01

E   |   සි   |  

2020-11-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

எதிர்காலத்தில் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட முன்னர் அதற்காக சுவீகரிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ

நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நிலங்கள் சுவீகரிக்கப்படும்போது அவற்றுக்கான நஷ்டஈடு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் வழங்கப்பட வேண்டும் என நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற நீர்ப்பாசனம் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழுவில் தெரிவித்தார்.

நிலங்களை இழக்கும் பொது மக்களின் திருப்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நீதி கிடைக்கக்கூடிய வகையில் மக்களுக்கு தொடர்ந்து இழப்பீடு வழங்குவதன் மூலம் இத்திட்டத்திற்கு அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

உமா ஓயா பல்நோக்கு நீர் திட்டத்தினால் காணிகளை இழந்த 6000 குடும்பங்களுக்கு மாத்திரம் இன்னமும் நஷ்டஈடு கிடைக்காமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரோ, இங்கு அமைச்சரின் கனவத்துக்குக் கொண்டுவந்தபோது அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

உமா ஓயா பல்நோக்கு நீர் அபிவிருத்தித் திட்டத்தின் முழுமையான பணிகள் அடுத்தவருடம் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், இதற்கமைய இந்த முதலீட்டில் அரசாங்கத்துக்கு நன்மை கிடைக்கும் முக்கிய அங்கமான மின்சார உற்பத்தியின் ஊடாக 120 மெகாவட் மின்சாரத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் தேசிய கட்டமைப்பில் இணைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.

அத்துடன் இதற்கு அவசியமான சகல ஒதுக்கீடுகளும் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் 355 குளங்களுக்கு அவசியமான நீரை வழங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

ஆறு வருடங்களில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள 1200 சிறிய குளங்களை  போஷனையூட்டும் வகையில் 26 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை மற்றும் 94 கிலோமீட்டர் நீளமான வடமத்திய பிரதான கால்வாய் திட்டத்தை நான்கு வருடங்களில் பூர்த்திசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு.திஸாநாயக்க குறிப்பிட்டார். இவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இவ்வருட வரவுசெலவுத்திடடத்தில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் காலதாமதம் அடைந்திருக்கும் பல திட்டங்களை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐந்து வருடங்களாக தடைப்பட்டுள்ள சந்திரிகா வாவி ஊடாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள கைத்தொழில் வலயத்துக்கு நீரை விநியோகிக்கும் ஜின் மற்றும் நில்வளா திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு 2026-2027 ஆண்டாகும்போது அவற்றைப் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்பது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 450 மில்லியன் கன அடி நீரைக் கொண்டுசெல்லும் இந்தத் திட்டத்தின் ஊடாக ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய பிரதேசங்கள் பலவற்றுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன், மன்னார் உள்ளடங்களான பல பகுதிகளில் காணப்படும் நீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு கீழ் மல்வத்து ஓயா நீர் திட்டத்தை விரைவில் பூர்த்திசெய்யவிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

குளங்கள் உள்ளடங்கலாக நீர்ப்பான கட்டமைப்புக்கள் பல இராணுவத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்புகளைப் பயன்படுத்தி புனரமைக்கப்பட்டு வருவதுடன், அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகள் விரைவுபடுத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். அத்துடன் வடக்கில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புதிய தொழில்நுட்பமுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இது மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதிகளில் தற்போதுள்ள நீர்ப்பாசன முறைகளின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து அமைச்சரின் கவனத்தை ஈர்த்ததுடன், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பான அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், அநுராத ஜயரட்ன, மஹாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் பொது உட்கட்டடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், நாளக பண்டார கோட்டேகொட, நிமல் பியதிஸ்ஸ, சிவஞானம் சிறிதரன், கலாநிதி சுரேன் ராகவன், உதயன கிரிந்திகொட, எஸ்.எம்.எம்.முஷாரப், மர்ஜான் பலீல், சாணக்கியன் ராசமாணிக்கம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks