பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2019-10-23
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2018ஆம் ஆண்டு 10,502 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதாக அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்றத்தில் இன்று (23) சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 50 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதுடன், வரையறுக்கப்பட்ட எல்கடுவ கம்பனி 3 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 2018ஆம் ஆண்டு பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் 2,187,367 ரூபாவும், மரபுரிமைகள் தொடர்பான மேற்படிப்புக்கான நிறுவனம் 3,567,328 ரூபாவும் நஷ்டம் அடைந்துள்ளன.
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை ஆகியன தமது வருடாந்த அறிக்கைகளை குழுவுக்கு சமர்ப்பித்திருக்கவில்லை.
லங்கா ஹொஸ்பிட்டல் கோப்ரேஷன் பி.எல்.சி, இலங்கை அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அரசாங்க பொறியியலாளர் கூட்டுத்தாபனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம், வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனம் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கோப் குழு நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 09ஆம் திகதி முதல் அரச பொறுப்பு முயற்சிகள் குழுவின் விசாரணைகள் ஊடகங்களுக்கு அறிக்கையிட அனுமதிக்கப்பட்டதுடன், இலங்கையின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார துறைகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் மற்றும் காணப்படுகின்ற சவால்களில் மக்கள் தலையிடுவதற்கான வாய்ப்புக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
அரச பொறுப்பு முயற்சிகள் குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின்னர் கருத்துத் தெரிவித்த அக்குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, கோப் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் மதிப்பு ஏற்பட்டிருப்பதுடன், குழுவுக்குக் காணப்படும் அதிகாரங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ள முடிகிறது. இதனால் கோப் குழு முன்வைக்கும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் அவர்களே தீர்மானிக்க முடியும் என்றார்.
விசேடமாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் முதலாவது அறிக்கையில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கண்காணிப்புக்கள் எட்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும். இருந்தபோதும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட எட்டு நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் தொடர்பிலேயே அமைச்சுக்களின் கண்காணிப்புக்கள் கிடைத்துள்ளன என்றும் கூறினார்.
கோப் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டியவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் விசாரணைகளை கண்காணிக்க நீதிமன்ற அதிகாரம் கொண்ட குழுவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு விசாரிக்கும் நிறுவனங்களில் இடம்பெறுகின்ற முறைகேடுகளுக்கான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக சபைக்குத் தலைமைதாங்கிய பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks