இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மூன்று புதிய குழுக்கள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

திகதி : 2022-11-09

  • வரவுசெலவுத்திட்டம் குறித்த குழுநிலை விவாதத்துக்கான நேரம் பி.ப 7.00 மணிவரை நீடிப்பு
  • பாராளுமன்றத்தைப் பார்வையிட நாளாந்தம் வருகைதரும் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்க தீர்மானம்

 

பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று நிலையியற் குழுக்கள் குறித்து மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க நேற்று (நவ. 08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு ஆகிய மூன்று குழுக்களுமே இவ்வாறு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய வெளிநாட்டு அமைச்சர் கௌரவ அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, கௌரவ எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கௌரவ சாகர காரியவசம் ஆகியோரே இந்த விசேட குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள நிலையியற் குழுக்களான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு), அரசாங்க நிதி பற்றிய குழு ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் இந்தப் புதிய நிலையியற் குழுக்களின் விடயதானங்களுடன் மேற்படுகை செய்கின்றனவா என்பது குறித்து ஆராய்ந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது பற்றிய பரிந்துரைகளை இந்தக் குழு முன்வைக்கும்.

இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி இந்தக் குழுவின் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், 2023ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதத்திற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்து எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குழுநிலை விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை ஒன்றரை மணித்தியாலங்களினால் அதிகரிப்பதற்கும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய வரவுசெலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் நடைபெறும் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 7ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பாராளுமன்ற விவாதங்கள் பி.ப 7.00 மணிவரை நடத்தப்படவிருப்பதுடன், இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய டிசம்பர் 08ஆம் திகதி மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 5.00 மணிக்கும் நடத்தப்படவுள்ளது.

மேலும், நாளாந்தம் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கிளாஸ் பாலை வழங்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய நாளொன்றுக்கு ஆகக் கூடியது பாடசாலை மாணவ மாணவியர் 500 பேருக்கு அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைக்குக் கொண்டுவரவும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom