E   |   සි   |  

சபை அலுவல்கள்


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிஸ்ஸங்க விஜயரத்ன, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


கெளரவ எரிக் பிரசன்ன வீரவர்தன அவர்களுக்கு "ஹங்குரான்கெத மாதென்வல ரஜ மகா விகாரை அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. பின்வரும் பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன:-

பொலித்தீன், பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருட்களை அழித்துவிடுவது தொடர்பான பொதுமக்களுக்கு அறிவூட்டுமுகமாக நாடளாவிய ரீதியிலான நிகழ்ச்சித்திட்டமொன்றினை அமுலாக்குதல்

நாட்டினுள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றின் பாவனை வேகமாக அதிகரித்து வருவதாலும் அவ்வாறான கழிவுப் பொருட்களை பாரதூரமின்றி அகற்றுவதனால் ஏற்படும் பாரியளவு சுற்றாடல் மாசுபடுதல் நிமித்தமும் பொலித்தீன், பிளாஸ்டிக் போன்ற கழிவுப் பொருட்களை அழித்துவிடுவது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டுமுகமாக நாடளாவிய ரீதியிலான நிகழ்ச்சித்திட்டமொன்றினை அமுலாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

கொழும்பு நகரில் மழைநீர் வழிந்தோடுவதை ஒழுங்கு முறையாக்கல்

கொழும்பு நகரில் இன்றும் காணப்படுவது 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமைவாய்ந்த நீர் வழிந்தோடும் வடிகால் தொகுதியென்பதோடு, அது ஒழுங்கான முறையில் தொழிற்படாததாலும், அரை மணித்தியாலம் தொடர்ச்சியாக பெய்யும் மழையினால் கொழும்பு நகரம் முழுவதும் நீரில் மூழ்கும் நிலை தோன்றியுள்ளதாலும் முறைசாரா விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், கட்டடங்கள் மற்றும் அனுமதியற்ற நிர்மாணிப்புகளினால் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும், கடும் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் கொழும்பு நகர சபையின் ஆளுகைப் பிரதேசத்தினுள் ஏற்படும் வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக மழைநீர் ஒழுங்காக வழிந்தோடுவதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்ட வடிகால் தொகுதிகளை நவீனமயப்படுத்தி, சுத்தம் செய்து ஒழுங்கு முறையாக பேணிவரப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

பின்வரும் பிரேரணை எதிர்க்கப்பட்டது:-

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கான நிவாரணம் அளிக்குமுகமாக சனாதிபதி ஆணைக்குழு

ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தாம் கொண்ட அரசியல் கொள்கை காரணமாக அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்து நிவாரணம் வழங்குவதற்காக பூரண அதிகாரமுடைய சனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"சிறிபாலி வளாகத்தை அரங்காற்றக் கலை பல்கலைக்கழகத்துடன் இணைத்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1836 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூன் 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks