உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் சிலர் சபாநாயகருடன் சந்திப்பு |
திகதி : | 2022-07-19 |
|
இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் சிலர் நேற்று (18) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி, நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மிஷேல் அப்லடன், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹோல்டன், அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி, கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பான பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்ட ஆசியாவின் பழமையான நாடு என்ற வகையில் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் பாராளுமன்ற செயற்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார்.
அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை குறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக அவர்கள், இங்கு வருகை தந்திருந்த தூதுக் குழுவினருக்கு விளக்கமளித்தார்.
நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர்கள் பாராட்டியிருந்தனர்.