இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றம் ஜூலை 18 முதல் 21 வரை கூடும்

திகதி : 2023-07-13

  • இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி
  • ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதி

 

ஜூலை மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கடந்த 07 ஆம் திகதி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, ஜூலை 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. இந்த ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2023 ஜூலை 18 செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை  சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2325/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் (அத்தியாயம் 235) மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2335/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மூன்று ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

2023 ஜூலை 19 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றின் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, தனியார் உறுப்பினர் சட்டமூலமான இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக பிரேரிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஜூலை 20 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதனையடுத்து, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறும்.

2023 ஜூலை 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom