இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் நியூசிலாந்திலுள்ள இலங்கை சமூகத்திடம் கோரிக்கை

திகதி : 2023-08-03

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பங்களிக்குமாறு இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சமூகத்திடம் கோரிக்கை விடுத்தது.

நியூசிலாந்துக்கு ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியப் பிரதிநிதிகள், நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை அண்மையில் (ஜூலை 28) சந்தித்தபோதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே குறிப்பிடுகையில், தாய்நாடு தற்போது எதிர்நோக்கி வரும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட ஆதரவு வழங்க வேண்டும் என்றார். இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தமது ஒன்றியம் பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், உறுப்பினர்கள் அனைவரும் பொதுவான இலக்குகளுக்காக ஒன்றுபட்டு நிற்கிறார்கள்  எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நியூசிலாந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வம்சாவளியை சேர்ந்த திருமதி வனுஷி வோல்டர்ஸ் அவர்களும் கலந்து கொண்டதுடன், இந்தப் பயணத்திற்கு நியூசிலாந்தை தெரிவு செய்தமை குறித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். நியூசிலாந்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சாதகமான கட்டமைப்புகள் மற்றும் அதற்கான இடங்களைக் கொண்டதாகப் பாராளுமன்ற முறைமை இருப்பதாலும், அந்த நாட்டில் பெண்களின் அரசியல் செயற்பாடுகளை நன்கு புரிந்துகொள்வதன் மூலமும் இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதிலுள்ள நல்ல நடைமுறைகளைப் பின்பற்ற முடியும் என்று வோல்டர்ஸ் தெரிவித்தார்.

ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ  சீதா அரம்பேபொல, கௌரவ ரோஹினீ குமாரி விஜேரத்ன, கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, கௌரவ சட்டத்தரணி தலதா அதுகோரல, கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ முதிதா பிரிஸான்தி, கௌரவ ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ மஞ்சுலா திசாநாயக, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திசாநாயக, பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய உள்ளிட்டோரும் இதன் போது கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இந்த ஆய்வுப் பயணம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) முழுமையான அனுசரணையில் தேசிய ஜனநாயக நிறுவனத்தினால் (NDI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom