அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகரை சந்தித்தார்

திகதி : 2022-09-12

Print

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திரு.மார்ட்டின் சுன்கொங் மற்றும் சிரேஷ்ட வேலைத்திட்ட அதிகாரி திருமதி லோரன்ஸ் மார்ஷல் ஆகியோர் நேற்று (12) பாராளுமன்றத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். பொதுமக்கள் பங்களிப்புடன் உறுதியான துறைசார் கண்காணிப்புக் குழுவை அமைத்தல் உட்பட இலங்கைப் பாராளுமன்றத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சாதகமான நடவடிக்கைகள் தொடர்பில் கௌரவ சபாநாயகர் திரு.மார்ட்டின் சுன்கொங் அவர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

தேசிய நலன்களுக்கான கொள்கை ரீதியில் மற்றும் முன்னுரிமை வழங்கவேண்டிய விடயங்கள் தொடர்பில் வழிகாட்டுவதற்காகப் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதலுடன் பாராளுமன்ற தேசிய சபையொன்றை அமைக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்போது சபாநாயகர் தெரிவித்தார். மேலும், சர்வகட்சி அரசாங்கம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சபாநாயகர் கவனம் செலுத்தியதோடு தேர்தல் முறை திருத்தம் மற்றும் 22ஆம் திருத்த சட்டம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பின்னூட்டமளிக்கும்  அதிகாரிகளின் முயற்சிகளையும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் இதன்போது பாராட்டினார். தேசிய அரசியல் விடயங்களில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விசேட தேவையுடைய ஏனைய குழுக்களை பங்குபற்ற செய்வதன் முக்கியத்துவம் தொடர்பில் திரு. மார்ட்டின் சுன்கொங் அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

பிரித்தானியாவில் உள்ள பாராளுமன்ற முறையைப் போன்றதான வெளிப்படை தன்மையுடன்கூடிய ஊடகப் பங்களிப்புடன் பாராளுமன்றத்தை பொதுமக்களுக்கு திறந்து வைப்பது சனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு உதவுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க தசநாயக்க அவர்கள் இதன்போது குறிப்பிட்டார். குறித்த முன்மொழிவை  ஏற்றுக்கொண்ட அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற விடயங்களை மக்களுக்கு தெளிவுப்படுத்துவது அவசியமெனவும், சரியான தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கௌரவ சபாநாயகரின் தாயாரின் மறைவுக்கு அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் இரங்கல் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது விடுத்த அழைப்பிற்கமைய அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் நேற்றுமுன்தினம் (11) இலங்கை வந்தடைந்தார்.

 

1 2

3 4

5 6