01

E   |   සි   |  

2019-10-23

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2018ஆம் ஆண்டு 10,502 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதாக அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்றத்தில் இன்று (23) சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த வருடம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 50 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதுடன், வரையறுக்கப்பட்ட எல்கடுவ கம்பனி 3 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இதற்கு மேலதிகமாக 2018ஆம் ஆண்டு பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் 2,187,367 ரூபாவும், மரபுரிமைகள் தொடர்பான மேற்படிப்புக்கான நிறுவனம் 3,567,328 ரூபாவும் நஷ்டம் அடைந்துள்ளன.

 

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை ஆகியன தமது வருடாந்த அறிக்கைகளை குழுவுக்கு சமர்ப்பித்திருக்கவில்லை.

 

லங்கா ஹொஸ்பிட்டல் கோப்ரேஷன் பி.எல்.சி, இலங்கை அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அரசாங்க பொறியியலாளர் கூட்டுத்தாபனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம், வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனம் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கோப் குழு நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

 

2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 09ஆம் திகதி முதல் அரச பொறுப்பு முயற்சிகள் குழுவின் விசாரணைகள் ஊடகங்களுக்கு அறிக்கையிட அனுமதிக்கப்பட்டதுடன், இலங்கையின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார துறைகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் மற்றும் காணப்படுகின்ற சவால்களில் மக்கள் தலையிடுவதற்கான வாய்ப்புக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

 

அரச பொறுப்பு முயற்சிகள் குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின்னர் கருத்துத் தெரிவித்த அக்குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, கோப் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் மதிப்பு ஏற்பட்டிருப்பதுடன், குழுவுக்குக் காணப்படும் அதிகாரங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ள முடிகிறது. இதனால் கோப் குழு முன்வைக்கும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் அவர்களே தீர்மானிக்க முடியும் என்றார்.

 

விசேடமாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் முதலாவது அறிக்கையில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கண்காணிப்புக்கள் எட்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும். இருந்தபோதும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட எட்டு நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் தொடர்பிலேயே அமைச்சுக்களின் கண்காணிப்புக்கள் கிடைத்துள்ளன என்றும் கூறினார்.

 

கோப் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டியவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் விசாரணைகளை கண்காணிக்க நீதிமன்ற அதிகாரம் கொண்ட குழுவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு விசாரிக்கும் நிறுவனங்களில் இடம்பெறுகின்ற முறைகேடுகளுக்கான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக சபைக்குத் தலைமைதாங்கிய பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்

 



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks