பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் பெண்கள் பாராளுமன்ற ஒன்றியத்தினால் USAID/SDGAP எனும் அமைப்புக்களுடன் இணைந்து சிறப்பான சேவையாற்றிய விசேட தனிச் சிறப்புவாய்ந்த இலங்கைப் பெண்களைப் பாராட்டுவதற்கான விழா 2019 மார்ச் மாதம் 27 ஆம் திகதி, புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அதன்பிரகாரம், கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் சிறப்பான சேவையாற்றிய விசேட தனிச் சிறப்புவாய்ந்த பன்னிரண்டு பெண்களின் உருவப்படங்கள் பாராளுமன்றத்தின் கீழ் மாடியில் அமைந்துள்ள பொதுமக்கள் வரவேற்பு மண்டபத்தில் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டன. உருவப்படங்களின் கண்காட்சி 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் வரவேற்பு மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
விசேட தனிச் சிறப்புவாய்ந்த 12 பெண்களாவன;
2026-04-29
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.இந்தக் குழு அதன் தலைவர் கௌவர அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் கூடியபோதே அதிகாரிகள் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சம்பத் கொத்துவேகொட உள்ளிட்ட அதிகாரிகள் இக்குழுவில் கலந்துகொண்டனர்.இயற்கை அனர்த்த சூழ்நிலையின் போது வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன செயற்படும் முறை குறித்து இங்கு விளக்கம் கோரப்பட்டது.நடைமுறையில் உள்ள பொறிமுறையின் குறைபாடுகளையும், தொடர்புடைய தொழில்நுட்ப சாதனங்களின் குறைபாடுகளையும் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கிக் கூறினர்.அத்துடன், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை எதிர்காலத்தில் குழு முன்னிலையில் அழைப்பதற்கும், இந்த நிறுவனங்கள் முதலில் செயற்படும் முறைகள் குறித்து விளக்கம் கோருவதற்கும், தேவை ஏற்படின் இந்த நிறுவனங்களைத் தனித்தனியாக அழைத்து தித்வா சூறாவளி தாக்கம் குறித்து வினவுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான (வைத்தியர்) பிரசன்ன குணசேன, மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, அன்டன் ஜயக்கொடி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அநுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோகினீ குமாரி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபாலகம, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-04-28
இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் உயர்கல்வி, சமய மற்றும் கலாசார மையங்கள், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளைக் கொண்ட வீடுகள், தொழில்முயற்சிக்கான கடன் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், 2024/2025-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களில் 143 இயலாமையுடைய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2025/2026-ஆம் ஆண்டில் 203 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 25 முதல் 50 மில்லியன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறைந்த வருமானம் கொண்ட இயலாமையுடைய மாணவர்களுக்கு மாதம் ரூ. 5,000 மேலதிக உதவித்தொகையை வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது. மேலும், பல பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் இயலாமையுடைய மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான முன்னோட்ட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தரமான சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும், விபத்துகள் காரணமாக இயலாமையுடைய நபர்களாக்கப்படும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் போன்ற உதவி சாதனங்களை வழங்கும் திட்டத்தை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இங்கு தெரிவித்தது.அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் உயரதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இயலாமையுடைய நபர்கள் மத வழிபாட்டுத் தலங்களை அணுகுவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து ஒன்றியத்தின் தலைவர், அமைச்சின் அதிகாரிகளுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கமைய சமய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இயலாமையுடைய நபர்கள் அணுகக் கூடிய வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக, மத்திய கலாச்சார நிதியம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.வீடு, கட்டுமானம் மற்றும் நீர்வளங்கள் அமைச்சு மேல்மாகாணத்தில் இயலாமையுடைய நபர்களின் வீட்டு வசதிகளுக்காக ரூ.500 மில்லியனை ஒதுக்கியிருப்பதாகவும், 2026ஆம் ஆண்டு 9,700 வீடுகளை அமைப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. மேலும், இயலாமையுடைய நபர்களுக்காக விசேட கடன் திட்டமொன்றை கடைப்பிடிக்கவும், அவர்களின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு 'மாதிரித் திட்டத்தை'த் தயாரிப்பதற்கும் அமைச்சு இணக்கம் தெரிவித்தது.இயலாமையுடைய நபர்களின் விசேட தேவைகளைக் கருத்தில் கொண்டு நெகிழ்வான மாதிரியில் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், வங்கிகளுக்கும், இயலாமையுடைய தொழில்முனைவோருக்கும் இடையில் நம்பிக்கை தொடர்பான இடைவெளி காரணமாக கடன்பெறுவதில் சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டனர். இதற்கு அமைய இயலாமையுடைய நபர்களுக்காக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறு ஒன்றியத்தின் தலைவர் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.புதிய தயாரிப்புகளை வணிகமயமாக்குவதில் இயலாமையுடைய நபர்களுக்கு உதவும் ஆய்வுகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு கவனம் செலுத்துவாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்குத் தேவையான சாதனங்களைத் தயாரிக்க ஆராய்ச்சி குழுக்களை ஊக்குவிக்கவும், அவற்றை சந்தைக்குக் கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இதற்கு மேலதிகமாக, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு பாராளுமன்ற விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா, சுற்றுச்சூழல் போன்ற அமைச்சுக்களின் அதிகாரிகளும் ஒன்றியத்தில் தமது அமைச்சுசார்ந்த திட்டங்களை முன்வைத்தனர்.ஒவ்வொரு அமைச்சினாலும் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களில் மீண்டும் மீளாய்வு செய்யவும் ஒன்றியம் தீர்மானித்தது.இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான டி.கே. ஜெயசுந்தர, ஜகத் மனுவர்ண ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன், இயலாமையுடைய பெண்களின் தேசிய ஒன்றியம், இலங்கை செவிப்புலனற்றோர் சங்கம், இயலாமையுடைய இளைஞர்களுக்கான வலையமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-04-10
2017 பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றங்கள் ஆராய்வு 2021-2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த விடயங்களும் ஆராய்வுஇலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது. இங்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன், 2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.04.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.இங்கு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த விடயங்கள் வெளிப்பட்டதுடன், 2025 டிசம்பர் 31ஆம் திகதிவரையில் பூர்த்திசெய்யப்படாத விசாரணைகளின் எண்ணிக்கை1538 என்பதும் தெரியவந்தது. இவற்றில் ரூ.69,999,317 பெறுமதியான 40 நிதி மோசடி குறித்த விசாரணைகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதும், இந்த விசாரணைகள் 2007 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றவை என்பதும் தெரியவந்தது. விசாரணை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும், அதன் காரணமாகவே விசாரணைகள் தாமதமாவதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் பதிலளித்தனர். விசாரணைகளில் தாமதம் காணப்பட்டாலும், 2016ஆம் ஆண்டு டிசம்பரில் நிலுவையிலிருந்த விசாரணைகளின் எண்ணிக்கை 2711 என்றும், இது தற்பொழுது 1538 ஆகக் குறைந்துள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சில விசாரணைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இங்கு குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழு பரிந்துரைத்தது.அஞ்சல் தலையைமகம் மற்றும் 14 மாவட்ட அலுவலகங்களில் பணியாளரின் வருகை மற்றும் புறப்படுகை என்பவற்றைப் பதிவு செய்வதற்காகப் பொருத்தப்பட்டுள்ள கைவிரல் அடையாள இயந்திரத்தில் புறப்படும் நேரம் 16.15 எனப் பதிவாகியுள்ள போதும், சம்பந்தப்பட்ட பணியாளர்களின் புறப்படும் நேரம் இரவு 7,8,9,10 என பதிவேடுகளில் பதிவுசெய்து தலைமையகத்தின் பணியாளர்கள் 2023ஆம் ஆண்டில் 57,919,684 ரூபாவையும், 2024ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரையில் 7,024,144 ரூபாவையும், 14 மாவட்ட அலுலகங்களில் உள்ள பணியாளர்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் யூன் வரையில் 373,874,705 ரூபாவையும் மேலதிக நேரக் கொடுப்பனவாகப் பெற்றுக் கொண்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், பணியாளர்களுக்கு 4000/5000 வெற்றிடங்கள் காணப்படுவதால் பணியில் உள்ளவர்கள் மேலதிக நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகச் சுட்டிக்காட்டினர். எனவே, இந்தக் கொடுப்பனவுகள் தவறானவை அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, மேலதிக நேரக் கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களுக்குச் சம்பளம் வழங்கலாம் என்று குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் குழு தெரிவித்தது. அத்துடன், இந்த விடயத்தை உள்ளடக்கியதாக அறிக்கையொன்றை கையளிக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அதேநேரம், இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அச்சகப் பிரிவினால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக 2015ஆம் ஆண்டில் 500 வெளியீட்டுப் பிரதிகளை அச்சிடுவதற்கு ரூ.2,697,300வும், நினைவேடுகளை அச்சிடுவதற்கு ரூ.1,092,656 செலவிட்டபோதும், 2025 நவம்பர் மாதம் நடத்திய கணக்காய்வு விசாரணையின் போது குறித்த வெளியீடுகள் சரியான தரத்தில் அச்சிடப்படவில்லையென்பதால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படாமல் அச்சகப் பிரிவில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. இது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழு தெரிவித்தது.மேலும், 2024 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, காலமான, ஓய்வுபெற்ற, இடைநீக்கம் செய்யப்பட்ட, இராஜினாமா செய்த மற்றும் பிற அதிகாரிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைக் கடன் ரூ. 61,225,431 ஆக இருந்தது. இதில், 5 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவைக் கடன் ரூ. 20,679,788 ஆகும். அதன்படி, இந்தப் பணத்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 17 கோரிக்கைக் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். அதன்படி, சம்பந்தப்பட்ட தொகை எவ்வாறு வசூலிக்கப்படவுள்ளது என்பதை விளக்கும் வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.மூன்று மாதங்களுக்குள் இலங்கை அஞ்சல் திணைக்களத்தை மீண்டும் அழைக்கவிருப்பதாகக் கூறி குழுவின் தலைவர் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.இக்குழுக் கூட்டத்தில் கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நளின் ஹேவகே, தினிந்து சமன் ஹென்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, சந்தன சூரியஆரய்ச்சி, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிகா அத்தாவுட, டி.கே. ஜயசுந்தர, அஜந்த கம்மத்தகே மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-04-10
மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளது.குறித்த விசேட பாராளுமன்றக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 07) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.வட்டார எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கையாக கௌரவ சபாநாயகரினால் பிரதமரின் தலைமையில் ஐவரைக் கொண்ட மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் கௌரவ ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றபோதும், அவ்வாறானதொரு அறிக்கை கையளிக்கப்படவில்லையென தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள் இக்குழுவில் தெரிவித்தனர். இதற்கு அமைய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மாகாணசபைத் தேர்தல் நடைமுறையைத் தொடர்வதற்குத் தேவையான விதிகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அடிப்படைச் சட்டத்தை மீண்டும் இயற்றுவதன் மூலம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வினவினர். 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தை இரத்துச் செய்து மீண்டும் அடிப்படைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது. குறித்த சட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான திருத்தம் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினர் சட்டமூலத்தில் முன்னைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர், 2017 மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புக்கள், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கக் கிடைக்கக்கூடிய சட்ட விதிகள் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அத்துடன், குழுவின் அடுத்த கூட்டத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அதிகாரிகளை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், சந்தன சூரியஆரய்ச்சி, தர்மப்பிரிய விஜேசிங்ஹ, லக்ஷ்மன் நிபுண ஆராச்சி மற்றும் சமன்மலி குணசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.