இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உலகம் முழுவதிலுமுள்ள 170 பாராளுமன்றங்களில் இலங்கை பாராளுமன்றம் உயர்ந்த இடத்தில் - சபாநாயகர் கரு ஜயசூரிய

திகதி : 2020-01-01

உலகம் முழுவதிலுமுள்ள 170 பாராளுமன்றங்களில் இலங்கை பாராளுமன்றம் உயர்ந்த இடத்தில் இருப்பதுடன், இது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான பாராளுமன்றமாக மாறியிருப்பதாகவும் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய தெரிவித்தார்.

 

“நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கம் செயற்படுகிறது. எதிர்வரும் மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னர் புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்ய முடியும். அவ்வாறு தெரிவுசெய்யப்படும் புதிய சபாநாயகர் இந்த முன்னேற்றத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வாரென நம்புகின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

பாராளுமன்றத்துக்குள் சகோதாரத்துவத்தை ஏற்படுத்தி, அனைவரும் ஒரே குடும்பத்தவர் போன்று செயற்படும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சபாநாயகர் பதவிக்கு நான் நியமிக்கப்பட்டபோது இருந்த பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது. கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்கும்போது இது குறித்து திருப்தியடைவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். பிறந்திருக்கும் புத்தாண்டில் பாராளுமன்ற பணியாளர் உத்தியோகபூர்வமாக பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

 

இன்று (01) நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக் கொடியை சபாநாயகர் ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பாராளுமன்ற பணியாளர்கள் அனைவரும் அரசாங்க சேவை சத்தியப்பிரமாணம்/உறுதிமொழியெடுத்துக் கொண்டனர்.

 

தொடர்ந்தும் உரையாற்றிய சபாநாயகர், “நாடு சுதந்திரம் அடைந்து 71 வருடங்கள் ஆகின்றன. இளைஞர்கள் கிளர்ச்சி, அரசியல் முரண்பாடுகள் மற்றும் இன, மத ரீதியான வேறுபாடுகள் காரணமாக நாடு பின்நோக்கிப் பயணித்துள்ளது. நாட்டில் இன, மத வேறுபாடுகளை களைவதன் ஊடாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை நாம் ஏற்படுத்த வேண்டும். இது நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க தஸநாயக்க இந்நிகழ்வில் உரையாற்றுகையில் தேசிய இலக்கை அடைவதற்கு சகல தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன், நாட்டின் முன்னேற்றத்துக்காக பாராளுமன்றம் சிறப்பான சேவையாற்றி வருகிறது என்றார். பாராளுமன்றத்தில் புதிதாக தொடர்பாடல் திணைக்களத்தை உருவாக்க முடிந்துள்ளதுடன், நூல்நிலையத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பிறந்திருக்கும் புதிய வருடம் சவால்மிக்க வருடமாக அமையும் என்றும் சகலரும் ஒன்றிணைந்து இதற்கு முகங்கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வைத் தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இதில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் கௌரவ ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க தஸநாயக்க ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

 

இன்றைய நிகழ்வுகளில் பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான திரு. நீல் இத்தவல பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் (நிர்வாகச் சேவைகள்ம்) திருமதி. குஷானி ரோஹனதீர, உதவி செயலாளர் நாயகம் (சட்டவாக்கச் சேவைகள்ம்) திரு. டிக்கிரி ஜயதிலக, பாராளுமன்ற திணைக்கள பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom