logo

பார்க்க

02

E   |   සි   |  

2020-11-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

எதிர்காலத்தில் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட முன்னர் அதற்காக சுவீகரிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ

நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நிலங்கள் சுவீகரிக்கப்படும்போது அவற்றுக்கான நஷ்டஈடு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் வழங்கப்பட வேண்டும் என நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற நீர்ப்பாசனம் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழுவில் தெரிவித்தார்.

நிலங்களை இழக்கும் பொது மக்களின் திருப்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நீதி கிடைக்கக்கூடிய வகையில் மக்களுக்கு தொடர்ந்து இழப்பீடு வழங்குவதன் மூலம் இத்திட்டத்திற்கு அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

உமா ஓயா பல்நோக்கு நீர் திட்டத்தினால் காணிகளை இழந்த 6000 குடும்பங்களுக்கு மாத்திரம் இன்னமும் நஷ்டஈடு கிடைக்காமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரோ, இங்கு அமைச்சரின் கனவத்துக்குக் கொண்டுவந்தபோது அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

உமா ஓயா பல்நோக்கு நீர் அபிவிருத்தித் திட்டத்தின் முழுமையான பணிகள் அடுத்தவருடம் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், இதற்கமைய இந்த முதலீட்டில் அரசாங்கத்துக்கு நன்மை கிடைக்கும் முக்கிய அங்கமான மின்சார உற்பத்தியின் ஊடாக 120 மெகாவட் மின்சாரத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் தேசிய கட்டமைப்பில் இணைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.

அத்துடன் இதற்கு அவசியமான சகல ஒதுக்கீடுகளும் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் 355 குளங்களுக்கு அவசியமான நீரை வழங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

ஆறு வருடங்களில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள 1200 சிறிய குளங்களை  போஷனையூட்டும் வகையில் 26 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை மற்றும் 94 கிலோமீட்டர் நீளமான வடமத்திய பிரதான கால்வாய் திட்டத்தை நான்கு வருடங்களில் பூர்த்திசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு.திஸாநாயக்க குறிப்பிட்டார். இவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இவ்வருட வரவுசெலவுத்திடடத்தில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் காலதாமதம் அடைந்திருக்கும் பல திட்டங்களை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐந்து வருடங்களாக தடைப்பட்டுள்ள சந்திரிகா வாவி ஊடாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள கைத்தொழில் வலயத்துக்கு நீரை விநியோகிக்கும் ஜின் மற்றும் நில்வளா திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு 2026-2027 ஆண்டாகும்போது அவற்றைப் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்பது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 450 மில்லியன் கன அடி நீரைக் கொண்டுசெல்லும் இந்தத் திட்டத்தின் ஊடாக ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய பிரதேசங்கள் பலவற்றுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன், மன்னார் உள்ளடங்களான பல பகுதிகளில் காணப்படும் நீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு கீழ் மல்வத்து ஓயா நீர் திட்டத்தை விரைவில் பூர்த்திசெய்யவிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

குளங்கள் உள்ளடங்கலாக நீர்ப்பான கட்டமைப்புக்கள் பல இராணுவத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்புகளைப் பயன்படுத்தி புனரமைக்கப்பட்டு வருவதுடன், அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகள் விரைவுபடுத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். அத்துடன் வடக்கில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புதிய தொழில்நுட்பமுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இது மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதிகளில் தற்போதுள்ள நீர்ப்பாசன முறைகளின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து அமைச்சரின் கவனத்தை ஈர்த்ததுடன், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பான அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், அநுராத ஜயரட்ன, மஹாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் பொது உட்கட்டடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், நாளக பண்டார கோட்டேகொட, நிமல் பியதிஸ்ஸ, சிவஞானம் சிறிதரன், கலாநிதி சுரேன் ராகவன், உதயன கிரிந்திகொட, எஸ்.எம்.எம்.முஷாரப், மர்ஜான் பலீல், சாணக்கியன் ராசமாணிக்கம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-07-21

இயலாமையுடைய நபர்களுக்கான ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் தூதுக்குழுவுடன் கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கை நடைமுறைப்படுத்தல்களை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுஇயலாமையுடைய நபர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலும், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சே அவர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை நிறுவியமைக்காக பாராளுமன்றத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன், இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய அபிவிருத்தியை அனைத்து துறைகளிலும் தேசிய முன்னுரிமையாகக் கருதுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். சட்ட மறுசீரமைப்பு, அணுகல் வசதிகள், கல்வி, வேலைவாய்ப்புகள், சமூக மட்டத்திலான புனர்வாழ்வு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் நிறுவன ரீதியான ஆதரவையும் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.யுனிசெஃப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி பெகோனா அரெலானோ அவர்கள் குறிப்பிடுகையில், விசேடமாக சுகாதாரம், போஷாக்கு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இயலாமையுடைய சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய கொள்கைகளை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ள கண்காணிப்புப் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.அத்துடன், UNFPA, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள், இளைஞர் விவகாரங்கள், கல்வி, இயலாமை நிலையிலுள்ள நபர்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக உள்ளடக்கம் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்தைத் தெளிவுபடுத்தினர்.கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டமூலமும் சைகை மொழி தொடர்பான சட்டமூலமும் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்தச் சட்டமூலங்களை 2026 செப்டெம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், அரசாங்க நிறுவனங்களில் அணுகல் வசதிகளை மேம்படுத்துதல், ஊனமுற்ற நபர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் இந்த வருடத்திற்குள் ஊனமுற்ற சிறார்களுக்காக பத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அதேபோன்று, அரசாங்க அமைச்சுக்களின் ஊடாக ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்தல், தேசிய ஊனமுற்றோர் தரவுத் தொகுதியை நிறைவு செய்தல் மற்றும் ஊனமுற்ற நபர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை ஊக்குவிப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியொன்றை நடத்துதல் உள்ளிட்ட எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.கலந்துரையாடலின் நிறைவில், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள், ஒன்றியத்தின் கருப்பொருளான “தடையற்ற சமூக வாழ்க்கை” என்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஊனமுற்ற நபர்களை உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.இந்த நிகழ்வில், ஒன்றியத்தின் கௌரவ பிரதித் தலைவர்களான கயந்த கருணாதிலக்க மற்றும் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்கள், அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், UNFPA, UNICEF, UNDP, ILO மற்றும் UN Volunteers நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-07-20

மாகாணசபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கை விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில்

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த விசேட குழுவில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தற்பொழுது காணப்படும் விகிதாசார முறை மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றாமல் வைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப வழிமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.முன்மொழியப்பட்ட இந்தத் தேர்தல் முறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் எழக்கூடிய சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் குழு விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஆய்வுக்குப் பின்னர் எதிர்காலக் கூட்டத்தில் இவ்விடயத்தை மீண்டும் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.மாகாண சபை மற்றும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 33% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக வலியுறுத்தியது. இதற்கமைய, தொடர்புடைய தேர்தல் வழிமுறைகளை வகுக்கும்போது இந்தக் கொள்கை முடிவு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, சட்டத்தரணி சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராசபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 


2026-07-20

அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முறையான விவசாயத் தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்து

நெல் கொள்வனவு செயன்முறை மற்றும் நாட்டின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், விவசாய உற்பத்திக்கும் சந்தைத் தேவைக்கும் இடையிலான சமநிலையின்மையைக் குறைப்பதற்காகத் துல்லியமான தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.பயிரிடப்படும் பயிர் வகைகள், பயிரிடப்படும் அளவுகள் மற்றும் சந்தைத் தேவைகள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலதிக உற்பத்தி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்க முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டது.அரிசி உற்பத்தியைப் பொறுத்தவரையில் சம்பா, கீரி சம்பா, நாடு மற்றும் சிவப்பு அரிசி போன்ற அரிசி வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகள் தொடர்பிலும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைத் திட்டமிடுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான தரவுப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதேவேளை, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கோரிக்கைக்கு அமைய, 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுtதவிசாளரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவும் பரிசீலிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, கிட்ணன் செல்வராஜ் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோரும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு  ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-07-16

கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம்

இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks