இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை ஊக்குவிப்பதற்கு கடந்த காலத்தில் இலங்கைக்குள் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – ஆசிய பசுபிக் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி உரை

திகதி : 2023-12-09

•    பிராந்திய நாடுகளில் பலமான ஊழல் எதிர்ப்பு சட்டத்தை எம்மால் அறிமுகப்படுத்த முடிந்திருப்பது ஊழலைத் தடுப்பதற்கு நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும் – சபாநாயகர் தெரிவிப்பு
•    உலக அமைதிக்கு இலங்கையின் தற்போதைய நடுநிலையான அணிசேரா வெளியுறவுக் கொள்கை முழு உலகிற்கும் தேவை - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை ஊக்குவிப்பதற்கு பாராளுமன்றத்திற்குள் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் தெரிவித்தார்.

‘பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை ஊக்குவித்தல்’ என்ற தொனிப்பொருளில் உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான ஆசிய பசுபிக் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சர்வதேச மாநாடு கடந்த டிசம்பர் 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சாதகமான செயற்பாடுகள் ஊடாக கொள்கை உருவாக்கத்தை மக்கள் சார்பானதாகவும், நிதி முகாமைத்துவம் உள்ளிட்ட பணிகளை மிகவும் வெளிப்படையாகவும், பொறுப்புணர்வுடனும் நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கான சர்வதேச மாநாட்டுப் பேரவையின் (ISCP) தலைவர், இலங்கையில் ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த மாநாட்டிற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமை தாங்கியதுடன், ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டை உலகளாவிய அமைதி ஒன்றியம் (UPF) மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்களான அமைதிக்கான சர்வதேச மாநாட்டுப் பேரவை (ISCP) மற்றும் அமைதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் (IAPP) ஆகியன இலங்கை பாராளுமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

ஊழலைத் தடுப்பதற்காக கடந்த காலத்தில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது இலங்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். பிராந்திய நாடுகளுக்கிடையே ஊழலுக்கு எதிரான வலுவான சட்டங்களில் ஒன்றாக இதனை அறிமுகப்படுத்த முடியும் என இங்கு உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கான சர்வதேச மாநாட்டுப் பேரவையின் (ISCP) தலைவர், இலங்கையில் ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகையில், பல போர் மோதல்கள் உள்ள சர்வதேச சூழ்நிலையில், போர் மனப்பான்மை கொண்ட சில உலக வல்லரசுகள் நோயுற்ற மற்றும் பட்டினியால் வாடும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். உலக அமைதிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அத்துடன், உலக சமாதானத்திற்காக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நடுநிலையான அதாவது அணிசேரா வெளிநாட்டுக் கொள்கை முழு உலகிற்கும் தேவை எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டில் சபை முதல்வர் அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோருக்கு உலகளாவிய அமைதி ஒன்றியத்தினால் (UPF) 'சமாதானத்திற்கான தூதுவர்' கௌரவ சான்றிதழ் வழங்கப்பட்டன.

இம்மாநாட்டில் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், சபை முதல்வர் அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், உலகளாவிய அமைதி ஒன்றியத்தின் (UPF) தலைவர் கௌரவ கலாநிதி சார்ள்ஸ் எஸ்.யங், அமைதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின்  (IAPP) தலைவர், நேபாள பாராளுமன்ற உறுப்பினர் எக் நத் டகால், உலகளாவிய அமைதி ஒன்றியத்தின் இலங்கைக்கான செயலாளர் கலாநிதி.சூலா சேனாரத்ன உள்ளிட்ட பிராந்தியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்நாட்டின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2

3 4

5 6

7

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom