பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-07-06
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதற்கமைய இந்த சட்டமூலம் எதிர்வரும் 08 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது.
உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் தலைமையில் நேற்றுக் கூடிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்ஹ மற்றும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
முன்னர் பாதுகாப்புத் தரப்பினரைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கிவந்த இந்தப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் வழங்கிய ஆலோசனைக்கு அமைய சாதாரண மாணவர்களும் கல்வி பயிலும் வகையில் இது விஸ்தரிக்கப்பட்டது என இங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையிலான விடயதானங்களில் மாணவர்களை உருவாக்குவது தொடர்பில் இந்தப் பல்கலைக்கழகம் மீது பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்திற்கிடையில் உயர்ந்த மதிப்பு மற்றும் கேள்வி ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாடநெறிகள் பூர்த்தி செய்யப்படுவது இதற்குப் பிரதான காரணம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்தப் பாடநெறிகள் யாவும் உயர்ந்த தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்ற சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை வழங்குவது என்ற ஜனாதிபதியின் கொள்கையை நிறைவேற்றும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகம் எதிர்காலத்தில் செயற்படும் என்றும் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.
இந்த சட்டமூலம் 2009ஆம் ஆண்டிலேயே முதலில் ஆரம்பமானது. 12 வருடங்களுக்கு மேலாக இச்சட்டமூலம் காணப்படுகிறது. நிபுணர்கள் பலர் இணைந்து இதனைத் தயாரித்து சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி, பல்வேறு ஆய்வுகளின் பின்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு 2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அப்போது பாதுகாப்பு அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன இதனை முன்வைக்க முயற்சித்தபோதும் பல்வேறு காரணங்களால் நிவர்த்தி செய்ய முடியாமல் போனது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குறிப்பிடுகையில், முன்னாள் பிரதமர் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல அவர்களால் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட காணியில் 1981ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்துக்கான சட்டமூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளபோதும் தேசிய பல்கலைக்கழகத்துக்குத் தேவையான கட்டமைப்பு சட்டபூர்வமாக வழங்கப்படவில்லை என்றார்.
தற்பொழுது 11 பீடங்களைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு உலக இராணுவ பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலில் 04வது இடம் கிடைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய உபவேந்தர், இவ்வாறான நிலையில் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதன் ஊடாக இதனை மேலும் உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்றார்.
பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காத திறமையான பல மாணவ மாணவியர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வியைப் பெறுவதற்கு விரும்புவதால் பெருந்தொகையான நிதி நாட்டைவிட்டு வெளியேறுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இவ்வாறான நிலையில் குறைந்த செலவில் தரமான கல்வியை இந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடாகத் தொடர்வதற்கு வாய்ப்புக் கிடைப்பது முக்கியமானது என்றும் தெரிவித்தனர்.
2026-01-27
மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்யவும் தீர்மானம்கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் பி.ப 2.00 மணிக்குக் கூட்டி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த குழு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் 2026.01.21ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய இக்குழு 2026.01.28ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். மூன்று மாத காலத்திற்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அநுர கருணாதிலக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, வலுசக்தி கௌரவ பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-01-27
இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிலக்கரி கப்பல்களினதும் நிலக்கரிகளின் தரம் பற்றிய அறிக்கையை வழங்கவும் – குழு அறிவுறுத்தல்மின் உற்பத்திக்காக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கேள்வியெழுப்பப்பட்டது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்திற்கு வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் நடைமுறை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய குழு, இறுதியாக நிலக்கரி இறக்குமதி செய்யும்போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.அத்துடன், இறுதியாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரத்தில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா எனக் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார்.நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கப்பல்களில் காணப்பட்ட நிலக்கரிகளின் மாதிரிகளின் தரங்கள் பரிசோதனைக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், இவற்றின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை தொடர்பில் சரியான தகவல்களை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்விடயம் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிலக்கரி இருப்புக்களை இறக்குமதி செய்யும் செயற்பாட்டுடன் தொடர்புபட்ட வரையறுக்கப்பட்ட லங்கா நிரக்கரி (தனியார்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரை அடுத்த குழுக் கூட்டத்திற்கு அழைக்கவிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.அதேநேரம், குறித்த குழுக் கூட்டத்தின் போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிலக்கரி கப்பல்களில் காணப்பட்ட நிலக்கரிகளின் தரம் குறித்த அறிக்கைகளையும், கடைசியாக வந்த கப்பலில் உள்ள நிலக்கரியின் தரம் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக அறிக்கைகளையும் குழுவிற்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா மற்றும் சத்துர கலப்பதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-26
45 நாட்களுக்குள் சேர் பெறுமதி வரியை மீளப்பெறுவதை விரைவில் நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு பாராட்டு கொழும்பு துறைமுக நகரில் அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரை (Authorized person) நியமிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. கடந்த ஜன. 20ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, எம்.கே.எம்.அஸ்லம், நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன் மற்றும் சம்பிக்க ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய நிறுவனமொன்று வணிகத்தில் ஈடுபட விரும்பும் போது, குறித்த விண்ணப்பதாரர் கொாழும்பு துறைமுக நகரப் பகுதியில் வணிகத்தில் ஈடுபட அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவராகத் தகுதி பெறவும், அனுமதியைப் பெறுவதற்கும் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்று பதிவுக்காக தற்போது 72 விண்ணப்பங்கள் இருப்பதாக குழு சுட்டிக்காட்டியது.இதற்கு அமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திடடத்தின் கீழ் நான்காவது மறுஆய்வுக்காக கைச்சாத்திடப்பட்ட விருப்பக் கடிதத்திற்கு அமைய 2025.07.04ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர். எனவே, இந்த விண்ணப்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர். 2025 ஜூலை மாதமாகும் போது 54 விண்ணப்பங்கள் இருந்ததாகவும், அவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது. குறித்த சட்டம் திருத்தப்படவிருப்பதால் இதுவிடயத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தும் செயற்பாடு மாறுபடலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், இதனால் அவை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்று பதிலளித்த அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், திருத்தச் சட்டமூலம் 2026.01.20ஆம் திகதி நடைமுறைக்கு வருவதால் இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது நாட்டிலுள்ள அனைவரின் குறிக்கோள் என்றும், எனவே விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.மேலும், இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் (SVAT System) தற்போதைய முன்னேற்றம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.சேர் பெறுமதி வரி முறையின் கீழ் மீளப்பெறும் வாய்ப்புக்களுடன் கூடிய கொடுப்பனவுகளை (Refund payments delays) மீளப்பெறும்போது 100% கணக்காய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் காலதாமதம் இருப்பதாகவும் இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் ஊடாக அந்தக் காலதாமதங்களை குறைத்து 45 நாட்களுக்குள் அவற்றை விரைவில் மீளப்பெறுதலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். 2026 ஜனவரி 15ஆம் திகதி வரையில் பணத்தைத் திரும்பப்பெறும் கொடுப்பனவுகளில் சுமார் 96% செலுத்தப்பட்டுவிட்டதாகவும், பெரும்பாலான பழைய கொடுப்பனவுகள் மேற்கொள்ளளப்பட்டிருப்பதாகவும் அதிகரிகள் தெரிவித்தனர்.குழுவில் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் ஊடாக சிறந்த பலனைப் பெறமுடியும் என்பது தெரியவருவதாகவும், இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் குழு குறிப்பிட்டது.
2026-01-26
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இச்சட்டமூலங்கள் குறித்து ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.2026.01.09ஆம் திகதி நடத்தப்பட்ட குறித்த குழுக் கூட்டத்தில் இச்சட்டமூலங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் உள்ளடக்கப்பட வேண்டிய திருத்தங்கள் சில தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவது, அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.இதற்கு அமைய கடந்த ஜன. 22ஆம் திகதி இந்தக் குழு மீண்டும் கூடியபோது குறித்த சட்டமூலங்கள் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக சர்வதேச கடல் எல்லையில் இடம்பெறும் அபாயகரமான அவுடதங்களின் கடத்தல்கள் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் திருத்தப்பட்டு புதிய சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.இக்கூட்டத்தில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, சந்தன சூரியஆரச்சி, எம்.கே.எம்.அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீ.டி.சூரியபண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

