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட காணியில் 1981ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்துக்கான சட்டமூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளபோதும் தேசிய பல்கலைக்கழகத்துக்குத் தேவையான கட்டமைப்பு சட்டபூர்வமாக வழங்கப்படவில்லை என்றார்.

தற்பொழுது 11 பீடங்களைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு உலக இராணுவ பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலில் 04வது இடம் கிடைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய உபவேந்தர், இவ்வாறான நிலையில் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதன் ஊடாக இதனை மேலும் உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்றார்.

பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காத திறமையான பல மாணவ மாணவியர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வியைப் பெறுவதற்கு விரும்புவதால் பெருந்தொகையான நிதி நாட்டைவிட்டு வெளியேறுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இவ்வாறான நிலையில் குறைந்த செலவில் தரமான கல்வியை இந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடாகத் தொடர்வதற்கு வாய்ப்புக் கிடைப்பது முக்கியமானது என்றும் தெரிவித்தனர்.

 

1

2

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks