பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2020-11-27
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கொழுப்புக்கு நீரைப் பெற்றுக்கொடுக்கும் இந்நாட்டின் பிரதான கங்கையான களனி கங்கை அங்கீகராமளிக்கப்படாத கட்டுமானங்கள், சுற்றாடல் பாதுகாப்பு அனுமதி அற்ற தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் காரணமாக மோசமான முறையில் மாசடைந்திருப்பது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது.
இந்த மாசினைத் தடுப்பதற்காக சுற்றாடல் அமைச்சு, நீர்வழங்கல் அமைச்சு மற்றும் அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியன இணைந்து விரைவில் பொறிமுறையொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோப் குழு நேற்று (26) பணிப்புரை விடுத்தது.
விசேடமாக குடிநீர் விநியோகம், சுற்றுலாத்துறை மற்றும் நகர அபிவிருத்தி என நாட்டில் தாக்கம் செலுத்தும் பல்வேறு விடயங்களுடன் களனி கங்கை நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதால், களனி கங்கை மாசடைவதைத் தடுப்பது அவசியம் எனக் கருதுவதால் கோப் குழு இதுபற்றிக் கூடுதல் கவனம் செலுத்தியது.
களினி கங்கை நீர் மாசடைவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றாடல் மதிப்பாய்வு அறிக்கையில் உள்ள விடயங்களை ஆராயும் நோக்கில் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு நேற்று (26) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அஜித் நிவார்ட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரட்ன, ஜகந் புஷ்பகுமார, பிரேம்நாத் சி.தொலவத்த, எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
நேற்றையதினம் கோப் குழு முதல் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தமை விசேட அம்சமாகம். இதற்கமைய பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி சஞ்சீவ முணசிங்க, கைத்தொழில் அமைச்சின் செயாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா மற்றும் பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ஆகியோர் முதல் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக கோப் குழுவுடன் இணைந்துகொண்டனர். அத்துடன் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி அனில் ஜாசிங்ஹ, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம ஆகிய அமைச்சின் செயலாளர்கள் கோப் குழுவுக்கு வருகை தந்திருந்ததுடன், கோப் குழுவின் கூட்டத்தில் மொத்தமாக ஐந்து அமைச்சின் செயலாளர்கள் இணைந்து கொண்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.
களனி கங்கையை அண்மித்ததாக 2946 தொழிற்சாலைகள் செயற்பட்டு வருவதாகவும், இவற்றில் 41 தொழிற்சாலைகள் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்குவதாகவும், 205 தொழிற்சாலைகளுக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் இவற்றில் 17 தொழிற்சாலைகள் எச்சரிக்கை மிகுந்தவை என்றும் கோப் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். எனவே விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என கோப் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது.
சீதாவாக்கை ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்றிறன் குறித்து கோப் குழு கவனம் செலுத்தியதுடன், திறனை மீறும் வகையில் சுத்திகரிப்பு இடம்பெறுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இருந்தபோதும் திறனை அதிகரிப்பதற்கு ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபைின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
களனி கங்கைக்கு இரு புறத்திலும் அமைக்கப்பட்டுள்ள அங்கீகாரமற்ற கட்டுமானங்களை அகற்றுவதன் அவசியம் குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது. விசேடமாக இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் காரணமாக கழிவு நீர் கங்கைக்கு வெளியேற்றப்படுவதால் நீர் மாசடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டினார். இந்தக் கட்டுமானங்களை ஒரே நேரத்தில் அகற்றுவது கஷ்டமான காரியம் என்பதால் இதனை விரைவில் நிவர்த்தி செய்வது அவசியமானது என கோப் குழு வலியுறுத்தியது.
அத்துடன், களனி கங்கையை அண்மித்த பகுதியில் இயங்கும் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சில சட்டவிரோதமாக கட்டடங்களை அமைத்திருப்பதுடன், இவை சுற்றாடல் பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்கொண்டிருக்கவில்லையென்றும் கோப் குழுவில் புலப்பட்டது. விசேடமாக கித்துல்கல பிரதேசத்தில் களனி கங்கயை அண்மித்த பகுதியில் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் இன்றி 18 வருடங்களுக்கு முன்னர் இருந்து உணவகமொன்று செயற்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழு பரிந்துரைத்தது.
சீதாவாக்கை வலயத்தில் திடக்கழிவுகள் அகற்றப்படுவதால் அப்பகுதியின் நிலத்தடி நீர் தொடர்பில் ஆராயவேண்டியத்தின் அவசியத்தையும் கோப் குழு சுட்டிக்காட்டியது. இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோப் குழு தெரிவித்தது.
அத்துடன், பியகம ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெறும் செயற்பாடுகள் காரணமாக களனி கங்கை மாசடைவது தொடர்பிலும், கித்துல்கல பிரதேசத்தில் முன்னெடுத்துச்செல்லப்படும் 07 வாகன சேர்விஸ் நிலையங்கள் நீரை சுத்திகரிக்காது அவற்றை கங்கைக்கு வெளியேற்றுவது தொடர்பிலும், கோஹிலவத்தை மயானத்தின் எல்லைச்சுவர் கங்கை பகுதியில் இடிந்து வீழ்ந்தமை தொடர்பிலும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டன.
2026-09-01
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
2026-08-21
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
2026-08-18
உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
2026-08-18
கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 16) நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் செயலமர்வுகளின் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரிஎல்லே, எஸ். எம். மரிக்கார், லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.இளைஞர் சமூகத்தினர் கல்வி மற்றும் உயர் கல்வி, அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் நடவடிக்கைகள், இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இளைஞர்களின் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் எதிர்கால பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது தொடர்பில் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஆவணப்படுத்தி, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திடம் திறந்த இளைஞர் அறிக்கையாளர்கள் (Youth Rapporteurs) நியமிக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் மேற்கொண்டிருந்ததுடன், இதற்கான நிதியுதவியை தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) வழங்கியிருந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
